Mar 22
நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்… நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி? வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்! நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா! ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா? எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?

 

நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.
உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.
பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.
வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.
சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.
மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.
இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!


மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.
மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.
மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.
உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.
காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.
மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.
மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?


மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,

Mar 14
(முதல் பகுதியிலிருந்து வாசிக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இல்லை…
தொலைக்காட்சி சீரியல் மாதிரி தான் எந்த பகுதியில இருந்து வேணும்னாலும் வாசிக்க ஆரம்பிக்கலாம் :-) )

உன்னைப் பற்றி என்ன கிறுக்கினாலும்
அழகான காதல் கவிதையாகி விடுவதன்
மர்மத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போ!



ஓர் இரவு முழுவதும் மழை பெய்ததற்கு அடுத்த நாள் விடியல்.
கனவில் உன்னோடு கவிதை பேசிக்கொண்டிருந்தவனை நனவுக்கு துரத்திவிடுகிறது கலைந்து போன உறக்கம்.
இரவு முழுவதும் உலகமே சேர்ந்து துடைத்து வைத்த மாதிரி
வானம், சாலை, மரம், கட்டடம் என எல்லாமே தூய்மையாக இருந்தன, நம் காதலைப் போல.
வாசலில் இறங்கிய என் கால்களை உன் வீடு நோக்கி இழுத்துச் செல்கிறது சாலை.

பாதி தூரத்தில் எதிர்ப் படுகிறாய் நீ.
கும்பிடப் போனால் தெய்வம் மட்டுமல்ல, தேவதையும் குறுக்கே வருமோ?
நேற்றைய மழையினால் அங்கங்கு தேங்கி நிற்கிறது மழை நீர்.
அதில் நனைந்து விடாமல் இருக்க உன் பாவாடையை சற்றேத் தூக்கிப் பிடித்து நடந்து வருகிறாய்.
என்னைக் கண்டதும் நாணத்தில் பாவாடையைத் தாங்களே இழுத்து மூடிக் கொள்கின்றன உனது கால்கள்.

செருப்பில்லாத உன் பாதங்களைக் கவனித்து பதறியவனாய் உன்னை நெருங்குகிறேன்.
“ஏன் செருப்பில்லாம நடந்து வர்ற?” உரிமையோடு என் குரல்.

“ஐய்யோக் கவலைப்படாதப்பா…ஒன்னும் ஆகல….
மழை பெய்யும் போது அது மணல் எல்லாத்தையும் இழுத்துட்டுப் போயிடும்…
மணலவிடக் கொஞ்சம் பெருசா இருக்கிற , சின்ன சின்ன கல் மாதிரியானதுதான் பாதை முழுசும் கிடக்கும்…
அதில வெறுங்கால்ல நடக்கும் போது ஒரு மாதிரி குறுகுறுப்பா நல்லா இருக்கும்…அதான் செருப்பில்லாம வர்றேன்…நீயும் வேணா நடந்து பாரேன்…”
காதலோடு உன் அனுபவத்தை கிசுகிசுக்கிறது உன் குரல்.

“சரி சரி குறுகுறுப்ப அனுபவிச்சது போதும், இதெல்லாம் நம்மக் காதலுக்குத் தெரிஞ்சா என் கதி அதோ கதி தான்.
எனக்குக் காதலியைப் பார்த்துக்கத் தெரியலன்னு என்னை அது வசைபாடினா யார் கேட்கறது?”
என சொல்லிவிட்டு மறைத்து வைத்திருந்த அதை எடுத்து,
“முதல்ல இதக் கால்ல போட்டுக்கோ…நேத்து உன் கால செருப்புக் கடிக்குதுனு சொன்னதக் கேட்டு,
இப்போ இதக் கொண்டு வந்தது நல்லதாப் போச்சு!”
என சொல்லி உன்னிடம் அதைக் கொடுக்கிறேன்.

“என்னது இந்த செருப்பு வித்தியாசமா இருக்கு!”
“அது ரோஜா இதழ்ல நானே செஞ்சது!”
“பொய் சொல்லாதடா…நெஜமாவா?” ஆச்சரியப்படுகிறாய் நீ!

“நிஜமாதான்! கல்லூரியில தான் நல்ல பேரெடுக்கல
– கல்லூரியில விட்டத காதல்ல பிடிக்கத் தான் இத்தனையும்!”

அதை அணிந்து கொண்டு கொஞ்ச தூரம் நடந்து விட்டு சந்தோஷமாய்ச் சொன்னாய் :
“ இது ரொம்பதான் மெதுமெதுன்னு இருக்கு! இதப் போட்டு நடந்தா, தரையில் நடக்கிற மாதிரியே இல்ல,
காத்துல மிதக்கிற மாதிரியில்ல இருக்கு!”

“அடிப் போடி! உன்னைக் காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்தே எனக்கு அப்படித்தான் இருக்கு!” – என் நிலை சொல்கிறேன் நான்.
கேட்டு விட்டு சிரிக்கிறாய். அந்த சிரிப்புக்கும், வெட்கத்துக்கும் தானே தினமும் உன்னைத் தேடுகிறேன்.

அப்போது நம்மைக் கடந்து போன ஒரு பெண்ணைப் பார்த்து லேசாக புன்னகைக்கிறது என்னுதடு.
அதைப் பார்த்ததும் உன் கண்கள் உன் உதட்டிடம் வத்தி வைக்க, துடிக்கிறது உன்னுதடு.

“இப்ப எதுக்குடா அந்தப் பொண்ண சைட்டடிச்ச?”
“என்னமாக் கெட்ட வார்த்தையெல்லாம் பேசற? நீ இருக்கும்போது நான் எதுக்கு இன்னொரு பொண்ணப் பார்க்கிறேன்?”
“அப்போ நான் இல்லாதப்ப பார்ப்பியோ?” சட்டையைப் பிடித்துவிட்டாய்.
காதலியிடம் பேசும்போது எழுத்தைக்கூட அளந்துதான் பேச வேண்டும் என்பது மூளைக்கு உரைக்கிறது.

“இல்லமா உன்னப் பார்க்கிற வரைக்கும், மத்தப் பொண்ணுங்கள நான் ஒரு காதல் பார்வை பார்த்துக்கிட்டு இருந்தது உண்மைதான்
– ஆனா உன்னக் காதலிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் எந்தப் பொண்ணப் பார்த்தாலும்,
அவளும் என்ன மாதிரி யாரோ ஒருத்தனோடக் காதலியா இருக்கலாமில்ல?
நான் அவளக் காதலோடப் பார்க்கப் போய் , எம்மேல காதல் தேவதைக்குக் கோபம் வந்து,
அது நம்மக் காதல சபிச்சுட்டா என்னப் பண்றது?னு தோணுது!
அதனால இப்பலாம் எந்தப் பொண்ணப் பார்த்தாலும் ஒரு வேளை அவளும் ஒருத்தனுக்குக் காதலியா இருக்கும்னு நெனச்சு
அவளோடக் காதல மனசார வாழ்த்திட்டு ஒரு புன்னகை செய்யறேன் அவ்வளவுதான்!”

“உனக்கு நல்லா கதை சொல்லத் தெரியும்னு எனக்குத் தெரியும், உண்மையிலேயே என்ன விட அழகானப் பொண்ணப் பார்த்தாலும் உனக்கு எதுவும் தோணாதா?”
“தோணும்! எனக்கு உன்ன முழுசாக் காதலிக்கத் தெரியலையோன்னுத் தோணும்!”
“ஏன்”
“உண்மையா நான் உன்னக் காதலிச்சா, எந்தப் பொண்ணும் எனக்கு உன்ன விட அழகாத் தெரிய மாட்டா!
அப்படி அழகாத் தெரிஞ்சுட்டா நான் உன்ன உண்மையிலேயே முழுசாக் காதலிக்கலன்னு தான அர்த்தம்?
ஆனாக் கவலைப்டாத! இது வரைக்கும் உன்ன விட அழகா நான் யாரையும் பார்க்கல!”
மீண்டும் சிரிப்புக்கு வருகிறாய்.

“அப்பாடா, மறுபடியும் உன்ன சிரிக்க வைக்க எவ்வளவுப் போராட வேண்டியிருக்கு!
ஆனாக் கோபத்துலக் கூட சும்மா காதல் பிசாசு மாதிரி இருக்க!”

“ஓஹோ! நான் பிசாசு மாதிரி இருக்கேன்னு சொல்ற, அதான?
அப்போ இவ்வளவு நாளா ‘தேவதை’னு உருகுனதெல்லாம் வெறும் வேஷம் அப்படித்தான?”

எனக்கு, தண்ணீரில்,வாகனத்தில் எல்லாம் கண்டமில்லை, எல்லாக் கண்டமும் என் வாயில் தான் இருக்கிறதென
சிறு வயதில் ஜோசியக்காரன் சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது.
அமைதியாகவே இருக்கிறேன் நான்.

“அதெப்படி இந்த ஆம்பளைங்க மட்டும் நேத்து ஒரு மாதிரி பேசிட்டு, இன்னைக்கு வேற மாதிரிப் பேசறீங்க?”

“இல்லமா நான் காதல்ல அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கும்போது,
நீ தேவதை மாதிரி வந்து ஒரு பார்வ பார்த்தா போதும் அப்படியே அமைதியாயிடுவேன்!
நான் வேற ஏதாவது யோசனையில் அமைதியா இருக்கும்போது நீ (காதல்)பிசாசு மாதிரி வந்து என்னப் பிடிச்சின்னா,
உன்னோடக் காதல் எனக்கும் தொத்திக்கும்! அதனால ரெண்டுமே நம்மக் காதலோட நல்லதுக்குதான்!”

“உன்னோட சமாளிப்ப பத்தி தான் ஊருக்கேத் தெரியுமே! அது சரி உனக்கு தேவதையப் பிடிக்குமா? பிசாசப் பிடிக்குமா?”

“தேபிசாதைசு தான் எனக்குப் பிடிக்கும்!”

கேட்டதும் இன்னொரு சிரிப்பைத் தந்துவிட்டு வெட்கத்தை மட்டும் நீயே எடுத்துக் கொண்டு ஓடினாய்.
இன்றைக்கு இது போதும், நீங்கள் வீட்டுக்குப் போகலாம் – என்பது போல இயற்கை,
சுட்டெரிக்கும் கதிரவனை அனுப்பி நம்மைப் பிரிந்து செல்ல வைக்கிறது.

( காதல் பயணம் தொடரும் )

 

written by அருட்பெருங்கோ \\ tags:

Mar 08

இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

21. நெஞ்சொடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும்!

 

 


அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது.
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

 

உயிரோடு இருப்பதா?
உன்னோடு இருப்பதா? என்றால்…
உன்னோடு வருகிறது என் இதயம்!

 

 

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
 

 

என் கண்ணும் உன் கண்ணையேத் தேடுகிறது…
என் இதயமும் உன் இதயத்தையே நாடுகிறது…
என் அங்கங்களையெல்லாம் இழுத்துக் கொண்ட பின்
உயிரை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்?

 

 

 
 

 

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?
 

 

நம் காதலைப் பற்றி
உன் மனம் என் மனதிடம் என்ன பேச்சு பேசுகிறது?
நீ தான் எதுவுமே பேசுவதில்லை.

 

 

 
 

 

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.
 

 

உன் மௌனத்தில் இருந்துதான் பெறப்பட்டன
என் காதலுக்கானத் தாலாட்டும்…
ஒப்பாரியும்!

 

 

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.
 

 

உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!

 

 

 
 

 

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
 

 

என் காதலை உதறினாய்
நீ உதறிய வேகத்தில் உதிர்ந்தது
என் உயிர்.

 

 

 
 

 

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.
 

 

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!

 

 

 
 

 

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
 

 

உன்னைப் பிரிந்த நாட்களில்
எனக்குத் துணையாயிருக்கிறது
தனிமை!

 

 

 
 

 

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?
 

 

உள்ளமே உன்பின்னால் போனபின்
உலகமே என் பின்னாலிருந்து
என்ன பயன்?

 

 

 
 

 

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
 

 

written by அருட்பெருங்கோ \\ tags:

Mar 08

மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி அலையும் அவசரத்திலும்
உள்ளாடை தாண்டி ஊடுருவும் பார்வைகளில்லை…பேருந்தின் நெரிசலில்
எட்டாதக் கம்பியை எக்கிப் பிடித்து தடுமாறி நிற்கையிலும்
உடலை உரசிப் பார்க்கும் வக்கிரக் கைகளில்லை…

அலுவலகத்தில் கூட
வீட்டு நினைப்போடு வேலையின் பளுவும் சேர்ந்தழுத்தும்போதும்
மேலதிகாரியின் சில்மிஷ , ஆபாசப் பேச்சுக்களில்லை…

குடும்பத்திலும்
உடலாலும் மனதாலும் சுமைகளைச் சுமந்து வருந்தும்போதும்
வாழ்க்கைத்துணையின் ஆதிக்க மனப்பான்மையில்லை…

ம்ம்ம்…பாரதிகூட பெண்ணாய்ப் பிறந்திருந்தால்…


.
.
.
.
.
.“ஆடவராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமப்பா”



_________________________________________________________
இது மகளிர் நாளுக்காக ஒலிFM இல் ஒலியேறிய எனது கவிதை.
குரல் கொடுத்து உதவிய சிறில் அவர்களுக்கு நன்றிகள்!

_________________________________________________________________

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Mar 07

ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று
ஒதுக்கி விட்டால்?

காதலியைப் பற்றிய
கவிதை வேண்டுமாம்…
சிலையைப் பற்றியென்றால்
சில நொடியில் எழுதுவேன்…
ஓவியம் பற்றியென்றால்
ஒரு நொடி போதும்…
கவிதையைப் பற்றியே
கவிதை வேண்டுமென்றால் எப்படி?

சரி எழுதுவோம்
என்று உட்கார்ந்தால்
கவிதை வளர்கிறதோ இல்லையோ
உன் மேல் காதல் தான் வளர்கிறது!

உன் அழகைச் சொல்ல ஆரம்பித்தால்
பூக்களின் குறிப்பாகி விடுகிறது…
உன் குரலை வருணித்தால்
இசைக் குறிப்பாகி விடுகிறது…
பின் எப்படிதான்
உன்னைப் பற்றி கவிதை எழுதுவதாம்?

என்ன எழுதினாலும், உன்னுடைய

“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”

…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!

இன்னும் போராடி கவிதையாக,
ஒரு கவிதையெழுதினாலும்
அதை விட கவித்துவமாக நீயே இருக்கிறாய்!

பேசாமல் இந்தக் கவிதைப் போட்டிக்கு
நானனுப்பும் கவிதையாக நீயே போகிறாயா?

வேண்டாம்… வேண்டாம்…
நீ போனால் அப்புறம் அழகிப் போட்டியென்று
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்!

கவிதைப் போட்டியோ
அழகிப் போட்டியோ
நீ போனால் பரிசு நிச்சயம்…
கொஞ்சம் யோசித்து சொல்!

____________________________________________________

இது, நம்பிக்கைக் குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை.
போட்டியை நடத்திய நம்பிக்கை குழுமத்திற்கும், கவிதைகளைத் தரப்படுத்திய நடுவர்களுக்கும் நன்றி!!!

 

written by அருட்பெருங்கோ \\ tags: ,