Nov 30

நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…

நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !

written by அருட்பெருங்கோ

Nov 29

அதிகாலை வேளையில்
உனக்காகத் தான்
நடக்க ஆர்ம்பித்தேன்

சில நேரம் தென்றலாய்த்
தேகம் தீண்டுகிறாய்

சில நேரம் புயலாய்ப்
புரட்டிப் போடுகிறாய்

வாரி விட்டத் தலைமுடியை
நீ கலைத்து மகிழ்வதையும்

வண்டியில் போகும்போது
நீ உரசி மோதுவதையும்

விரும்பி இரசிக்கிறேன்

உலகின் எந்த மூலைக்குப் போனாலும்
உன் முகம் தான்
உன் ஸ்பரிசம் தான்

நாட்கணக்காய் உண்ண மறந்தாலும்
நொடிப்பொழுதும் உனை மறந்தேனா?

உன்னையே உயிர் மூச்சாகக் கொண்டேன்

சாகும் வரையும் உன்னையே சுவாசித்திருப்பேன்

காற்றே!

written by அருட்பெருங்கோ \\ tags:

Nov 29

ஈராயிரம் ஆண்டுகள்
அவிழ்க்க முடியவில்லை

மூன்று முடிச்சு!

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Nov 29

அந்த மூன்று முடிச்சுக்கள் என் குரல்வளையை நெரிக்கும்
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் – தாலி கட்டிக் கொள்ள…

வீட்டுச்சிறையின் கைதிக்கான கைவிலங்குதான் அது
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் – வளையல் போட்டுக் கொள்ள…

பின் தூங்கி முன் எழ வேண்டுமா ? எழுகிறேன்…
கணவனை கடவுளாகத் தொழ வேண்டுமா ? தொழுகிறேன்…

எல்லாப் பெண்களைப் போலவும்
அடிமையாக வாழ சம்மதிக்கிறேன்…

யாரேனும் ஏற்றுக்கொண்டால்…

நன்றியுடன்,
ஒரு விதவை.

written by அருட்பெருங்கோ \\ tags:

Nov 27



ஈழ விடுதலைக்கு
உயிர்களை உரமாக்கிய
மாவீரர்கள் அனைவருக்கும்
அஞ்சலி!

படங்கள் : நன்றி – கூகிள்

written by அருட்பெருங்கோ \\ tags: