May 27
முன்குறிப்பு : இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே!
ஒரு காதல் பயணம் பகுதி – 1
எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ,
நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில்
நமக்குள் காதல் பிறந்தது!

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை.

தேவதையின் வரவுக்காக கோவிலுக்குள் காத்திருக்கிறேன்.
கோவில் மணி விடாது ஒலித்த ஒரு மங்கள வேளையில்
துவட்டப்படாத ஈரத்தலையோடு கோவிலுக்குள் நுழைகிறாய்.
அப்போது எங்கிருந்தோ ஒரு நூறுப் புறாக்கள் உன்னை
தரிசிப்பதற்காகவே அந்தக் கோவிலுக்கு வருகின்றன.
நீ வந்ததைப் பார்த்ததும் கோவிலும் அந்தப் புறாக்களை
தன் கோபுரத்தில் வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
வழக்கத்துக்கு மாறாக தன்னை விட்டு எல்லோரும்
உன்னையே கவனிப்பதைப் பார்த்து பொறாமை கொள்கிறார் கடவுள்.
உள்ளே நுழைந்த நீ வரிசையில் நின்று கண்ணை மூடிக் கடவுளைக் கும்பிடுகிறாய்.
நீ கண் திறந்ததும் உன் கண்ணில் நானே விழ வேண்டுமென
உனக்கெதிர் வரிசையில் நான் நிற்கிறேன்.
நீ கண் திறக்கிறாய்.
நான் உன் கண்களை நேராய்ப் பார்க்கிறேன்.
அச்சம், நடுக்கம், பதட்டம் என எல்லா உணர்ச்சிகளிடமும் ஓடிக் கடைசியில்
வெட்கத்தில் போய் தன்னை மறைத்துக்கொள்கிறது உன் முகம்.
பூசாரிக் கொடுத்த விபூதியை அப்படியேத் தூணில் கொட்டி விட்டு வெளியேறுகிறேன் நான்.
நான் கொட்டியதில் இருந்து ஒரு துளியெடுத்து உன் நெற்றியில் இட்டுக் கொள்கிறாய்.
அப்போது, நிலவு, தானேப் பொட்டு வைத்துக் கொள்வதைக்
கடவுளும் உள்ளிருந்து எட்டிப் பார்க்கிறார்.
வேண்டுதலை முடித்ததும் என்னைத் தாண்டி வேகமாகப்
போவது போல் நடித்துக் கொண்டுமெதுவாக செல்கிறாய்.
காதலில் நடிப்பது தானே சுகம்?
நானும் மெதுவாக உன்னைத் தொடர்ந்து நட(டி)க்க ஆரம்பிக்கிறேன்.
பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்து நான் பின்தொடர்வதை
உனக்கு நேரடி வர்ணனை செய்கிறாள், உன் தங்கை.
உன் பின்னால் என்னை சுற்ற வைத்துவிட்டு,
கோயில் பிரகாரத்தை நீ சுற்ற ஆரம்பிக்கிறாய்.
உனக்கு அருகில் வந்து உன் வேகத்திலேயே நானும்சுற்ற ஆரம்பிக்கிறேன், உன்னோடு.
“கோயிலுக்கு சாமி கும்பிட வந்தீங்களா” முதன்முறை உன்னிடம் பேசுவதால்,
கேட்டு(உளறி?)முடிப்பதற்குள் தடுமாறித்தான் போனேன்.
“இல்ல சினிமா பாக்க வந்தோம்” என
நீ சொல்ல நினைத்ததை உன் தங்கைசொல்கிறாள்.
உள்ளூற நகைத்தாலும் பொய்யாக அவளை அதட்டுகிறாய்.
நீ ஏதாவது பேச வேண்டும் எனக் காதலிடம்கையேந்துகிறேன்.
வேண்டியவர்களைக் காதல் என்றைக்கு கைவிட்டிருக்கிறது?
“உங்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லன்னு கேள்விப்பட்டேனே,
அப்புறம் கோயிலுக்கு வந்திருக்கீங்க” என்று குனிந்து கொண்டே கேட்கிறாய்.
உன் தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டு உன் இசையைக் கேட்க இனிமையாயிருக்கிறது.
“இப்பவும் கடவுள் இருக்குன்னு நான் நம்பல…ஆனா”
“ஆனா?”“நேத்து உங்க வீட்டுக்கு வந்திட்டுப் போனதுல இருந்து
தேவதைகள் இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சுட்டேன்”என்ன சொல்கிறேன் என்று,
புரிந்து கொண்டு வெட்கத்தில் மேலும் அழகாகிறாய்.
“தேவதைகள் இருக்குன்னு நம்பறீங்களா? தேவதை இருக்குன்னு நம்பறீங்களா?”–
நீ தேவதையாக இருந்தாலும், பெண்தானே,
அதுதான் பெண்ணுக்கேயுரிய சந்தேகத்தோடு கேட்கிறாய்.
நீ சுற்றி வளைத்து என்னக் கேட்க வருகிறாய் எனத்தெரிந்தும்,
“தேவதைகள் இருக்குன்னு நம்பறேன்” என்று அழுத்திச் சொல்கிறேன் நான்.
மேலும், சந்தேகத்தில் மௌனமாகிறாய் நீ.
“தேவதைக்கு ஒரு குட்டி தேவதை பிறந்தால் அப்புறம் தேவதைகள்தானே?”
எனப் புரிய வைக்கிறேன் நான்.
உன் அசட்டு சந்தேகம் உண்மையிலேயே அசடாகிப் போனது.
முதல் சுற்று முடிந்தது.
வெட்கத்தை மறைத்துக் கொண்டு “நேத்துல இருந்து வேற என்னல்லாம் நம்ப ஆரம்பிச்சீங்க?” எனத் தூண்டில் போடுகிறாய்.
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன – நீ இத நம்புறியா?”
“ஏன் நீங்க நம்பலையா?”
“நேத்து வரைக்கும் நம்பாமதான் இருந்தேன்…”
“நேத்து மட்டும் என்ன நடந்தது?”
“நம்ம திருமணம் எங்க நிச்சயிக்கப்பட்டது?”
“எங்க வீட்லதான்?”
“நீ எங்க குடியிருக்க?”
“அய்யோக் கடவுளே….நான் எங்க வீட்லதான் குடியிருக்கேன் .அதுக்கென்ன?”
நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறாய்.
“தேவதை குடியிருக்கிற இடம் சொர்க்கம் தான? அதனால தான் சொல்றேன் –
நம்ம திருமணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப் பட்டிருக்கு”
இரண்டாவது சுற்றும் முடிந்தது.
சில நொடிகள் வார்த்தைகள் ஓய்வெடுக்க, மௌனம் பேசிக் கொண்டிருந்தது.
“ஐய்யையோ இது தெரியாம நான் நேத்து பாதி நிச்சயத்திலேயே
வேற எடத்துக்கு குடி போயிட்டேனே” எனப் பதறுகிறாய்.
“கவலைப் படாதே…நீ எந்த இடத்தில் குடியேறினாலும் அந்த இடம் தன்னை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளும்” என உன்னை சமாதானப் படுத்துகிறேன்.
“இல்ல…நான் குடியேறினதே சொர்க்கத்திலதான்…” என்கிறாய்.
உனது அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன் நான்.
“நேத்து நான் உங்க இதயத்துக்குள்ள நுழைஞ்சத நீங்க கவனிக்கலையா?”
எனக் கேட்டு சிரிக்கிறாய்.
“அது சொர்க்கம் போலவா இருக்கு?”
“அது சொர்க்கம் ‘போல்’ இல்லை – அது தான் சொர்க்கம்.
நான் வரப்போறேன்னு அதற்கு முன்பே தெரிஞ்சிருக்கு.
எனக்காக உள்ள ஒரு ராஜாங்கமே அமைச்சு எனக்கு வரவேற்பு கொடுத்தது”
உனக்குள்ளும் காதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
மூன்றாம் சுற்றும் முடிந்தது.
வீட்டுக்கு செல்லத் திரும்பிய உன்னிடம் “ என்ன ‘வாங்க’, ‘போங்க’னு மரியாதையா
எல்லாம் கூப்பிட வேண்டாம், பேர் சொல்லியேக் கூப்பிடலாம்” என்கிறேன்.
“சரிடா சிவா” என்று சொல்லி “களுக்” கென சிரித்துக் கொண்டு சாலையில் மறைகிறாய் நீ.
“சரியான ஜோடியைத்தான் இணைத்திருக்கிறோம்”
என நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது இயற்கை.
( காதலில் தொடர்ந்து பயணிப்போம் )

written by அருட்பெருங்கோ \\ tags:

May 26
காதலை மறுத்தவர்கள், காதலால் மறுக்கப்பட்டவர்கள், ஒரு தலையாய்க் காதலித்து தறுதலையாய்ப் போனவர்கள் இப்படிக் காதலின் எல்லா வகைத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களும், காதலின் வாசனையே நுகராதவர்களும் கூட, (மறுபடியும்) காதலின் சுவாரசியத்தை அனுபவிப்பது நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையில் தான். அவர்களுக்காக….

அலையில் காலை மட்டும் நனைத்துக் கொண்டிருந்த என்னை,
ஒரு தெய்வீகமான நேரத்தில்,
காதல்கடலில் தள்ளிவிட்டு,
கரையில் நின்று வேடிக்கை பார்க்கிறது, வாழ்க்கை.
அதில் மூழ்கி முத்தெடுத்தவுடன்,
காதலே என்னை
மறுபடியும் வாழ்க்கையிடம் துப்பி விடும்
என்ற நம்பிக்கையில் நீந்திக் கொண்டு இருக்கிறேன்.

உன்னைப் பெண் பார்க்க, என் பெற்றோரோடு

உன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன் நான்.
கண்களை மூடிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு
உள்ளறையில் ஒளிந்திருக்கிறாய் நீ.
சற்று நேரத்தில், உன் அப்பாவின் கண்ணசைவில்,
உன் அம்மாவின் கையசைவில் உனக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.
அந்த அறையின் வாசலை மறைத்திருந்த திரையை
ஒரு கையால் விலக்கி விட்டு நீ வெளிப்படுகிறாய்.
திரையில் படமாய் இருந்த மகாலட்சுமி
உயிரோடு எழுந்து வருவதைப் போல மெல்ல வருகிறாய்.
எல்லாக் கண்களுக்கும் உனது பார்வையும், வணக்கமும் சேர்ந்து கிடைக்க
என் கண்களுக்கோ உனது வணக்கம் மட்டுமே கிடைக்கிறது.
ஏன் நேராய்ப் பார்க்க வில்லை என்று நான் என் கண்களையும்,
நீ உன் கண்களையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.
வெட்கம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது.
சற்று நேரத்தில், புது உடையில், தட்டில் சாக்லேட்டோடு
சுற்றி வரும் பிறந்த நாள் குழந்தையைப் போல ,
காபி டம்ளர்களோடு நீ வலம் வருகிறாய்.
குனிந்து தட்டையேப் பார்த்துக் கொண்டு அதை நீ என்னிடம் நீட்டுகையில்,
தட்டில் ஒரு நிலாத் தெரிகிறது எனக்கு.
ஒரு நொடி தட்டில் சந்திக்கின்றன நம் கண்கள்.
ஒரு டம்ளரை நான் எடுத்துக் கொண்டவுடன் விலகி ஓரமாய் நிற்கிறாய் நீ.
இதேக் காட்சியை என் நிலையில் உன்னையும்,
உன் நிலையில் என்னையும் வைத்து கற்பனை பண்ணிப் பார்க்கிறது மனம்.
இருக்கையில் அமர்ந்த படி நீ. காபி டம்ளர்களோடு நான்.
“என்ன தம்பி யோசிக்கிறீங்க” என்ற உன் அப்பாவின் குரலில் திடுக்கிட்ட நான்,
சமாளிப்பாக “ இது ஃபில்டர் காஃபியா, இல்ல ப்ரூவான்னு யோசிச்சுட்டு இருக்கேன் “
என்று சொல்ல…
“அது பூஸ்ட்ங்க…” என்கிறாய் நீ.
எல்லாரும் சிரிக்க, நான் உன் முகத்தை நேராய்ப்பார்க்கிறேன்.
நீயோ உதட்டை மெல்லக் கடித்து, நிலம் நோக்கி நகுகிறாய்.
பின் உள்ளறைக்குள் நுழைய முதல் அடி எடுத்துவைக்கிறாய், என் மனதுக்குள்ளும்.
“என்னப்பா.. பொண்ணப் புடிச்சிருக்கா?” என மெல்லக் கேட்கும் அம்மாவிடம்,
“பொண்ணுக்கு என்னப் புடிச்சிருந்தா, எனக்கும் சம்மதம்”
என உள்ளறைக்கும் கேட்கும் படி சத்தமாகவே சொல்கிறேன்.
அங்கிருந்து ஓடி வந்த உன் தங்கை “உங்கள எங்கக்காவுக்குப் புடிச்சிருக்காம்”
எனக் கத்திவிட்டு மறைகிறாள்.
இரண்டே வரிகளில் நிச்சயமாகிறது நமதுத் திருமணம்.
முகத்தில் மலர்ச்சியோடு, “ அப்புறம் நீங்க எவ்வளவு நக எதிர்பாக்கறீங்கன்னு சொன்னா….”
என உன் அப்பா ஆரம்பிக்க… என்னைப் பார்க்கிறார் என் அப்பா.
“உங்கப் பொண்ணுதான் நல்லா சிரிக்கிறாங்களே…
அப்புறம் எதுக்குங்க நகையெல்லாம்…நீங்க எதுவும் போட வேண்டாம்…
அவங்க வேணும்னு சொன்னா, நான் வாங்கித் தர்றேன்” என்கிறேன் நான்.
சந்தேகமாய்ப் பார்க்கிறார் உன் அப்பா.
“வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, பாத்திரம், பண்டெமெல்லாம்..நாங்க…”
என ஆரம்பிக்கிறார் உன் அம்மா.
“உங்கப் பொண்ணுக்கு மத்தவங்கள சந்தோஷப்படுத்தத் தெரியுமில்ல…அது போதும்…
அது தானங்க வீட்டுக்கு முக்கியமாத் தேவை…மத்ததெல்லாம் நான் வாங்கிக்கிறேன்” என மறுபடியும் மறுக்கிறேன் நான்.
“என்ன இருந்தாலும் பொண்ணு வீட்டு சீர் வரிசைனு ஒன்னு இருக்கில்லங்க”
என என் அப்பாவைப் பார்த்து உன் தாய்மாமன் சொல்ல…
“உங்கப் பொண்ணோட சேர்த்து, அவங்க ஆசையெல்லாத்தையும்
சீராக் கொடுங்க, வரிசையா அத நிறைவேத்துறேன்”
என சொல்லி விட்டு என் பெற்றோரோடு கிளம்புகிறேன்.
வெளியேறி தெருவில் இறங்கி நடக்கும்போது திரும்பி
உன் உள்ளறையின் ஜன்னல் பார்க்கிறேன்.
அங்கே எல்லா நகையையும் கழற்றிவிட்டு அழகானப் புன்னகையோடு
என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நீ.
விழிகளால் பேசி விட்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறேன் நான்.
“உனக்கெல்லாம் காதல்னு ஒன்னு வந்தா,
அது நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவுலதாண்டா”
என கல்லூரியில் நண்பன் கொடுத்த சாபம் ( வரம்? ) பலிக்க ஆரம்பிக்கிறது.
நிமிர்ந்து உலகத்தைப் பார்க்கிறேன் – அது இன்று மட்டும் அழகாய்த் தெரிகிறது.

( தொடர்ந்து காதலில் பயணிப்போம்… )

written by அருட்பெருங்கோ \\ tags:

May 24

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.
அவளேக் கீழே இறங்கி வந்தாள். ஆறு வருடங்களில் அவள் ரொம்பவே மாறிப் போயிருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் சுடிதாரும் அணிந்திருந்தவளின் காதை விட அதில் தொங்கிய தோடு பெரிதாயிருந்தது.
நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவளேப் பேசினாள்.

“ஏ..என்னத் தெரியலையா? நான் சாரதாப்பா…”

நான் அதிர்ச்சியை மறைத்தபடி, “தெரியாமலா….ஆனா உன்ன மறுபடி பார்ப்பேன்னு நான் எதிர்ப்பர்க்கவே இல்ல! நீ எப்படி இருக்க?”
இயல்பாகப் பேச நான் கொஞ்சம் சிரமப்பட்டேன்; ஆனால் அவள் சகஜமாகவேப் பேசினாள்.

“நான் நல்லா இருக்கேன்…நீ எப்படி இருக்க?”

“எனக்கென்ன நானும் நல்லாதான் இருக்கேன்…ஆமா நீ இப்ப எங்க இருக்க? என்னப் பண்ணிட்டு இருக்க?”

அவள் இரண்டாடுகளுக்கு முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும், தற்போது சென்னையில் இருப்பதாகவும் சொன்னாள்.
நானும் ஓராண்டுக்கு முன் தான் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததையும் தற்போது ஹைதராபாத்தில் இருப்பதையும் சொன்னேன்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தாள்.

“நல்ல வேளை, நீ அன்னைக்கு மாட்டேன்னு சொல்லிட்ட…ஒருவேளை நீயும் சரின்னு சொல்லியிருந்தா…நாம இன்னைக்கு ஓரளவுக்கு இருக்கிற இந்த நல்ல பொசிஷனுக்கு வந்திருக்க முடியுமான்னுத் தெரியல…படிக்க வேண்டிய அந்த வயசுல நான் தான் கொஞ்சம் தடுமாறிட்டேன் இல்ல!”

“உன்ன மட்டும் தப்பு சொல்லாத! யார் தான் தப்புப் பண்ணல? சரி அது முடிஞ்சு போனது அத விட்டுட்டு வேற ஏதாவதுப் பேசுவோமே..”
அவள் அதை மறுபடியும் நினைவுபடுத்துவது எனக்கு ஏனோ ஒரு குற்றவுணர்ச்சியைத்தான் தந்தது.

“இல்லப்பா நீ அப்போ மாட்டேன்னு சொன்னதும் எனக்கு உம்மேலக் கோபம்தான் வந்தது..அதான் உன்னப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டேன்…அப்புறம் காலேஜ் போனதுக்கப்புறம் அடிக்கடி feel பண்ணதுண்டு..atleast உங்கிட்ட friendshipப்பாவது continue பண்ணியிருக்கலாமேன்னு…ம்ம்ம்…நீ எப்படி feel பண்ண?”

“எனக்கும் முதல்ல கஷ்டமாதான் இருந்தது..அப்புறம் புது காலேஜ் புது நண்பர்கள்னு வாழ்க்கையே மாறிடுச்சு…சரி நீ என்ன மாஸ்டரப் பார்க்க இவ்வளவு தூரம்??”
பேச்சை மாற்றினேன் நான்.

“எல்லாம் நல்ல விஷயம் தான்” என்று சொல்லிவிட்டு அதை என்னிடம் கொடுத்தாள்.
அவளுடையத் திருமண அழைப்பிதழ்.

“ஓ பொண்ணுக்குக் கல்யாணமா?? இந்தா என்னோட வாழ்த்துக்கள இப்பவே சொல்லிடறேன்..ஆமா லவ் மேரேஜ்தான?”

சிரித்துக் கொண்டே கேட்டாள், “எப்படிக் கண்டு பிடிச்ச?”
அவள் வேறொருவனைக் காதலித்திருக்கிறாள் என்பதே எனக்கு நிம்மதியாய் இருந்தது.

“அதான் பத்திரிக்கைல மாப்பிள்ளையும் உன்னோடக் கம்பெனியிலதான் வொர்க் பண்றதா போட்டிருக்கே! அங்கப் போயும் நீத் திருந்தலையா?”

“ஏ என்னக் கிண்டலா? இந்த தடவ நான் கொஞ்சம் உஷாராயிட்டேன்…எனக்குப் பிடிச்சிருந்தும் நான் எதுவும் வாயத்திறக்கல…அவரேதான் propose பண்ணார் ..நானும் ஒரு வருஷம் அலைய விட்டுதான் ok சொன்னேன்!”
அவள் இப்படிப் பேசுவது எனக்கு இன்னும் ஆச்சரியமாய் இருந்தது.

“ம்ம் வெவரம்தான்…பேர் பொருத்தம் கூட ரொம்ப அருமையா இருக்கு – சாரதா ஷங்கர்! ”

“ம்ம் ஆமா …ஆனா எங்களுக்குள்ள மொதல்லப் பொருந்திப் போன விஷயத்தக் கேட்டா நீ சிரிப்ப!”

“இல்ல..இல்ல.. சிரிக்கல.. சொல்லு”

“நாங்கக் கொஞ்சம் க்ளோஸாப் பழக ஆரம்பிச்ச சமயம் தான் அழகி படம் வந்திருந்தது…அப்போ ஒரு தடவ அந்தப் படத்தப் பத்திப் பேசிட்டு இருந்தப்பக் கொஞ்சம் எமோஷனாகி நம்மக் கதைய அவர்ட்ட சொன்னேன்….கேட்டுட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்…அப்புறம்தான் அவர் கதைய சொன்னார்..அவரும் +2 படிக்கும்போது ஒரு பொண்ண லவ் பண்ணி அப்புறம் அந்தப் பொண்ணுகிட்ட செமத்தியா வாங்கிக்கட்டிக்கிட்டாராம்…ரெண்டு பேரும் ஒரேக் கேஸ்தான்னு சிரிச்சுக்கிட்டோம்…அப்புறம் எங்க நட்புக் காதலாகி இதோ இப்போ கல்யாணத்துல வந்து நிக்குது”

“நல்ல ஜோடிப் பொருத்தம்தான்…அப்ப ஒருத்தர ஒருத்தர் முழுசாப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னு சொல்லு!”

“ம்ம்..நல்லாவே! ஆமா உன்னக் கேட்க மறந்துட்டேனே நீ என்ன மாஸ்டரப் பார்க்க?”

“நானும் ஒரு கல்யாணப் பத்திரிக்கைக் கொடுக்கலாம்னுதான்!”

“ஏய் சொல்லவே இல்லப் பார்த்தியா…யார் அந்த அதிர்ஷ்டசாலி(?)”

“அட…நீ நெனைக்கிற மாதிரியில்ல…. கல்யாணம் எங்க அண்ணனுக்கு!”

“அப்ப உனக்கு ரூட் க்ளியர் ஆயிடுச்சுன்னு சொல்லு…நீயும் சீக்கிரமா ஒரு நல்லப் பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி lifeல செட்டில் ஆகவேண்டியதுதான…இல்ல ஏற்கனவே பொண்ணு ஏதும் மாட்டிடுச்சா???” கேட்டு விட்டு சிரித்தாள்.

“அட நானும் யாராவது மாட்டுவாங்களானு தான் பார்க்கிறேன்…ஆனா எல்லாப் பொண்ணுங்களும் புத்திசாலியாவே இருக்காங்க”, சொல்லி விட்டு நானும் சிரித்தேன்.

“ஆனா உன்ன ஒரு பொண்ணு லவ் பண்ணாலும் உடனேல்லாம் ok சொல்லக்கூடாதுப்பா… ஒரு ஆறு மாசமாவது உன்ன அலைய விட்டுதான் சொல்லனும்” மறுபடியும் சிரித்தாள்.
அதற்குள் மாஸ்டர் வந்துவிட அவரைப் பார்த்து பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அதன்பிறகு அவர் ட்யூஷன் எடுக்க சென்றுவிட நாங்கள் இருவரும் செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.

என்னை மறுபடியும் ஒருமுறை சந்தித்தால் என்னோடு அவள் பேசுவாள் என்று நான் நினைத்ததில்லை.
ஆனால் அவள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசியதையும், அவளுக்குப் பிடித்த மாதிரியே அவளுக்கொரு வாழ்க்கைக் கிடைத்திருப்பதையும் நினைத்துப்பார்த்தால் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருந்தது.

நான் வாழ்க்கையில் சில சமயம் நிறைய யோசித்துத் தவறான முடிவுகளை எடுத்ததுண்டு; சில சமயம் முன்பின் யோசிக்காமல் சில சரியான முடிவுகளையும் எடுத்ததுண்டு. அன்றைக்கு அவளுடையக் காதலை மறுத்தது இரண்டாவது வகை என்றே நினைக்கிறேன்.

அன்றைக்கு மதன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : “சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

முதல் பாதி நிறைவேறி விட்டது! இரண்டாவது பாதி?

அதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்….
அருட்பெருங்கோ.

பின்குறிப்பு :

இது முழுக்க முழுக்க உண்மைக் கதையல்ல. கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதியதே! ஒரு கதை என்ற அளவிலேயே ரசிக்கவும்.

written by அருட்பெருங்கோ \\ tags:

May 23

எண்ணம், சொல், செயல்
மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டுமாம்.
காதலிக்காத யாரோ
சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

காதலிக்கிறவனுக்கு தானே
அந்த அவஸ்தை புரியும்!

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
தெரியாமலேக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தக் கணத்தில்
உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்?
எனக்குத் தெரியாது!

உன்னைக் காதலிக்கலாமா
என்று நினைத்தபோது,
காதலித்தால் உன்னைத்தான்
காதலிக்க வேண்டும் என்ற
எண்ணம் வந்தது எப்படி?
எனக்குத் தெரியாது!

காதலை
எண்ணத்திலும்,செயலிலும் நான் வைத்தேன்!
சொல்லில் மட்டும் நீ வையேன்!

ஆமாமடி!
காதலை நீயே சொல்லிவிடேன்!!
ப்ளீஸ்…

written by அருட்பெருங்கோ \\ tags:

May 23

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

மெல்ல எச்சிலை விழுங்கிவிட்டு சொன்னேன் : “இல்ல சாரதா எனக்கு பயமா இருக்கு..நாம வயசுக்கு மீறி யோசிக்கிறோம்னு நெனைக்கிறேன். எனக்கும் உன்னப் பிடிச்சிருக்குதான்…நான் இல்லனு சொல்லல…. ஆனா இந்த வயசுல இவள மாதிரி ஒரு wife வரணும்னு யோசிக்கலாமேத் தவிர இவளே எனக்கு wife-aa வரணும்னு முடிவெடுக்க தகுதியிருக்கான்னுத் தெரியல..இது இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு நடந்திருந்தா நானும் கண்டிப்பா சரின்னு சொல்லியிருப்பேன்..நமக்கெல்லாம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கவே இன்னும் எட்டு, பத்து வருஷத்துக்கு மேல இருக்கு..அதுக்குள்ள உனக்கும் என்ன வேணா நடக்கலாம்..எனக்கும் என்ன வேணா நடக்கலாம்..அதனால வேண்டாம் சாரதா..இதப் பத்தி இனிமேப் பேச வேண்டாம்” –

இதைத்தான் சொன்னேனா என்று தெரியாது, ஆனால் இதுமாதிரி தான் ஏதோ சொன்னேன்.

சொல்ல சொல்ல ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.அதற்கு மேல் அங்கிருந்தால் என்னை மாற்றிவிடுவாளோ என பயந்து,அவள் கையில் அந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டேன்.அன்று நான் தேர்வு எழுதாமலே வீடு வந்து சேர்ந்தேன்.அவளும் எழுதியிருக்க மாட்டாள் என்று தெரியும்.

அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தன. அவள் chemistry tuition வருவதை நிறுத்தி விட்டாள். அங்கு tuitionனே கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை.ஆனால் அவள் physics tuitionனை விட்டும், maths tuitionனை விட்டும் நின்று விட எனக்குப் பயமாய் இருந்தது. நான் நடந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொல்ல ஒவ்வொருவனும் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டான்.

“டேய் நீ என்ன லூசாடா? இவ்வளவு நாளா அவளப் பத்தி எழுதி வச்சது, எங்களுக்குத் தெரியாம அவ பின்னாடி சுத்துனதெல்லாம் அப்புறம் எதுக்கு? பெரிய இவனாட்டம் டயலாக் பேசிட்டு வந்திருக்க? “ – வினோத்.

“அது ஒன்னும் இல்லடா..அந்தப் பொண்ணே வந்து propose பண்ணியிருக்கில்ல..அதான் ஐயாவுக்கு ஏறிப் போச்சு…இவன் சொல்லி அந்தப் பொண்ணு மாட்டேன்னு சொல்லியிருந்தா அப்பப் புரிஞ்சிருக்கும்…” – செல்வா.

“ஏண்டா ஒன்னோட மொகரக் கட்டைக்கு அந்தப் பொண்ணு அதிகம்னு உனக்கேத் தெரியும்..அதுவே ஓக்கே சொல்லும்போது உனக்கென்னடா…மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பா…எல்லாம் first mark வாங்கறான் இல்ல அந்தத் திமிரு” – பாஸ்கர்.

மதன் மட்டும் அமைதியாய் இருந்தான்.

“ஏண்டா நீ மட்டும் சும்மா இருக்க நீயும் உன் பங்குக்கு ஏதாவது திட்டிடு” அவனைப் பார்த்து சொன்னேன்.

“மச்சி நீ சாரதாவ எந்தளவுக்கு லவ் பண்றனு எனக்குத் தெரியும்டா…அப்புறம் ஏண்டா மாட்டேன்னுட்ட?”

“நான் மட்டும் பிடிக்காமயாடா வேண்டாம்னு சொன்னேன்…அவ கேட்டப்பக் கூட நாளைக்கு சொல்றேன்னு சொல்லலாம்னு தான் நெனச்சேன்…ஆனா ஏதோ ஒரு பயத்துல பட்டுனு வேண்டாம்னு சொல்லிட்டேன்…அவங்க familyயும் நம்மள மாதிரி தான்டா…அவங்கப்பாக் கஷ்டப்பட்டுதான் படிக்க வச்சிட்டு இருக்கார்…எல்லா ட்யூஷன்லயும் அவ ஒரு installmentதான் fees கட்டியிருக்கா…அவள எஞ்சினியரிங் படிக்க வைக்கனும்னு அவங்கப்பாவுக்கு ஆசையாம்…அவளுக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா…எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா நான் செஞ்சது சரிதான்னு இப்பத் தோணுது.”

“அதெல்லாம் சரி மச்சி…ஆனா இவ்ளோ நாளா ஆச காட்டிட்டு அவளே வந்து கேட்கும்போது மாட்டேன்னு சொன்னா அவளுக்கும் கஷ்டமாதான இருந்திருக்கும்”

“அவளுக்குக் கஷ்டமாதான் இருந்திருக்கும் எனக்கும் புரியுது….எனக்குப் பிடிச்சவ எங்கிட்ட வந்து propose பண்ணும்போது, ஆசையிருந்தும் மாட்டேன்னு சொல்லிட்டு நிக்குறேனே…என்னோடக் கஷ்டம் ஏண்டா உனக்குப் புரியல??”

“சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

அவன் சொன்னதே நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவளை மறந்துவிட நினைத்தேன்.

ஆனால் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுதானே மறுபடியும் மறுபடியும் நினைவுக்கு வந்து தொலைகிறது.

அவளையே நினைத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒரு எண்ணம் வரும். ஒருவேளை அவளும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று.

அப்போதெல்லாம் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல எனக்கு உடல் பதறும்.

அவளைப் பற்றியே அதிகம் நினைத்துக்கொண்டிருந்ததால் படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது.ஏதோக் கடமைக்குப் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வின் போதுகூட தேர்வுக்கு முந்தைய நாளிலும் நான் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருந்தேன். எல்லாத் தேர்வுகளையும் ஆர்வமே இல்லாமல்தான் எழுதினேன்.

தேர்வு முடிவு வந்தபோது நான் எதிர்பார்த்த மாதிரியே என் வீட்டிலும்,பள்ளியிலும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே மதிப்பெண் வாங்கியிருந்தேன்.

“என்னப்பா நீ centum வாங்குவேன்னு எதிர் பார்த்தா இப்படி மார்க் கொறஞ்சுடுச்சே” – மூன்று ட்யூஷனிலும் மாஸ்டர்கள் இதையே சொல்ல ஏண்டா அவர்களிடம் ரிசல்ட் சொல்லப் போனோம் என்று இருந்தது.

அப்புறம் வாங்கிய மார்க்குக்கு ஏதோ ஒரு காலேஜில் ஏதோ ஒரு க்ரூப் கிடைக்க அதில் சேர்ந்தேன்.

புது இடம். புது நண்பர்கள் என பழசை மறக்க ஆரம்பித்த சூழல் உருவாகியது.கல்லூரியிலும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என பெண்களிடம் பேசுவதையேத் தவிர்த்தேன்.

என்னைப் போலவே இருந்தவர்கள் ஒன்று கூட ஒரு சிறிய நட்பு வட்டம் உருவானது. அருமையான நினைவுகளோடு அதிவேகமாய்க் கரைந்துபோனது ஐந்தாண்டுகள். கல்லூரியின் பெயரால் இறுதியாண்டு படிப்பு முடியுமுன்பே ஒரு வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்ந்து ஒரு வருடம் வேலையில் மூழ்க அவளைப் பற்றி நினைப்பதுக் குறைந்தது. எப்போதாவது பழைய நண்பர்களிடம் தொலைபேசும்போது நினைவுபடுத்துவார்கள்.கொஞ்ச நேரம் மனம் பழைய நினைவில் மூழ்கினால் வேலை என்னை இழுக்கும். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் இப்படி மறந்துகொண்டிருக்க, மறுபடியும் ஊருக்கு செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.

அண்ணன் திருமணத்திற்காக நான் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குப் போயிருந்தேன்.

ஒரு நாள் மாலையில் , திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜோஸப் மாஸ்டர் வீட்டுக்குப் போயிருந்தபோது மாஸ்டருடைய மனைவிதான் இருந்தார். மாஸ்டர் இன்னும் வராததால் என்னை மேலேக் காத்திருக்க சொல்லி சொல்ல, நான் மேலே ட்யூஷன் ரூமுக்குள் நுழையப் போனேன்.

அப்போது மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.

(நிறைவுப்பகுதி )

written by அருட்பெருங்கோ \\ tags: ,