உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவோமா?
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்
பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.
உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!
பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய் உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா?
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!
கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!
பிறந்தநாளை எப்போதும்
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?
தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா?![]()
ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!
நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?
அழகப்பன் என்று!
உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய்!
உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!
நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!
என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.
உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாய்.
அழுகையோடு பிறந்தாயா?
அழகோடு பிறந்தாயா?
“…..”
( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
January 1st, 2007 at 11:33 pm
hi arul many many happy returns of the day
January 2nd, 2007 at 1:58 am
எப்படிங்க உங்களால மட்டும் முடியுது!!
எல்லாமே ரொம்ப அருமை… ரசிக்கும்படியான தொகுப்பு!
என்னை உங்க ரசிகனாக்கிடீங்க!
January 2nd, 2007 at 2:04 am
இந்த வார கவிதை “பனிப்போர்” அருமை!!
அனுபவிச்சு எழுதுரீங்க!
January 2nd, 2007 at 6:43 am
எப்பிடியப்ப இப்பிடி எழுதுறிங்க என்ன ரகசியம் இருக்கிறது சொல்லிதாங்களேன் என்னைப் போன்ற கிறுக்கன்களும் கவிஞனாகட்டுமே மிகவும் ரசித்தேன் அத்தனையும் அருமை அனுபவிச்சு எழுதி இருக்கிங்கா (க.க.க.போ)
January 2nd, 2007 at 12:59 pm
ம்.. இப்படியெல்லாம் பெனாத்திட்டு, கல்யாணத்துக்கப்புறம் சில வருசங்களில் பிறந்தநாளையே மறந்துடுங்க.. அப்புறம் இருக்கு உங்களுக்கு வேட்டு :))
//ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய் நீ!//
இதை பத்திரமா சேமிச்சு வைங்க. அவங்களுக்கு ஒரு 40 வயசானப்புறம் ரொம்ப உபயோகமா இருக்கும் :))
January 2nd, 2007 at 1:15 pm
“பிறந்த நாள் வாழ்த்து!” கவிதைகள் எல்லாம் நல்ல கவிதைகள் அருள்!
ஆனாலும்…
“உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்”…
என்று கூறி அழகாக முடித்த விதம் அருமை! வாழ்த்துக்கள் அருள்!
January 2nd, 2007 at 5:50 pm
அன்பு அருட்பெருங்கோ…
காதலியின் வயதை கவிதையில் சொல்லிடிங்க.
கலக்குறிங்க..
January 2nd, 2007 at 10:44 pm
/ hi arul many many happy returns of the day/
நண்பா கார்த்திக்,
இன்னைக்கு யாருக்கும் பிறந்த நாளெல்லாம் கிடையாது…
எல்லாரும் புத்தாண்டு வாழ்த்து பதிவு போடுறாங்களே நாம வித்தியாசமா(?)ப் போடுவோம்னு தான் இந்தப் பதிவு…
இருந்தாலும் உங்க வாழ்த்த என்னோடப் பிறந்த நாளுக்கு இப்பவே சொன்ன மாதிரி எடுத்துக்கறேன்
January 2nd, 2007 at 11:05 pm
/எப்படிங்க உங்களால மட்டும் முடியுது!!
எல்லாமே ரொம்ப அருமை… ரசிக்கும்படியான தொகுப்பு!/
நன்றி கார்த்திக்…
/என்னை உங்க ரசிகனாக்கிடீங்க!/
நானும் கவிதைகளின் ரசிகன் தான்!!!
/இந்த வார கவிதை “பனிப்போர்” அருமை!!/
நன்றிங்க… குறிப்பிட்டு சொன்னதுக்கு!
/அனுபவிச்சு எழுதுரீங்க!/
நீங்களும் தான் அனுபவிச்சு ரசிக்கிறீங்க!!!
January 3rd, 2007 at 1:03 am
/எப்பிடியப்ப இப்பிடி எழுதுறிங்க என்ன ரகசியம் இருக்கிறது சொல்லிதாங்களேன் என்னைப் போன்ற கிறுக்கன்களும் கவிஞனாகட்டுமே மிகவும் ரசித்தேன் அத்தனையும் அருமை அனுபவிச்சு எழுதி இருக்கிங்கா (க.க.க.போ)/
என்னமோ இ-கலப்பை இருக்கிற புண்ணியத்துல உ(எ)ழுதுகிட்டு இருக்கோம்…
ரகசியமெல்லாம் ஒன்னுமில்ல அகத்தியன்…அலுவலகத்தில வேலையக் கொடுத்தா நாம ஏன் இதையெல்லாம் பண்ணப் போறோம்?
நானும் கிறுக்கிட்டுதானே இருக்கேன்? அப்ப நானும் கிறுக்கன் தான்!!
January 3rd, 2007 at 5:03 am
அருட்பெருங்கோ, அட்டகாசமான கவிதைகள் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். இதை விட சிறந்த பரிசு ஒரு காதலிக்கு கண்டிப்பாக குடுக்க முடியாது. ஒன்னோன்னும் பட்டாசு கிளப்புது!
“ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவோமா?
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய் நீ!
என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை. “
இவையெல்லாம் ஓ போட வைத்தவை
பை தி வே, உங்க தலைவிக்கு 23 வயசு ஆகுதோ? ஹி ஹி ஹி
January 3rd, 2007 at 6:05 am
வாங்க சேதுக்கரசி,
//ம்.. இப்படியெல்லாம் பெனாத்திட்டு, கல்யாணத்துக்கப்புறம் சில வருசங்களில் பிறந்தநாளையே மறந்துடுங்க.. அப்புறம் இருக்கு உங்களுக்கு வேட்டு :))//
கல்யாணத்துக்கு அப்புறம் ஒருவேளை பிறந்தநாள மறந்துட்டா, அது என்னோடப் பிறந்தநாளா இருக்கும்!!! :))
//ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய் நீ!//
//இதை பத்திரமா சேமிச்சு வைங்க. அவங்களுக்கு ஒரு 40 வயசானப்புறம் ரொம்ப உபயோகமா இருக்கும் :)) //
கண்டிப்பா!!! ஒருத்தர் மேல எவ்வளவு அன்பு செலுத்துறோம்ங்கறதப் பொறுத்து தான அவங்க நமக்கு எவ்வளவு அழகாத் தெரியறாங்கங்கறது இருக்கு?
40 , 50 வயசுல அன்பு அதிகமாதான் ஆகும்ங்கறது என்னோட எண்ணம் :))
January 3rd, 2007 at 6:11 am
/”பிறந்த நாள் வாழ்த்து!” கவிதைகள் எல்லாம் நல்ல கவிதைகள் அருள்!/
நன்றி சத்தியா!!!
/ஆனாலும்…
“உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்”…
என்று கூறி அழகாக முடித்த விதம் அருமை! வாழ்த்துக்கள் அருள்!/
“பெயரேக் கவிதை போல இருக்கிறது” என்ற ஒருக் கருத்தை வைத்து எத்தனையோக் கவிதைகள் எழுதலாமே!!!
நானும் வேவ்வேறு வடிவங்களில் இதையே எழுதியிருக்கேன்… (அரைச்ச மாவையே அரைக்கிறது)
January 3rd, 2007 at 6:14 am
அழகான கவிதைகள் அருட்பெருங்கோ…
என்றாலும் என்னை மிகவும் ரசிக்க வைத்த வரிகள் இவை,
/*பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய் உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா? */
/*மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!*/
/*தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!*/
/*நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?
அழகப்பன் என்று*/
/*ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய் நீ!*/
//இங்கே கண்டிப்பாக நீ என்பது தேவையா?அது இல்லாமலேயே பொருள்தருமே
/*என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.*/
/*அழுகையோடு பிறந்தாயா?
அழகோடு பிறந்தாயா?*/
/*உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!*/
கடைசிக் கவிதை மிக அருமை
கல்லூரியில் என் தோழியின் (கண்டிப்பாக அவள் என் காதலி அல்ல) பிறந்தநாள் அன்று அவளுக்கு கொடுத்த கிறுக்கல் ஒன்று நியாபகத்திற்கு வருகிறது உங்கள் அனுமதியுடன் இங்கே :
இன்றுமுதல் - என்
கவிதைகளின்
வயது
இருபத்து ஒன்று!
January 3rd, 2007 at 6:19 am
முந்தய பின்னூட்டத்தில் சொல்ல மறந்தது:
1.அடுத்த பிறந்தநாள் வரும்போது எழுதும் கவிதைகளோடு இதை சேர்த்து புத்தகமாக்கிவ்டுங்கள் இதே தலைப்பில்…
2.புகைப்படக் கவிதையும் அருமை படம் பெரியதாக பார்க்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
January 3rd, 2007 at 7:10 am
மிக மிக அருமை! மனதை மிக இதமாகத் தொட்டுச் சென்றன. எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு கவிதையாகக் கவிதை எழுத முடிகிறது?
புத்தகம் ஏதும் வெளியிட்டுள்ளீர்களா?
January 4th, 2007 at 5:15 am
/அன்பு அருட்பெருங்கோ…
காதலியின் வயதை கவிதையில் சொல்லிடிங்க.
கலக்குறிங்க.. /
ஐயா கோபிநாத்,
அதையும் எண்ணிட்டு இருந்தீங்களா?
என்னால இவ்வளவுதான் யோசிக்க முடிஞ்சது! இன்னும் கொஞ்சம் யோசிச்சிருந்தா இன்னும் ஒன்னு ரெண்டு சேர்த்திருப்பேன்… அவ்வளவே!
January 4th, 2007 at 8:00 am
// ( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)
//
கலக்கல்…….
இதுதான் highlight-ஏ….:)
January 4th, 2007 at 10:29 pm
//அதையும் எண்ணிட்டு இருந்தீங்களா?//
நானும் தான் எண்ணினேன் அருட்பெருங்கோ!
//இன்னும் கொஞ்சம் யோசிச்சிருந்தா இன்னும் ஒன்னு ரெண்டு சேர்த்திருப்பேன்//
பார்த்து.. ரொம்ப சேர்க்காதீங்க. வயசை ஏத்திட்டீங்கன்னு கோவிச்சுக்கப்போறாங்க
January 4th, 2007 at 11:42 pm
//ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!//
அழகோ அழகு அருள் !! :)))
அனைத்தும் அருமை !!
January 4th, 2007 at 11:45 pm
ரசித்துப் படித்தமைக்கு நன்றி ப்ரியன்!!!
/*/ /*ஒவ்வொரு பிறந்த நாளிலும் வயதோடு, அழகையும் ஏற்றிக் கொள்கிறாய் நீ!*/ //இங்கே கண்டிப்பாக நீ என்பது தேவையா?அது இல்லாமலேயே பொருள்தருமே /
சுருக்கப் பட்டு விட்டது ப்ரியன்
/கடைசிக் கவிதை மிக அருமை கல்லூரியில் என் தோழியின் (கண்டிப்பாக அவள் என் காதலி அல்ல) பிறந்தநாள் அன்று அவளுக்கு கொடுத்த கிறுக்கல் ஒன்று நியாபகத்திற்கு வருகிறது உங்கள் அனுமதியுடன் இங்கே :
இன்றுமுதல் –
என் கவிதைகளின் வயது
இருபத்து ஒன்று!/
உங்கள் பிறந்த நாள் கவிதைகளையும் எடுத்து விடுங்களேன்?
January 4th, 2007 at 11:48 pm
/1.அடுத்த பிறந்தநாள் வரும்போது எழுதும் கவிதைகளோடு இதை சேர்த்து புத்தகமாக்கிவ்டுங்கள் இதே தலைப்பில்…/
ஆர்வத்தைத் தூண்டியமைக்கு நன்றி ப்ரியன்… கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்!!!
/2.புகைப்படக் கவிதையும் அருமை படம் பெரியதாக பார்க்க முடியுமானால் நன்றாக இருக்கும். /
எனக்கு தொழில்நுட்ப அறிவு கொஞ்சம் குறைச்சல்… கூகிளாண்டவரிடம் தான் கையேந்தவேண்டும்!!!
January 7th, 2007 at 11:06 pm
/அருட்பெருங்கோ, அட்டகாசமான கவிதைகள் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். இதை விட சிறந்த பரிசு ஒரு காதலிக்கு கண்டிப்பாக குடுக்க முடியாது. ஒன்னோன்னும் பட்டாசு கிளப்புது!/
ரொம்ப ரொம்ப நன்றி பிரேம்!!!
/பை தி வே, உங்க தலைவிக்கு 23 வயசு ஆகுதோ? ஹி ஹி ஹி/
இல்ல தலைவா எனக்குதான் 23 ஆகுது ஹி ஹி ஹி
January 7th, 2007 at 11:09 pm
வாங்க கன்னி!!
/மிக மிக அருமை! மனதை மிக இதமாகத் தொட்டுச் சென்றன./
முதல் வருகைக்கு நன்றீ!!!
/எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு கவிதையாகக் கவிதை எழுத முடிகிறது?
புத்தகம் ஏதும் வெளியிட்டுள்ளீர்களா?//
கவிதையைக் காதலிப்பதால் தான்!!! :))
புத்தகம் இனிமேல்தான் வெளியிடனும்!!!!
January 7th, 2007 at 11:59 pm
// நானும் தான் எண்ணினேன் அருட்பெருங்கோ!//
பாருங்க எல்லாரையும் கொஞ்ச நேரம் “எண்ணி”ப் பார்க்க வச்சிருக்கேன்
// பார்த்து.. ரொம்ப சேர்க்காதீங்க. வயசை ஏத்திட்டீங்கன்னு கோவிச்சுக்கப்போறாங்க
//
யக்கோவ்…ஆள விடுங்க சாமிகளா… நான் கொஞ்ச நாளைக்கு கவிதையே எழுதல இனிமே
கதை எழுதப் போறேன் போங்க!!!!
January 8th, 2007 at 5:35 am
வாங்க நவீன்,
/
அழகோ அழகு அருள் !! :)))
அனைத்தும் அருமை !!/
நன்றி நவீன்!
January 8th, 2007 at 1:28 pm
//யக்கோவ்…//
நோ யக்கோவ்ஸ் ப்ளீஸ். நன்றி.
January 8th, 2007 at 10:23 pm
/நோ யக்கோவ்ஸ் ப்ளீஸ். நன்றி./
எங்களையெல்லாம் கொஞ்சம் இளமையாக் காட்டிக்கலாம்னு பார்த்தா விட மாட்டீங்க போல!!!
January 16th, 2007 at 2:38 am
எதுவும் சொல்வதற்கு இல்லை………அனுபவிப்பதற்கு நிறைய இருக்கிறது…..காதல்……….காதல்………..தான்
January 16th, 2007 at 8:42 am
வாங்க கவிதை விரும்பி,
/ எதுவும் சொல்வதற்கு இல்லை………அனுபவிப்பதற்கு நிறைய இருக்கிறது/
உண்மைதான்!!!
/காதல்……….காதல்………..தான்//
ரஜினி மாதிரி பேசறீங்க :)))
May 10th, 2007 at 7:12 pm
really superbbbbbbbbbb
எல்லாரும் கேட்ட அதே கேள்விதான் நானும் கேட்கிறேன்”எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்”
உண்மையான காதல் இருந்தால் மட்டுமே இயல்பான ஆர்ப்பாட்டமில்லா
கவிதை வரும்
“உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்”
ரொம்ப ஓவராத் தெரியல இது?
“மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்”
அது என்ன அழகுக்காலம்
உங்கள் காதலி ரொம்ப கொடுத்துவைத்தவள்
“( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)”
அது மட்டும் ஏன் அவள் நிரப்ப வேண்டும்?உங்களது பெயரையும் சேர்த்துபோட்டுக்கொள்ளுங்கள்
அழகிய கவிதை ஆகிவிடும்