Mar 06

அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் முடிகிறது.
ஆம். நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்,
கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
சியர்ஸ் :)

(கொலைவெறியோடு முறைக்காமல் இந்த மொக்கையையும் பார்த்துவிடுங்கள் ;-) )

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Feb 06

‘டேய் எங்களுக்கும் தான் நாளைக்கு செம் இருக்கு. எதுக்கு இப்போ படிக்கிற மாதிரி சீன் போடற?’‘அடப்பாவிகளா… கிளாஸ் புள்ளயோட மூனு இண்டர்னல் பேப்பர் மட்டும்தாண்டா ஜெராக்ஸ் எடுத்துப் பாத்துட்டு இருக்கேன். இதுவே உங்களுக்குப் பொறுக்கலையா?’

‘புக்க பாத்து மண்ட காயற நாங்கலாம் அப்ப கேணையனுகளா?’

‘மக்கா உனக்கு நாளைக்கு மதியம் தான் எக்ஸாம். எனக்கு காலையில இருக்கு. ச்சும்மா அலப்பறையக் கொடுக்காத’

‘டேய் இவன் ஓவரா பேசறாண்டா. புடுங்குடா அந்த ஜெராக்ச’

ஜெராக்ஸ் பேப்பர்கள் பிடுங்கப்பட்டு, கிழிக்கப்பட்டு ஜன்னலில் பறக்கின்றன.

‘நிம்மதியாடா? படிக்கிறதுக்கு ஒரு மெட்டிரியலும் எங்கிட்ட இல்ல. இப்போ என்னய என்ன பண்ண சொல்றீங்க?’

‘FMல இவரு ஒருத்தர் இனிய இர்ர்ர்ர்ரவில் னு எப்ப பாத்தாலும் அடித்தொண்டையிலேயே கத்திட்டு இருக்காரு. இவருதான் இப்படினா விளம்பரம் போட்றவனுங்க தொல்ல அதுக்கு மேல. ஒரு ரவை, மைதாவுக்கு எத்தன தடவதான் போன் நம்பர் கொடுப்பானுங்களோ… ஒரு பாட்டு ஒழுங்கா போட மாட்டேன்றானுங்கனு நாங்க கடுப்புல இருக்கோம். நீ மட்டும் படிக்கிற மாதிரி சீன் போட்டுட்டு இருந்தா எரிச்சல் வராதா?’

‘சரி விடு. ஒரு ரூபா காயின் இருக்கா?’

‘ம்ம்ம்’

‘எடுத்துட்டு வா’

…..‘ஹலோ **** ரவா மைதா கம்பெனிங்களா?’

‘ஆமாங்க’

‘வணக்கமுங்க… நாங்க சின்னியம்பாளையத்துக்கு பக்கத்துல இருந்து பேசறமுங்க…நம்மூர்ல ரொம்ப வருசமா மழையே இல்லாமப் போயிருச்சுங்க’

‘சரி’

‘மழை பெய்யறதுக்காவ நம்மூரு சடங்கொன்னு பண்ணிறலாம்னு… அதாங்க கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணலாம்னு ஊர்ல கூட்டம்போட்டு முடிவு பண்ணிருக்கோமுங்க.. மொத்தம் ஒரு முன்னூறு, நானூறு பேரு கூடுவாங்க… கல்யாணம்னு சொல்லிட்டு சாப்பாடு போடாம இருக்க முடியுமுங்களா?’

‘சரி…உங்களுக்கு என்ன வேணும்?’

‘சாப்பாடு போட்டா கட்டுபடியாகாதுன்னு அதுக்குப் பதிலா டிபன் போட்டுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்… ஒரு நானூறு பேருக்கு உப்புமா கிண்டனும்னா எவ்வளவு ரவை வேனுங்க?’

‘ஒரு அம்பது கிலோ ஆகுங்க…ஆர்டர் கொடுக்கனும்ங்களா?’

‘ஆமாங்க ஆர்டர் கொடுக்கனும். ஆனா அம்பது கிலோ வேணாம். ஒரு அர கிலோ இருந்தா போதும்’

‘என்னது அர கிலோவா?’

‘ஆமாங்க எங்களுக்கெல்லாம் வேற கம்பெனில வாங்கிட்டோம். ஆனா பொண்ணும், மாப்பிள்ளையும் உங்க கம்பெனி ரவைல தான் உப்புமா சாப்பிடுவோம்னு ஒரே அடம் பண்றாங்கங்க…’

‘நீங்க மொதலாளிகிட்டவே நேரா பேசிக்குங்க… ’

‘ஹலோ… ஹலோ…’

 

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jan 26
“கோ, உன்னதான் இந்த வாரம் தமிழ்மணத்துல நட்சத்திரமா தேர்ந்தெடுத்திருக்காங்களாமே. என்ன சொல்லப் போற?”

