முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

war1_0.jpg war2.jpg
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD