Dec 05

நீ கடந்த பாதையெங்கும்

சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்

உன் கூந்தல் உதிர்த்த‍வையா?

உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

 

உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

கொதிப்புடன் வருகிறது வெயில்.

வெயிலிலிருந்து உன்னைக் காக்க

மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.

இரண்டுக்கும் ப‌ய‌ந்து

உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

 

தொலைதூர பயணங்களில்

காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

செல்பேசி உரையாடல்களை

கனவின் அலைவரிசையில்

தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!

 

குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.

கண்ணுக்கு மையை

அதிகமாய் தீட்டிவிட்டாயோ?

 

செல்பேசியில் என‌து பேச்சு

இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.

இதயத்திலிருந்து வருவதால்

‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Nov 17

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

written by அருட்பெருங்கோ \\ tags:

Oct 01

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Aug 07

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

*

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jul 29

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*

 

இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

 

*

 

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.

 

*

 

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!

 

*

 

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,