“என்னத்தங்க சொல்றது. இது எனக்கு வந்த சோதனையா? இல்ல படிக்கிறவங்களுக்கு வந்த சோதனையானு யோசிச்சுட்டு இருக்கேன்!”

“என்னப்பா? உன்ன மதிச்சு நட்சத்திரமாக்கியிருக்காங்க. நீ இப்படி சொல்ற”

“அய்யயோ. நான் தப்பா எதுவும் சொல்லலங்க. எப்பவும் நான் பாட்டுக்கு ஒரு ஓரமா கண்ணே, மணியே னு கவுஜ மட்டும் எழுதிகிட்டு இருந்தேன். அத மட்டும் படிக்கிறவங்கப் படிச்சுட்டுப் போயிடுவாங்க. நட்சத்திரமாகிட்டா இன்னும் கொஞ்சம் அதிகமா வந்து வாசிப்பாங்களே. இந்த வாரமும் எப்பவும் போல அன்பே, ஆருயிரே னு எழுதினா புதுசா படிக்க வர்றவங்களுக்கும் ஏமாற்றம்தான். வேற எதாவது எழுதலாம்னு பார்த்தா எனக்கு ஓரளவுக்குத் தெரிஞ்சதே அது மட்டும்தான். அதான் அப்படி சொன்னேன்”

“இந்தப் பதிவுக்கு மட்டும் “நட்சத்திர வாழ்த்துகள்” அப்படினு அதிகமா கொஞ்சம் பின்னூட்டம் வரும். அதுக்கு இத்தன பில்டப்பா? சரி அத விடு… நீ(யெல்லாம்) எதுக்கு வலைப்பதிவ ஆரம்பிச்ச?”

“இணையத்துல இலவசமா கிடைக்குதுன்னு சொன்னாங்க. சரினு ஒன்ன ஆரம்பிச்சுட்டேன் ;-) அது வந்துங்க, என்னோட கல்லூரி காலத்துல எப்பவுமே படிக்கிறதுக்கு ஏதோ ஒரு புத்தகம் (ஓசில தான்) கெடச்சுடும். படிக்க, கும்மியடிக்க னு என்ன மாதிரியே உருப்படாததுங்க எல்லாம் ஒன்னாவே சுத்துவோம். பொழுதும் போச்சு. கல்லூரி முடிச்சுட்டு வேலைல சேர்ந்தபின்னாடி ஒரு நாலு மாசம் பயிற்சின்னு சொல்லி மைசூர்ல சக்கையாப் பிழிஞ்சாங்க. அடுத்த நாலு மாசம் வேலையே கொடுக்காம கொல்ட்டி தேசத்துல சும்மா உட்கார வச்சிட்டாங்க. படிக்கிறதுக்கும் ஒன்னும் கிடைக்கல. கூடவும் நம்ம கூட்டாளிப் பயலுக ஒருத்தனும் இல்ல. சும்மா இருந்த நேரத்துல இணையத்துல மேஞ்சப்பதான் தமிழ்மணம், இ-கலப்பை எல்லாம் அறிமுகமாச்சு. ஒரு பக்கம் பதிவுகளுக்கு வாசகனா இருந்துகிட்டே, இன்னொரு பக்கம் +2 காதல், காதல் பயணம் னு கதைகள எழுதி நம்ம கூட்டாளிகளுக்கு மட்டும் மடல்ல அனுப்பிக்கிட்டு இருந்தேன். அதுல ஒரு ரணம்விரும்பி, இதையெல்லாம் வலைப்பதிவுல போட்றா மச்சான்னு உசுப்பேத்த (அவனத்தான் தேடிட்டு இருக்கீங்களா? கூட்டாளிய காட்டிக் கொடுக்கமாட்டோம்ல ;-) ) ஒரு சுபயோக சுபதினத்துல நானும் வலைப்பதிய ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஓடிப்போச்சு. இதுதாங்க நான் வலைப்பதிய ஆரம்பிச்சதோட வரலாறு, புவியியல் எல்லாம்”

“அது சரி. ஒரே விசயத்த மட்டும் திரும்ப திரும்ப எழுதறயே. உனக்கே சலிக்கல?”

“என்னப் பண்றது வேற எதுவும் எழுதத் தெரியலையே :(

“ப்ரொஃபைல்ல உன்னோடப் படத்தப் போடாம, காதல் னு எழுதி வச்சிருக்கியே நீயென்னா லூசா?”

