Jul 30

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது…’நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்’

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Jun 16

இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் :)

Get the Flash Player to see this player.

written by அருட்பெருங்கோ \\ tags:

Jun 15
jananibw.jpg jananinew.jpg

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,

May 29

காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல எதுவும் மிச்சம் வைக்கக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு அக்காவும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ஜனனி, உப்புமாவை உருண்டை உருண்டையாக உருட்டி, அக்கா குனியும்போது, பக்கத்திலிருந்த நாற்காலிக்கு அடியில் உருட்டிவிட ஆரம்பித்தாள். நான்காவது உருட்டலில் இதனைக் கவனித்து விட்ட அக்கா, நாற்காலிக்கடியில் நான்கு உப்புமா உருண்டைகளைப் பார்த்ததும், ஜனனியைப் பார்த்து முறைத்தார். சற்றும் தாமதிக்காமல் ஜனனியிடமிருந்து பதில் வந்தது – ‘அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்!’

*

அக்கா : ‘வெயில் காலத்துல தண்ணி ஜில்லுனு குடிக்காத பாப்பா’

ஜனனி : ‘அப்போ night காலத்துல?’

*

அக்கா : ‘துணி தேய்க்கறவங்களே ரெண்டு நாளா வரல. தொவச்ச துணியெல்லாம் அப்படியே இருக்கு’

மாமா : ‘அவங்க வரலன்னா, முன்னாடியிருக்கிற கடைல கொடுக்க வேண்டியதுதான’

ஜனனி : ‘ஐயோ, ரெண்டு பேரும் ஏன் இப்படி வம்பு பண்றீங்க? Iron box மேல தான இருக்கு. எடுத்து தேய்ங்களேன்!’

அக்காவும், மாமாவும் கப்சிப்.

*

ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’

நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’

ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’

*

அக்கா : ‘குட்டி, இவளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதுல இருந்த எப்போ பாத்தாலும் அந்த tom & jerry CD யே போட்டு பாத்துட்டு இருக்கா. Tom & jerry பைத்தியமாவே ஆகப்போறான்னு நெனைக்கிறேன்’

அக்காவிடமிருந்து செல்பேசியைப் பிடுங்கி ஜனனி சொன்னாள் – ‘மாமா, அம்மா எப்போ பாத்தாலும் சீரியலே பாத்துட்டு இருக்காங்க. சீரியல் பைத்தியமாவே ஆகப்போறாங்க’

*

கடந்த வாரம் குடும்பம் மொத்தமும் சென்னையில் இருந்த போது ஜனனிக்கு தூக்கம் வருகிற நேரம் மட்டும் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். பின்ன என்னங்க? கத சொன்னா தூங்கனும். திரும்ப திரும்ப கதையே கேட்டுட்டு இருந்தா? அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். அவளுக்கு கரடிக்கதை சொல்லிட்டே வந்து தூக்கத்துல சுந்தரா ட்ராவல்ஸ் ஓட்ட ஆரம்பிச்சுட்றேன். முதல் கத சொல்லும்போது ஒவ்வொரு வரிக்கும் ‘அப்பறம் மாமா’ ன்னு கேட்டுட்டே வருவா. கொஞ்ச நேரத்துல அது ‘அப்பறம்’ னு சுருங்கும். இன்னும் கொஞ்சம் கதை ஓட்டினோம்னா, அந்த ‘அப்பறமும்’, ‘ம்ம்ம்’ னு சின்னதாகிடும். அப்புறம் நாந்தான் கத சொல்லிட்டே இருப்பேன் அவகிட்ட இருந்து சத்தமே இருக்காது. மெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். அடுத்து அவளுக்கு சொல்றதா வாக்கு கொடுத்திருக்கிற கதையோட பேரு – ‘அஞ்சு தல யான முட்டக் கத’. உங்களுக்கு யாருக்காவது இந்த கதை தெரியுமா?

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jan 30

என்னுடைய தீபாவளிப் பதிவுகளைப் படித்துவிட்டு “நீங்க எழுதற கவிதைகளவிட கவித்துவமானது, ஒரு குழந்தை, அதுவும் பெண்குழந்தை வளர்வதை அருகிலிருந்து ரசிப்பது” அப்படின்னு ஒரு தோழி சொன்னாங்க. உண்மைதான். குழந்தைகளின் குறும்பும், ரகளையும் அருகிலிருந்து அனுபவிப்பதைவிட சுகமானது வேறென்ன? ஊரிலிருக்கும் சொற்ப நாட்களில் அக்கா மகள் ஜனனியின் குறும்புகளை வீடியோ/புகைப்படங்களாக எடுத்துவைத்தாலும், எழுத்தில் கொஞ்சம் பதிவுசெய்துகொண்டால், பின்னால் வாசிக்க அவளுக்கொரு மலரும் நினைவாக இருக்கட்டுமென்று இந்தப்பதிவு!

