
பொங்கல் வாழ்த்து
வழக்கமாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.
காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் – ‘பொங்கல் வாழ்த்து’
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!
written by அருட்பெருங்கோ
\\ tags: பொங்கல், வாழ்த்து, கவிதை
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
written by அருட்பெருங்கோ
\\ tags: பிரசவம், காதல், கவிதை
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
*
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
*
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
written by அருட்பெருங்கோ
\\ tags: பார்வை, முத்தம், காதல், கவிதை
ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.
*
ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது…
ஆனை சவாரிப் போக!
written by அருட்பெருங்கோ
\\ tags: கவிதை, குழந்தை
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.
எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.
உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?
*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.
written by அருட்பெருங்கோ
\\ tags: கவிதை
Recent Comments