“கி..கி..கி… நான் வலைப்பதிவ ஆரம்பிச்சப்போ கருப்பு நிறத்துலதான் பின்னணி நிறம் வச்சிருந்தேன். அதுல என்னோட புகைப்படத்தயே போட்டிருந்தா கண்டிப்பா என் முகம் தெரிஞ்சிருக்காதுங்க. அதனாலதான் அப்போதைக்கு கருப்பு பின்னணியில வெள்ளைல எழுதியிருந்தது பிடிச்சிருந்ததால அத வச்சேன். அப்புறம் தமிழ்மணத்துல வரும்போது புகைப்படமும் தெரியுமாம்ல. சரி ‘காதல்’ னு இருந்தா நெறைய பேர் வாசிப்பாங்கனு பாத்தா அந்த வார்த்தைய பார்த்ததும் தெறிச்சு ஓடினதுதான் நெறைய பேர்னு நெனைக்கிறேன். ஆனா அந்தப் படத்துனால என்ன காதல் கவுஜன் னு கொஞ்சம் பேர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அது வேற விசயம் ;-)

“இப்போ மட்டும் எதுக்கு உன்னோட புகைப்படத்த போட்டுட்டியாம்?”

“இந்த வாரம் நீ நட்சத்திரமாகிட்டதால உன்னோட வலைப்பதிவுக்கு நெறைய திருஷ்டி வர வாய்ப்பிருக்கு. அதப் போக்கனும்னா வலைப்பதிவோட மூலைல ஒரு திருஷ்டி பொம்மைய தொங்கவிடுன்னு சிவல்புரி சிங்காரம் தனி மடல்ல கேட்டுகிட்டாரு. அதான் :-)

“சரி சரி இந்த வாரமாவது வழக்கமாப் போட்ற மொக்க கவுஜைய விட்டுட்டு உருப்படியா எதாவது எழுது”

“உருப்படியா எழுத முயற்சி பண்றேன். ஆனா கவுஜ எழுதலன்னா எனக்கு மனசு நடுங்குமே”

“உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா”

“கி..கி..கி…நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே”

“கண்ணாடியப் போயிப் பாரு”

—-

ஆரம்பமே படு மொக்கையா இருக்கா? அப்படின்னா இதப் பாருங்க!

அடுத்த நட்சத்திரப் பதிவு மாலை நான்கு மணிக்கு ;-)

 

written by அருட்பெருங்கோ \\ tags:

Dec 21

தலைப்ப பார்த்ததும் யாரும் திட்ட வந்துடாதீங்க. பேர் வைக்கிறதுக்காக நம்ம மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க. காங்கேயம் பக்கத்துல ஒரு டீக்கடையோட பேரு ‘அடேங்கப்பா’ டீஸ்டால். ஒரு தடவை மதுரை போற வழியில ‘திடீர் உணவகம்’னு ஒரு கடை பார்த்தேன். ஹைதரபாத் வந்த பின்னாடி இந்த மாதிரி பேரெல்லாம் சாதாரணம்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. சென்னைல ஒரு டைடல் பார்க், பெங்களூருல ஒரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மாதிரி இங்க ‘ஹைடெக் சிட்டி’ னு ஒன்னு இருக்கு. அதோட தாக்கம் அதிகமாகி நெறைய இடங்கள் ல பார்த்தா ‘ஹைடெக் சலூன்’, ‘ஹைடெக் ரெஸ்டாரண்ட்’, ‘ஹைடெக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ னு ஹைதராபாத்தே இப்போ ஹைடெக் மயமாகிட்டு வருது :) . படத்துக்கு பேரு வைக்கிறதுலையும் இங்க ஒருத்தர் கலக்கறார். ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் தான். ‘எவனா இருந்தா எனக்கென்ன?’ னு ஒரு படம் வந்து பட்டயக்/பயத்த கிளப்புச்சாம். சமீபத்துல கூட ‘உடம்பு எப்படியிருக்கு’னு ஒரு படம் வந்துச்சே! அப்புறம் ஹைதராபாத் பிரியாணிக்கு பேர் போன ஊருங்க… எந்தளவுக்குன்னா, இங்க ஒரு தெலுங்கு பண்பலைல ஒரு இரவு நிகழ்ச்சியோட பேரு – மிட்நைட் பிரியாணி :)

*

முன்னலாம் தெலுங்குப் படம் பார்த்தா நக்கல் பண்ணிட்டே பார்க்கிறதுக்கு நல்லாருக்கும். அதுக்காகவே வாரம் ஒரு படம்னு குறி வச்சு பாத்துட்டு இருந்தோம். ( ஆனா அதுவே பழக்கமாகி இப்போ என்னையே அறியாம தெலுங்குப் படத்த ரசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு பயம் வந்துடுச்சுங்கறது வேற விசயம் ) போன மாசம் விஜயதசமினு ஒரு படத்துக்கு நண்பன கூப்பிட்டப்போ அவன் வர முடியாதுனு சொல்லவும் சரி சிங்கம் சிங்கிளாதாண்டா போகும்னு நான் மட்டும் போய் அசிங்கமானதுதான் மிச்சம். அந்த போஸ்டர்ல அந்த ஹீரோ(?) பட்டாச சுத்தினப்பவே நான் புரிஞ்சிருக்கனும். அது ‘சிவகாசி’யோட ரீமேக். விஜய் படத்த எல்லாம் போஸ்டர்ல கூட பாக்கக்கூடாதுனு தீர்மானம் பண்ணி வச்சிருந்தவன, அத தெலுங்குல ரீமேக் பண்ணி தியேட்டர்ல வந்து பாக்க வச்சிட்டாங்க. அடுத்தவாரம் ஸ்டேட்ரவுடி னு ஒரு படம் வந்துச்சு. சரி பேர்லையே ஒரு டெரர் இருக்குதே, இது பக்கா தெலுங்குப் படமாதான் இருக்கும்னு நெனச்சு, தூக்கம் வருதுனு சொன்ன நண்பனையும் இழுத்துட்டுப் போனா அது நம்ம ‘எதிரி’யோட ரீமேக் :( விக்ரமாதித்யன் மாதிரி நானும் விடாம அடுத்த வாரமும் போனேனே டக்கரி னு ஒரு படத்துக்கு! படம் பேரே டக்கரா இருக்குதுல்ல? ஆனா பாருங்க அதுவும் நம்ம ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தோட ரீமேக். இவ்வளவு டேமேஜான பின்னாடியும் தெலுங்குப் படம் பாக்க போறதுக்குக் காரணம் ‘கோதாவரி’ புகழ் சேகர் கம்முலாவோட சமீபத்திய ‘ஹேப்பி டேஸ்’, சண்டை, தனி காமெடி ட்ராக் எதுவும் இல்லாம, வந்த சுமாரான திகில் படமான ‘மந்த்ரா’ மாதிரியான படங்கள் தான்!

*

கொஞ்ச நாள் முன்னாடி பெங்களூர்ல இருந்து சேலத்துக்குப் போறதுக்கு புதுசா விட்டிருக்கிற தமிழ்நாடு பேருந்துல ஏறினேன். காசு அதிகம் தான். சரி சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடுவாங்கன்னு அதுல ஏறிட்டேன். ஓசூர் தாண்டறதுக்குள்ள 15 பேருந்து, 23 லாரி, கணக்கு வழக்கு இல்லாம காருங்கனு எங்க பேருந்த முந்திகிட்டு போய்கிட்டு இருக்கு. கண்டக்டர்கிட்ட கேட்டேன் ‘அண்ணே 60 ரூவா கூட வாங்குறீங்களே கொஞ்சம் வேகமா போகக்கூடாதா? டவுன் பஸ்செல்லாம் முந்திகிட்டு போகுதே’ அப்படின்னு. அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? ‘தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது! நம்ம வண்டி சொகுசாதான் போகும். வேகமா எல்லாம் போகாது’ னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் நான் எதுவும் பேசாம சன்னல்ல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன் :(

*

அதேமாதிரி தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போது சேலத்துல இருந்து கரூர் பேருந்துல ஏறி, இடப்பக்கம் இருக்கிற ரெண்டு பேர் இருக்கைல தனியா உட்காந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு ஏறின ஒரு ஒன்பதாவது/பத்தாவது படிக்கிற பொண்ணும் அவங்க அம்மாவும், உட்கார இடமில்லாம பாத்துட்டே இருந்தாங்க. அந்த பொண்ணு தனியா உட்காந்திருந்த என்ன பார்த்து, பக்கத்து இருக்கைல மாறி உட்கார சொல்லிட்டா. எனக்கு ஒரே வருத்தமா போயிடுச்சு. இடம் மாறி உட்காரனுமேங்கறதுக்காக இல்ல; என்னை அந்த பொண்ணு அப்படி கூப்பிட்டதாலதான். அட ‘அண்ணா’ னு கூப்பிட்டிருந்தா கூட சந்தோசப் பட்டிருக்கலாம். ‘அங்கிள்’ னு கூப்பிட்டுட்டாளே. இந்த கண்ணாடிய கழட்டிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்கி தொடாமலே வச்சிருக்கிற காண்டெக்ட் லென்சதான் இனிமே போடனும்!

written by அருட்பெருங்கோ \\ tags:

Nov 04

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே… நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல ;-)

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் ‘ஆவன்னா திருஞானம்’னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு ‘முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்’னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(

இன்னொரு பாட்டி வந்தாங்க. ‘யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு’னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். ‘தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?’ னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் ‘ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு’னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. ‘பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது…’ னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன… உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? ‘இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்’னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ;-) ஆனா விட்டுட்டேன்…

இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)

written by அருட்பெருங்கோ \\ tags: , ,