நான் : ஜனனி தமிழ் படிக்கலாமா?
ஜனனி : நீ சொல்லிக் குடு மாமா (புத்தகத்தோடு வருகிறாள்)
நான் : அ – அம்மா
ஜனனி : நல்லா சொல்லிக் குடு மாமா
நான் : நல்லாதான பாப்பா சொல்லிக் குடுக்குறேன்? அ – அம்மா (நன்றாக இடைவெளிவிட்டு சொல்கிறேன்)
ஜனனி : அப்படி இல்ல மாமா …. அ for அம்மா

(a for apple சொல்லிக் கொடுத்தபின்னாடி தமிழ் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் )

***

முதல் நாள் pre kg வகுப்புக்கு போய்வந்தவளிடம்
அக்கா : பாப்பா உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?
ஜனனி : ம்ம்ம் நல்லாருக்கும்மா… லேடர் வச்ச சறுக்கல் எல்லாம் இருக்கும்மா
அக்கா : மிஸ்ச புடிச்சிருக்கா? மிஸ் கிட்ட நல்லாப் பேசினியா?
ஜனனி : அந்த மிஸ் நல்லாவே இல்லம்மா
அக்கா : என்னது நல்லாவே இல்லையா?
ஜனனி : வயசான மிஸ்சா இருக்காங்கம்மா…

(அடிப்பாவி)

***

அக்கா : ஊஞ்சல்ல இருந்து எறங்கு, இது என் தம்பி எனக்கு வாங்கிட்டு வந்தது.
ஜனனி : இது எங்க மாமா எனக்கு வாங்கிட்டு வந்தது போம்மா
அக்கா: எனக்குதான் என் தம்பி வாங்கிக் கொடுத்தான்.எறங்குறயா இல்லையா?
ஜனை : உனக்கு வேணும்னா உங்க மாமாகிட்ட போய் வாங்கிக்க போம்மா

(அதற்கு மேல் என்னப் பேச?)

***

டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக்கொண்டு இருக்கும்போது,
நான் : ஜனனி, அந்த வெள்ளப் பூனை உன்ன மாதிரியே இருக்குல்ல?
ஜனனி : ம்ம்ம்….நீதான் அந்த கருப்புப் பூனை.
அக்கா : (கோபத்துடன்) ஏய், யாரடி கருப்புனு கிண்டல் பண்ற?
ஜனனி : (கூலாக, டிவியில் இருந்து முகத்தைத் திருப்பாமல்) உங்க தம்பியதாம்மா!

(கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதுன்னா இது தானா?)

***

அவள் அடம்பண்ணிய ஒரு சமயத்தில், அவளை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு,
நான் : சரி ஜனனி, நான் ஹைதராபாத் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்.
ஜனனி : ச்சும்மா இது பண்ணாத மாமா
நான் : எது பண்றேன்?
ஜனனி: பந்தாதான்!

(எத்தன தடவ பல்பு வாங்கினாலும் எனக்கும் புரியவே மாட்டேங்குது)

***

அவளுக்கு முடி வெட்டப் போன சலூனில்,
முடிவெட்டுபவர் : எந்த மாதிரிங்க வெட்டலாம்
நான் பதில் சொல்வதற்கு முன்பே,
ஜனனி : எனக்கு நீளமா வளர்ற மாதிரி வெட்டி விடுங்க
முடிவெட்டுபவர் : ???

அங்கே தலைக்கு ‘டை’யடித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,
ஜனனி : மாமா, அந்தத் தாத்தா தலைலேயே ட்ராயிங் வரையறாங்க (சிரித்துக்கொள்கிறாள்)
தலைக்கு ‘டை’யடித்துக் கொள்பவரும் கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டார்.

