Kaadhal Koodam 3


ஆசிரியரில்லாப் பொழுதுகளில்
சதுரத்தில் சிறைபட்ட
சிறு நகரமென வாழ்கிறது
நம் வகுப்பறை.
பெர்மா தேற்றம்*, E=mc2, சவ்வூடு அழுத்தம் **
என தாவணியணிந்த கல்விக்கூடம் போல
புத்தகத்தோடு போரிடும் சில ‘சரஸ்வதி’கள்.
கொய்யா, கடலை, பட்டாணி, நாவல்பழமென
ஒரு சாப்பாட்டு ராமனின் மேசைக்கடியில்
ரகசிய உணவகம் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

திரைப்படம், ஊர்க்கதை, அரட்டையென
வாய்க்குள் கச்சேரி கட்டி
ஒலிபெருக்கிக் கொண்டிருப்பாள் ஒரு முத்துப்பேச்சி.

விகடன், சாண்டில்யன், ராஜேஷ்குமாரென
மேசைக்கடியில் நூலகம் திறந்திருப்பான்
கண்டதையும் படிக்கும் ஒரு பண்டிதன்.

ஆளுக்கொரு பாட்டு கேட்க, மேசையில் தாளமிட்டபடி
நேயர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்
வானொலி நிலையமாக மாறிய ஒரு இளையராஜா.

இவர்களுக்கு மத்தியில்,
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.

தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்.

இருபுறமும் வீடுகள் அடைத்த வீதியாய்
நடுவில் கிடக்கிறது நீண்ட இடைவெளி.
இடப்பக்க முதல் மேசையில் வலது ஓரமாய் நீ.
வலப்பக்க இறுதி மேசையில் இடது ஓரமாய் நான்.

உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.

நோக்கம் எதுவுமின்றி
மயில் போல மெதுவாய்த்தான்
பின்புறம் திரும்புவாய்.
ரயில் போன தண்டவாளமாய்
தடுமாறும் என் பார்வைகள்.
காற்றில் அங்கங்கே புள்ளிவைத்து விட்டு
ஏட்டில் கோலமிட ஆரம்பிக்கும் என் விழிகள்.

அடுத்த வகுப்புக்கான மணியடிக்கிறது.
தமிழய்யா நுழைந்ததும்
உணவகம் முதல் நூலகம் வரை எல்லாம் மூடப்பட்டாலும்.
பூங்காவும், தொலைநோக்கும் தொய்வின்றித் தொடரும்.

அது ஓர் இலக்கண வகுப்பு.
அய்யா உன்னையெழுந்து வாசிக்க சொல்ல.
அவர் அருகில் நின்றபடி வகுப்பைப் பார்க்கிறாய்.
வகுப்பாய் மாறுகிறேன் நான்.

கரும்பலகை
இரவென பின்னணி கொடுக்க
நீ நிலவாகிறாய்.
என் எழுதுகோல்
தன் தொழில் மறந்து
தூரிகையாகிறது.

பென்சிலைக் கார்பனில் செய்தவனின் காதலி
கருப்பாய் இருந்திருப்பாளோ?
உன்னை வரைய
பொன்னில் செய்த பொன்சில்தான் வேண்டும்.

“இரு சொற்களின் புணர்ச்சியில்,
முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும்,
இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்”

வாசிப்பினிடையே என்னைப் பார்க்கிறாய்.

நிலைமொழி நீ
வருமொழி நான்
காதலும் புணர்ச்சிதான்.

உணர்ந்தவளாய்,
உதட்டில் நகுகிறாய்.
விழிகளில் நாணுகிறாய்.

நீ விழிகளில் காதல் பரிமாறிய பின்னும்
என் உதடுகளில் உதறலெடுக்கிறதே.

ஏன்?

நண்பர்களோடு சிலம்பம் ஆடும்
என்சொற்கள் எல்லாம்
உன்னைக் கொண்டதும்
தியானத்தில் மூழ்கி விடுகிறதே.

எதற்கு?

தூரத்தில் நீ வருகையில்
இதயத்தில் இருந்து எழுந்து
தொண்டை வரை வார்த்தையாக வருபவையும்
அருகில் நீ வந்ததும்
குரலாக மாறாமல் காற்றாக கலைந்து மறைகிறதே.

எப்படி?

“உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்” -
புணர்ச்சி இலக்கண விதியொன்றை
கரும்பலகையில் எழுதுகிறார் தமிழய்யா.

ஏட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
“உயிர் வரின் உ குறள், மெய் விட்டோடும்”
“உயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்”
“என்னுயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்”
“என்னுயிர் நீ வரின் என் குரல், மெய் விட்டோடும்”

பெருங்கூட்டம் முன்னிலும்
பெருமழையெனப் பொழிகின்றன
என் வார்த்தைகள்.

ஒற்றைப் பெண்
உன் முன்நிற்கையிலோ
பூ மீது படியும் பனி போல
மென்மையாய் ‘உம்’ மட்டுமே கொட்டுகிறது.

அதற்குமொரு விதியெழுதுகிறார் தமிழய்யா.
“பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்”
என் கதை அவருக்கும் தெரிந்திருக்குமோ?

“பேரூர்” – பிரித்தெழுதி புணர்ச்சி விதிகளையும்
எழுதச் சொல்லிவிட்டுச் செல்கிறார் அய்யா.

