~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் முக்கால் வாசி அழகு
ஆடைக்குப் பின்னே மறைந்து கிடக்கிறது.
மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ ராட்சசி என்றேன் – சிரித்தாய்.
நீ கோபக்காரி என்றேன் – சிரித்தாய்.
நீ அழகி என்றேன் – வெட்கப்பட்டாய்.
உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைப் பார்த்ததும்,
தலை குனிந்து, மெல்ல சிரித்து,
ஓடி ஒளிந்து கொள்கிறது என் காதல்!
அதுவும் அழகாய்த்தான் வெட்கப்படுகிறது…
உன்னைப்போல!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதேச்சையாய்
உன் காதில் என் உதடு படும்போது
உன் கன்னத்தில் பூக்குமே ஒரு வெட்கப்பூ…
அப்போது தானடி புரிகிறது
“எதுவாய் இருந்தாலும் ரகசியமாய் சொல்”
என நீ சொல்வதின் ரகசியம்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் அண்ணனிடம்
என்னை அறிமுகப் படுத்துகையில்,
என் பெயரைச் சொல்லும்போது
கொஞ்சமாய் வெட்கப்பட்டாயே,
அதுவரை எனக்குத் தெரியாதடி
நீயும் என்னைக் காதலிப்பது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் தனிமையில் இருக்கும்போது
இப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?
written by அருட்பெருங்கோ
\\ tags: வெட்கம், காதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசே… கொலுசே… – 1
கொலுசே… கொலுசே… – 2
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளிக்கொலுசுக்கும், தங்கக்கொலுசுக்கும்,
என்ன வித்தியாசம்? என்றாய்.
உன் கலகல சிரிப்புக்கும், அமைதியானப் புன்னகைக்கும்,
என்ன வித்தியாசம்? என்றேன்!
அமைதியாகப் புன்னகைத்து விட்டுப் போனாய்!
நீ தங்கக் கொலுசுக்கு மாறவிருப்பதை சொல்லாமல் சொல்லி…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் பழையக் கொலுசு உனக்கெதற்கு? என்கிறாய்.
நான் கலைப் பொருட்கள் சேகரிப்பது உனக்குத் தெரியாதா?
‘தேவதை அணிந்த கொலுசு’ என்று பத்திரப் படுத்தத்தான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ ஜீன்ஸ் அணியும்போது கொலுசைக் கழற்றி வைத்துவிடுவாயோ?
உன் புடவையிடம் புலம்பிக் கொண்டிருக்கிறது உன் கொலுசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ நடந்து வரும்போது உன் கொலுசின் இசையைக் கேட்க
என் இதயத்தின் ‘லப் டப்’ ஓசை இடையூறாய் இருக்கிறதாம்…
துடிப்பதை நிறுத்த சொல்லி சண்டையிடுகிறது என் செவி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சத்தம் போட்டபடி உன் காலடியில் துள்ளுகிறது உன் கொலுசு!
சத்தமில்லாமல் என் மனசடியில் கொல்லுகிறது என் காதல்!
written by அருட்பெருங்கோ
\\ tags: கொலுசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசு அணியாத உன் கால்…
கவிதை சூடாத காதல் போல!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊடல் நேரங்களில்
என்னிடம் பேசுவதைத் தடுக்கும் உன் கோபம்.
ஆனாலும் கொலுசொலி மூலமாகத் தூது விடும் உன் காதல்!
கொலுசைக் கண்டு பிடித்தவளு/னுக்குக் கோவில் தான் கட்ட வேண்டும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பள்ளி விடுமுறையில்
எந்த இசைப்பயிற்சிக்கு போகலாம்?
என்று கேட்கும் என் தங்கையிடம்,
உன்னைப்போல கொலுசில்
இசைக்கக் கற்றுக்கொள்
என்று எப்படி சொல்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளிக்கொலுசு கறுத்துப் போகுமாம்.
உன் கொலுசு பொன்னிறமாகத்தான் மாறும்!
அணிந்திருக்கும் கால் அப்படி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குளிக்கும்போது கொலுசைக் கழற்றிவைத்து விட்டுக் குளி!
நீ குளித்த நீர் பட்டு உன்னைவிட அழகாகிவிடப் போகிறது உன் கொலுசு!
written by அருட்பெருங்கோ
\\ tags: கொலுசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.
கொலுசே…கொலுசே… – 2
written by அருட்பெருங்கோ
\\ tags: கொலுசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!
written by அருட்பெருங்கோ
\\ tags: இதயம்
Recent Comments