முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
written by அருட்பெருங்கோ
\\ tags: முத்தம், காதல்
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
*
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
*
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
written by அருட்பெருங்கோ
\\ tags: பார்வை, முத்தம், காதல், கவிதை
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
written by அருட்பெருங்கோ
\\ tags: நிலா, முத்தம், காதல்
இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.
*
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
*
ஒரு ‘முத்தக்கவிதை‘ கேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?
*
பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?
*
முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?
written by அருட்பெருங்கோ
\\ tags: முத்தம், காதல்
அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.
*
கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.
*
“ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.
*
கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.
*
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”
written by அருட்பெருங்கோ
\\ tags: முத்தம், காதல்
Recent Comments