Jan 13

பொங்கல் வாழ்த்து

வ‌ழக்க‍மாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.

காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் – ‘பொங்கல் வாழ்த்து’

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Oct 01

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Jun 10

ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.

*

ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது…
ஆனை சவாரிப் போக!

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jun 09

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.

written by அருட்பெருங்கோ \\ tags:

Jun 06

பைக் ஓட்டிக்கொண்டிருந்த கணவன்,
சாலையோரத்தில் கையில் கம்புடன்
கயிறு மீது நடந்த சிறுமியை
ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
பின்னாலிருந்த மனைவி
அலட்சியமாய்த் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த வேகத்தடையில் விழுந்துவிட நழுவும்
தூங்கியக் குழந்தையுடனும்,
பிக்பஜாரில் வாங்கிய பொருட்களுடனும்,
காற்றில் பறக்கும் புடவை பிடித்து
பின்தொடரும் வாகனப் பார்வையிலிருந்து
இடது மார்பை மறைத்துக்கொண்டே வருவதை விடவா
பெரிய சாகசம்?

written by அருட்பெருங்கோ \\ tags: