கவிதை ஆறு ஒரு காதல் பயணம் - 5
Jul 26

உனக்காக நான் தவமும் இருக்கவில்லை…
எனக்காக நீ வரமும் தந்துவிடவில்லை…

நாம் ஈருடல் ஓருயிரல்ல!
நம் உடலும் இரண்டுதான்!
உயிரும் இரண்டுதான்!
உணர்வுகளும் அதைப் போலவே!

நம் நான்கு கண்களும்
ஒரேக் கனவைக் காணுவதில்லை!
உன் கண்ணில் உன் கனவுகள்..
என் கண்ணில் என் கனவுகள்..

நான்/நீ நினைப்பதை உ/எ ன்னால்
கண்டு பிடிக்கவும் முடியவில்லை!
மௌனத்தின் அர்த்தம் புரிந்து கொள்ள
நாம் ஒன்றும் ஞானிகளுமல்ல!

நம் ரசனைகளும் ஒன்றாகவே இல்லை!
எனக்குப் பிடித்தது எல்லாமே உனக்குப் பிடிக்கவில்லை!
உனக்குப் பிடித்தது எல்லாமே எனக்கும் பிடிக்கவில்லை!

நிறத்தில் மட்டுமல்ல
கருத்திலும் நாம் ஒரே மாதிரியில்லை!

என்னைப் போல நீ இல்லை!
நிஜமாய்,
என்னைப் போல நீ இல்லவே இல்லை!!

ஆனாலும் உன்னை நான் காதலிக்கிறேன்! …காதலிப்பேன்!

என்னை என் குறைகளோடு சேர்த்தே நேசிப்பவள் நீ !
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேனடி….
அதற்காகவே உன்னை அதிகமாய்க் காதலிப்பேன் நான்!

புனிதமாக
வாழ்த்தி வணங்க
நம் காதல் ஒன்றும்
தெய்வீகமானது அல்ல!

இயல்பாக வாழ்ந்து மகிழ,
அது யதார்த்தமானது…
மிக மிக யதார்த்தமானது!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

2 Responses to “யதார்த்தமானது…காதல்!”

  1. சத்தியா Says:

    “புனிதமாக
    வாழ்த்தி வணங்க
    நம் காதல் ஒன்றும்
    தெய்வீகமானது அல்ல!

    இயல்பாக வாழ்ந்து மகிழ,
    அது யதார்த்தமானது…
    மிக மிக யதார்த்தமானது!”

    உண்மையான வரிகள் அருள்!
    நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் கவிதை காண்பதில் சந்தோசம்.

  2. அருட்பெருங்கோ Says:

    மிக்க நன்றி சத்தியா..

    வாசித்து விட்டுக் கருத்தும் சொன்னதற்கு!

Leave a Reply