***

அவளுக்கு ஒரு சிறிய குடை வாங்கிக் கொடுத்து,
நான் : தினமும் இத ஸ்கூலுக்கு எடுத்துப் போயிட்டு, வரும்போது மழை பேஞ்சுதுன்னா பிடிச்சுக்கனும் சரியா?
ஜனனி : அம்ப்ரல்லா எடுத்துட்டுப் போனா மிஸ் திட்டுவாங்க மாமா. நான் எடுத்துட்டுப் போக மாட்டேன். அம்மாதான் கொண்டு வரனும்.
நான் : மழ பேஞ்சா மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டுதான் பாப்பா வருவாங்க. அதனால உன்னலாம் திட்டமாட்டாங்க.
ஜனனி : மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டு வரமாட்டாங்க!
நான் : அப்பறம் எப்படி வருவாங்க?
ஜனனி : புடவ கட்டிட்டு வருவாங்க!

(கேள்வி தப்பா? பதில் தப்பா?)

***

அக்கா : நேஷனல் பேர்ட் என்ன?
ஜனனி : பீக்காக்
அக்கா : நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : ( முழிக்கிறாள் )
அக்கா : ப்ளவர் னா என்ன?
ஜனனி : பூ
அக்கா: ம்ம்ம் நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : அத்திப்பூக்கள்

(சன்டிவி சீரியல் வாழ்க)

***

கண்கொட்டாமல் கோலங்கள் சீரியலைப் பார்த்துக்கொண்டிருந்தவளிடம்,
நான் : என்னக்கா இப்படி பாத்துகிட்டு இருக்கா?
அக்கா : அவதான் பொறந்ததுல இருந்து என்கூட சேர்ந்து பாக்கறாளே…
நான் : ஜனனி, அவன் யாரு?
ஜனனி : அவந்தான் ஆதி. அவன் கெட்டவன். எல்லாரையும் மெரட்டிட்டே இருப்பான்.
நான் : இது யாரு?
ஜனனி: அவந்தான் தொல்காப்பியன். அவன் நல்லவன். எப்பவும் உண்மையேதான் பேசுவான்.

(கவனிக்கும் திறனை வளர்க்கிறதா? இல்லை டிவிக்கு அடிமையாக்குகிறதா இந்த சீரியல்)

***

பள்ளி விட்டு வரும்போது,
ஜனனி : ம்மா உன்னையும் தாத்தா வந்து ஸ்கூல்ல விடுவாங்களா? அம்மாச்சி வந்து கூட்டிட்டு வந்தாங்களா?
அக்கா : இல்ல பாப்பா நான்லாம் தனியாதான் போயிட்டு வந்தேன்.
ஜனனி : யாருமே உன் கூட வரலியாம்மா? தனியாவேதான் போனியா? (கண் கலங்குகிறது)
அக்கா : ஆமாப் பாப்பா.
ஜனனி : சரிம்மா. நீ பாப்பாவா ஆகி ஸ்கூலுக்குப் போ, நான் பெருசா, அம்மா ஆகி உன்ன வந்து ஸ்கூல்ல கூட்டிட்டு வர்றேன்.

(உட்காந்து யோசிப்பாளோ?)

***

திருப்பூரில் இருந்து கரூர் கிளம்பும்போது,
அக்கா : உன்னோட ட்ரஸ் எல்லாம் எடுத்து பைல வை பாப்பா.
ஜனனி : (அவசரமாக ஒரு பொம்மைத் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைக்கிறாள்)
அக்கா : இத எதுக்குடி எடுத்து வைக்கிற?
ஜனனி : ரவுடிங்க வந்தா நான் உன்னக் காப்பாத்தனும்ல?

(தமிழ் சினிமா வாழ்க)

***

பள்ளியில் சேர்ந்த முதல் வாரத்தின் ஒரு நாளில்…
மிஸ் : எல்லாரும் டைரி கொண்டு வந்து வைங்க!
ஜனனியைத் தவிர எல்லோரும் வைக்கிறார்கள்.
மிஸ் : எல்லாரும் வச்சாச்சா? இன்னும் யாரோ ஒருத்தங்க வைக்கலியே? யாரது.
ஜனனி : மெதுவாக எழூந்து போய் டைரியை நீட்டுகிறாள்.
மிஸ் : இவ்வளவு நேரம் கேட்டேன்ல… ஏன் வந்து வைக்கல?
ஜனனி (அக்காவிடம் சொல்வது போலவே) : அதான் இப்போ கொண்டு வந்து தர்றேன்ல?
மிஸ் : என்னது?
ஜனனி : (பவ்யமாக) அதான் இப்போ தர்றேன் இல்லைங் மிஸ்?

( மிஸ்சும் சிரித்து விட்டாராம்)

written by அருட்பெருங்கோ \\ tags: