சிகரெட் முதல்
கடல் குளியல்
ECR பயணம்
பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை
உனது பயங்களுக்கு அடிபணிந்து
எனது விருப்பங்களையெல்லாம்
உனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இறுதியில்… என் காதலையும்!

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

*

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

*

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.

*

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

*

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.

*

என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?

*

என் சொற்களுக்கும்
உன் மவுனத்திற்குமான இடைவெளியில்
புதைக்கப்பட்டது நம் காதல்.

*

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்.

*

இரவுதோறும் வரும்
பகல் கனவு நீ!

***

வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல், கவிதை மாதிரி பெண் – இந்த கிளிஷேக்கள் எல்லாம் சலித்துப்போனாலும் சில உவமைகள் காலம் கடந்தும் நிற்கின்றன. பொருட்களை உவமையாக காட்டுவதைக் காட்டிலும் நிகழ்வுகளை உவமையாகக் காட்டுவது கவித்துவத்தோடு இருப்பதாகப்படுகிறது.

குறுந்தொகையில் பிரிவுத்துயரைச்சொல்லும் ஒரு பாடலில் வரும் உவமை :

‘மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று அலப்பென்’

மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடும் தனிமை/வெறுமை நிறைந்த வீட்டைப்போல தனிமையில் வாடுவதாக தலைவி வருந்துகிறாள்.

அணில் விளையாடுவது பெரிய உவமையா? எனத் தோன்றக்கூடும். ஆனால் அணிலின் இயல்பு மக்கள் இருக்குமிடங்களில் நெருங்காமல் இருப்பதுதான். அத்தகைய அணில் முற்றத்தில் துள்ளி விளையாடுகிறது எனும்போது மக்கள் இல்லாமல் அந்த வீடு நெடுங்காலம் வெறுமையாகக் கிடக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கரூரில் நாங்கள் கடந்த ஆண்டு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகும் சில பொருட்கள் மட்டும் பழைய வீட்டிலேயேக் கிடந்தன. அடுத்து யாரும் குடி வராத அந்த அரசு குடியிருப்புக்கு ஒரு மாதம் கழித்து சென்ற போது இந்த சங்க காலத்துப் பாடலில் வரும் உவமை நிகழ்வு அங்கு கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருந்தது. சமையலறை அடுக்குகளில் பிறந்த குழந்தையின் பிஞ்சுக்கரம் போல மென்மையான கூடு கட்டிக்கொண்டு அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன. எங்கள் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அணில்களின் வீட்டை அணில்களிடமே விட்டுவிட்டுத் திரும்பினோம். அன்று, அந்த அழகான உவமை, அழகான காட்சியாகியிருந்தது.

இந்த பாடலின் ஆசிரியர் பெயர் தெரியாததால் இந்த உவமையாலேயே ‘அணிலாடு முன்றிலார்’ என அவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள்!

குறுந்தொகை – பாலைத்திணை – பாடல் எண் 41

காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் – தோழி! – அவர் அகன்ற ஞான்றே.

- அணிலாடு முன்றிலார்

(எனக்குத் தெரிந்த) பொருள் :

காதலன் அருகிலிருக்கும்பொழுது, திருவிழா நடக்கும் ஊரைப்போல பெரிதும் மகிழ்ந்தேன். அவன் விலகிய நாளில், நெறி நிறைந்த நல்லவர் வாழும் ஊரில், மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடுகிற துயரமான வீட்டைப்போல தனிமையால் அழகழிந்து வாடுகிறேன்.

நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.

*

நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.

*

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

*

நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*

நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

*

தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.

பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.

பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.

இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.

எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD