நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா?
உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி!
தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!
குளிர்வேலிக்குள் இருப்பதாய் உணர்கிறேன்.
கண்ணுக்கு மையை
அதிகமாய் தீட்டிவிட்டாயோ?
செல்பேசியில் எனது பேச்சு
இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.
இதயத்திலிருந்து வருவதால்
‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!
written by அருட்பெருங்கோ
\\ tags: செல்பேசி, மழை, காதல்
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
written by அருட்பெருங்கோ
\\ tags: பிரசவம், காதல், கவிதை
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
written by அருட்பெருங்கோ
\\ tags: முத்தம், காதல்
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
*
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
*
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
written by அருட்பெருங்கோ
\\ tags: பார்வை, முத்தம், காதல், கவிதை
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
written by அருட்பெருங்கோ
\\ tags: நிலா, முத்தம், காதல்
Recent Comments