புணர்ச்சி விதி ஒவ்வொன்றின் இடையியிலும்
கவிதைகளென நாமும் சேர்ந்து கொள்கிறோம்.

பெருமை + ஊர் -> பெரு + ஊர் (புணர்ச்சி விதி – ஈறுபோதல்)

மணமாகிறேன்.
நிறமாகிறாய்.
காதல் பூக்கிறது.
சொல்லாகிறேன்.
இசையாகிறாய்.
காதல் கவிதையாகிறது.
 

 

பெரு + ஊர் -> பெர் + ஊர் ( புணர்ச்சி விதி – உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் )

கடலாகிறேன்.
கரையாகிறாய்.
காதல் அலையடிக்கிறது.
மழையாகிறேன்.
நிலமாகிறாய்.
காதல் மண்வாசமாகிறது.
 

 

பெர் + ஊர் -> பேர் + ஊர் ( புணர்ச்சி விதி – ஆதி நீடல்)

பாதமாகிறேன்.
பாதையாகிறாய்.
காதல் பயணிக்கிறது.

நீயாகிறேன்.
நானாகிறாய்.
காதல் நாமாகிறது.
காரணங்கள் எதுவுமின்றி
இதுபோல் என்னோடு வந்து
நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???

‘பேரூருக்கான’ கடைசி புணர்ச்சி விதிமூலம்
காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.

பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி – “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” )

(அடுத்தப் பகுதி)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

*பெர்மா தேற்றம் – Fermat’s theorem.
**சவ்வூடு அழுத்தம் – Osmotic pressure

பின்குறிப்பு : ஆணித்தொல்லை அதிகமாப் போச்சு! ஆணியப் பார்த்ததும் ஆணியா?னு நான் தெறிச்சு ஓட்றேன். என்னப் பார்த்ததும் ஆ!நீயா? னு ஆணியும் தெறிச்சு ஓடுது. ஓடிப்பிடிச்சு வெளாடிட்டு இருக்கோம். வெளாட்டு முடிஞ்சதும் புணர்ச்சி விதிகளுக்கான விளக்கம் + பாடல் வரிகள் மாலையில் பதிக்கிறேன்

Related Posts...

  • காதல் கூடம் – 6
    தலைமையாசிரியர் அறைக்குள் பயத்தோடு நகம் கடித்தபடி நீயும் பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்க இயல்பாய்ப் பேசினார் அவர். …அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில் நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழு நம்முடைய தலைமையில்… செய்தி...
  • காதல் கூடம் – 5
    காதலும் முத்தம் தான். காதலிப்பது, கொடுக்கும் முத்தம் காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம். காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது, கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!...
  • காதல் கூடம் – 4
    எல்லோரும் குடையுடன் வருகையில் நீ மட்டும் மழையுடன் வரும் மழைக்காலமது. வயலுக்கு உரம் தெளிக்கும் பெண்ணைப் போல நிலமெங்கும் நீர்த்துளிகளை சாரலென தூவிக் கொண்டிருக்கிறது மேகம். கைக்குட்டையை தலைக்கு(ட்)டையாக்கி நீர் வழியும் முகத்தோடு பாலம் நெருங்கு...
  • காதல் கூடம் 3.1 :)
    பெருமை + ஊர் = பேருர் முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது. பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எ...
  • காதல் கூடம் – 2
    அடுத்த ஆண்டு பள்ளியின் முதல் நாள். காத்திரு என்று நானும் காத்திருக்கிறேன் என்று நீயும் சொல்லிக் கொண்டதில்லை. ஆனாலும் காலைதோறும் காத்திருப்பாய் ஆற்றுப்பாலத்தில் மிதிவண்டி துணையோடு. காலைக் கதிரவனுக்கு உன்னை ரசிக்க ஒருகண் போதவில்லை. ஆற்றுநீர...

38 Responses to “காதல் கூடம் – 3”

  1. அருட்பெருங்கோ says:

    / தங்களின் தமிழினால் தங்கள் காதலும் மெருகூட்டப்பட்டிருக்கிறது. அருமை..உணர்வுகளை வார்த்தையாக வடித்தெடுப்பது அவ்வளவு சுலபமன்று. :) /

    பாராட்டுக்கு நன்றிங்க சௌம்யா!!!

  2. Siva says:

    Arul, nalla rasanai. ovvaru ezhuthaiyum rasichu eluthi irukeenga. Thirumbavum school life-la irukara feeling.

  3. Reegan says:

    இன்னும் மிச்ச விதிகளையும் சொல்லுங்க அருள்…
    தெரிஞ்சுக்குவோம்….

  4. பாராட்டுக்கு நன்றிங்க சிவா.

    ரீகன், அப்பறம் தமிழ் வகுப்பு மாதிரி ஆகிடும்.

  5. Ramasubramanian says:

    எப்படி?

    தூரத்தில் நீ வருகையில்
    இதயத்தில் இருந்து எழுந்து
    தொண்டை வரை வார்த்தையாக வருபவையும்
    அருகில் நீ வந்ததும்
    குரலாக மாறாமல் காற்றாக கலைந்து மறைகிறதே

    எப்படி?

  6. Ramasubramanian says:

    do not know how to appreciate?

  7. Sundar says:

    அருமை! அற்புதம்!!!!!

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD