+2 காதல் - 3 +2 காதல்- 5
May 22

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று

Chemistry tuition :

Chemistry tuition-இல் தான் எனக்குள்ளும் அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. நான் எப்போதும் அமரும் மூலைக்கு எதிர் பக்கமாய் என் பார்வையில் படுமாறுதான் அவள் உட்காருவாள். ட்யூஷன் நடந்துகொண்டிருக்கும்போதே அடிக்கடி அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்ப்பதும், ஜடையை அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தூக்கிப் போடுவதும் அவளுக்கு வழக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் என்னுடைய அதிகபட்ச எதிர்வினை நோட்டில் எதையாவதுக் கிறுக்கி வைப்பதுதான்.

ஒரு நாள் ட்யூஷன் தொடங்குவதற்கு முன் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கீழே சாலையை பார்த்தபடி நின்றிருந்தேன்.lady bird-இல் ஒரு lady bird – ஆக அவள் வந்து கொண்டிருந்தாள். சாலையில் வரும் அவள் மேலே நிற்கும் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால் நான் அவளையே மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மாஸ்டர் வீட்டுக்கு முன்னால் மிதிவண்டியை சாலையில் நிறுத்தியவள், என் மிதிவண்டிக்கு அருகில் இருந்த மிதிவண்டியை தள்ளி நிறுத்திவிட்டு அவளுடையதைக் கொண்டுவந்து என்னுடையதை ஒட்டி நிறுத்தினாள்.என் பாதங்கள் தரையை விட்டுக் கொஞ்சமாய் மேல் எழும்புவதைப் போல் இருந்தன.வண்டியில் இருந்து பையை எடுத்தவள் சடாரென மேலேப் பார்த்தாள். எனக்கு இதயமே வெடித்துவிடுவது போல் இருந்தது.உடனேத் திரும்பிக் கொண்டேன்.நான் பார்த்துக்கொடிருந்ததை அவள் பார்த்திருப்பாளோ என்றே மனம் யோசித்துக் கொண்டிருந்தது.அன்று ட்யூஷன் முடியும் வரை நான் அவளை நேராய்ப் பார்க்க வில்லை.அவளும் எதுவும் பேசவில்லை.

அதற்குப் பிறகு ஒரு மாதத்தில் அவளோடு மெல்லப் பேச ஆரம்பித்திருந்தேன். என்னோடு இருக்கும் நேரங்களில் என் நண்பர்களோடும் பேசுவாள். அதன் பிறகு என் நண்பர்களுக்கு அவள் மேல் ஒரு மரியாதையே வந்திருந்தது. நான் இல்லாத சமயங்களில் என்னைப் பற்றி அவளிடம் அதிகமாகவே அளந்துவிட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் என்னிடம் வந்தவள், “நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா?” என்று கேட்டாள்.”ஏதோ எழுதுவேன்,,ஆனா அத கவிதைன்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்றேன். “நாங்கூட நல்லா வரைவேன்…ஆனா அத ஓவியம்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்று சொல்லி சிரித்தாள். அதன்பிறகு ட்யூஷனுக்கு நேரத்திலேயே வந்துவிட்டால் போர்டில் அவள் எதையாவது வரைய பக்கத்தில் நானும் எதையாவது கிறுக்க, ட்யூஷன் ஆரம்பிக்கும் வரை மனம் சந்தோசத்தில் திளைத்திருக்கும்.

நான் ட்யூஷனுக்கு நோட் எடுத்து செல்வது, எதையாவது கிறுக்கவும், வரையவும் தான். பாடம் சம்பந்தமான நோட்ஸ் எல்லாமே புத்த்கத்திலேயே அங்கங்கே சின்ன சின்னதாய் எழுதிவிடுவேன். என்னுடையப் புத்தகத்தில் அச்சில் இருப்பதை விட நான் எழுதியிருப்பது அதிகமாக இருக்கும். ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு, அவளும் இனிப் புத்தகத்திலேயே எழுதப் போவதாகவும், இதுவரை நான் எழுதியதைப் பார்த்து எழுதிக்கொள்ள என் புத்தகம் வேண்டும் என்று வாங்கிசென்றாள். போகும்போது அங்கங்கே கிழிந்து தொங்கியபடி போன என் புத்தகம் திரும்பி வரும்போது கிழிந்த இடமெல்லாம் ஒட்டப்பட்டு, வெளியிலும் அட்டைப் போட்டு அழகாய் வந்து சேர்ந்தது. நோட்டில் கிறுக்கினேன் :

“கிழிந்த புத்தகத்தை ஒட்டித் தந்தாள்
நன்றாக இருந்த இதயத்தைக் கிழித்துவிட்டாள்”
(நான் இப்ப எழுதுறக் கவிதை(?)யேக் கேவலமா இருக்கும்போது, இது அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி எழுதினது, ரொம்பக் கேவலமாதான் இருக்கும்..பொறுத்துக்குங்க!)

அதற்குப் பிறகு ட்யூஷன் நேரத்தில் அவள் என்னைப் பார்ப்பதை நிறுத்தியிருந்தாள். காரணம், நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பேன்.அவள் என்னைப் பார்க்காத நேரங்களில் நானும் நோட்டில் அவளை வரைய ஆரம்பித்தேன், அதற்குப் பிறகுதான் தெரிந்தது எனக்கும் ஓரளவுக்கு வரைய வரும் என்று. நான் வரைவது அழகாக இருப்பதாக சொல்லி என்னைப் பாராட்டினார்கள் என் நண்பர்கள். அழகாக வரைவது எல்லாம் வரைபவன் கையில் மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அது யாரைப் பார்த்து வரைகிறோம் என்பதைப் பொறுத்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் அவள் அழகுக் கூடிக்கொண்டே இருந்தது. அவள் குரலும் நாளுக்கு நாள் இனிமையாகிக் கொண்டே வந்தது.நான் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் என்று எனக்கு மெதுவாய் புரிந்தது. வியாழன், வெள்ளி இரு நாளும் பள்ளி முடிந்து தாவணியில் வரும் பெண்கள், சனிக்கிழமை மட்டும் சுடிதாரில் வருவார்கள். அன்று சனிக்கிழமை. வழக்கம்போல் அவள் வரும் சாலையில் கண்ணை வைத்துக் காத்திருந்தேன்.அழகாய் ஒரு கத்திரிப்பூ நிற சுடிதாரில் துப்பட்டா சிறகாய்ப் பறக்க ஒரு தேவதையைப் போல் வந்திருந்தாள்.

“என்ன மச்சி உன் ஆளு..தாவணியிலயும் அழகா இருக்கு..சுடிதார் போட்டாலும் பொருந்துது?” – மதன்.
மனம் அமைதியாய் இருந்தாலும் உதடு சொன்னது : “ இந்த சுடிதார் உண்மையிலேயே அவளுக்கு அழகா இருக்கில்ல?”
எல்லோரும் அமைதியாய் இருந்தபோதுதான் உணர்ந்தேன் நான் கொஞ்சம் அதிகப்படியாய்ப் பேசி விட்டதை.

ஆனால் அதன் பிறகு எல்லா சனிக்கிழமையும் அவள் அதே சுடிதாரில் வர ஆரம்பித்தாள். இந்த நான்கு பேரில் எவனோ சொல்லியிருக்க வேண்டும்.
“என்ன சாரதா..சனிக்கிழமைக்குன்னும் ஒரு யூனிஃபார்ம் வச்சிருக்க போலிருக்கு” – எனக்கும் கேட்குமாறு ஒரு நாள் சாரதாவிடம் கேட்டுவிட்டான் மதன்.
என்னைப் பார்த்துக் கொண்டே “நல்லாயிருக்குன்னு சில பேர் சொன்னாங்க… அதான்…” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
வழக்கம்போல கிறுக்க ஆரம்பித்தேன் :

அவள் மடியில் விழுந்த என் மனசு!

“நிலவைக் கிட்டேப் பார்க்க அவள் முகத்தருகே என் மனசுப் போக…
அவள் பார்வை மின்னல் தாக்கியதில் கண்களை அதுவும் மூடிக்கொள்ள…
அவள் கன்னக் குழியோத் தடுக்கி விட…
அந்தக் கூந்தல் அருவியில் என் மனசுத் தடுமாறி விழ…
விழுந்து சரிகையில் ஒரு கொடியை அதுவும் பற்றிக் கொள்ள…
அது அவள் இடையெனத் தெரிந்து பற்றியதையும் விட…
அங்கிருந்தும் விழுந்த என் மனசைத் தாமரைப் பூவைப் போலத் தாங்கிக்கொண்டது அவள் மடி!”

அரையாண்டுத் தேர்வுக்கு முன்பே ட்யூஷனில் எல்லாப் பாடமும் முடித்து விட்டிருந்தார் மாஸ்டர். நான் புத்தகத்தில் இருக்கும் எல்லா வேதிச்சமன்பாடுகளையும் (chemical equations) ஒரு நாள் தேர்வாக எழுதுவதாக சொல்லி அதை மொத்தமாக எழுதியும் காண்பித்தேன். பாராட்டிய மாஸ்டர் ,”very good..equations மட்டும் சரியா எழுதிட்டீங்கன்னாப் போதும்..மத்ததெல்லாம் அவ்வளவாப் படிச்சு பார்க்க மாட்டாங்க..ஈசியா மார்க் ஸ்கோர் பண்ணலாம்…சரி நீ examக்கு முன்னாடி ஒரு தடவ வந்து இதே மாதிரி எழுதிட்டுப் போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் எல்லோரிடமும் இதை அவர் சொல்ல, என்னிடம் வந்தாள் அவள். “ஒன்னு விடாம எல்லா equationனும் எழுதினியா? அந்தப் பேப்பர் கொஞ்சம் கொடேன்” என்று கேட்க, நான் எடுத்துக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவள்,”எல்லா equationனையும் ஒரே சமயத்துல refer பண்ண ஈசியா இருக்கும், இதத் தர்றியா நான் ஜெராக்ஸ் எடுத்துட்டுத் தர்றேன்” என்றாள். நானும் சரியென்றேன்.ஜெராக்ஸ் எடுத்து வந்தவள் ஜெராக்ஸ் காப்பியை என்னிடம் கொடுத்துவிட்டு நான் எழுதியதை அவள் எடுத்துப் போய் விட்டாள். அந்த பேப்பரில் நான் என்னுடைய பெயரை எழுதியிருந்தது ஜெராக்ஸ் காப்பியிலும் வந்திருந்தது, ஆனால் என் பெயருக்கு முன்னால் அவள் பெயர் பேனாவால் எழுதப் பட்டிருந்தது!

அதற்குப்பிறகு ட்யூஷனில் பாடம் என்று எதுவும் நடக்காது. எப்போது வேண்டுமானாலும் போய் இருக்கும் ஏதாவது ஒரு வினாத்தாளை எடுத்துத் தேர்வெழுதலாம். நான் கொஞ்ச நாளாக அதில் ஆர்வம் காட்டாமல் ட்யூஷனுக்குப் போகாமல் இருந்தேன். தினமும் காலையில் maths ட்யூஷனிலும், மூன்று நாட்கள் மாலையில் physics ட்யூஷனிலும் அவளைப் பார்த்தாலும் , மீதி மூன்று நாளும் மாலையில் அவளைப் பார்க்கால் இருப்பது எதையோ இழந்ததைப் போல இருந்தது. பிறகு நானும் chemistry தேர்வு எழுதப் போக ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம் தேர்வெழுதினால் ஒரு மணி நேரம் அவளோடுப் பேசிக்கொண்டிருப்பேன். அவள் வராத நாட்களில் தேர்வெழுதாமல் திரும்பியதும் உண்டு. வெளியில் சந்திக்கும்போதும் பேசிக்கொள்வது வழக்கமானது. என்னுடைய எல்லாப் பயணங்களும் அவள் வீட்டு சாலையைத் தொட்டேப் போயின.இப்படிப் போய்க்கொண்டிருக்கையில் ஒரு நாள் chemistry tuition மாடியில் வைத்து என்னிடம் அதைக் கொடுத்தாள். நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டக் காதல் கடிதம். நான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என்னை அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், படித்து முடித்து நான் நல்ல நிலைமைக்கு வருவேன் என்று நம்புவதாகவும், என்னுடைய ரசனையும், அவளுடையதும் ஒரே மாதிரி இருப்பதாகவும், இன்னும் இந்த மாதிரி நிறைய எழுதியிருந்தாள் ஆங்கிலமும், தமிழும் கலந்து. எனக்குப் படிக்கப் படிக்க திக் திக்கென்று மனம் அடித்துக் கொண்டிருந்தது. படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

(தொடரும்…)

அடுத்தப் பகுதி

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags: ,

36 Responses to “+2 காதல் - 4”

  1. Muthu Says:

    அருட்பெருங்கோ,
    மிக சுவாரசியமாய்ச் சொல்லிக்கொண்டே வந்து இப்படி சஸ்பென்சாய் நிறுத்திவிட்டீர்களே.. கடைசியில் சொன்னீர்களா இல்லையா?.

  2. அருட்பெருங்கோ Says:

    சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை முத்து,
    இது ஏற்கனவே என் நட்பு வட்டாரத்துக்கு மட்டும் அனுப்பிய மின்மடல் தொடர் நீளம் காரணமாக(வும்) நிறுத்தியிருக்கிறேன்…

    நாளைக்குள் அடுத்தப் பகுதியை வலையில் ஏற்றி விடுகிறேன்…

    வருகைக்கு நன்றி முத்து,

    அன்புடன்,
    அருள்.

  3. சிங். செயகுமார். Says:

    “அச்சில் இருப்பதை விட நான் எழுதியிருப்பது அதிகமாக இருக்கும். “

    சும்மா நச்சுன்னு இருக்கு போங்கா.

    “equations மட்டும் சரியா எழுதிட்டீங்கன்னாப் போதும்..மத்ததெல்லாம் அவ்வளவாப் படிச்சு பார்க்க மாட்டாங்க..ஈசியா மார்க் ஸ்கோர் பண்ணலாம்”

    ஆமா எல்ல வாத்தியாரும் இதையே சொல்லி ஒப்பேத்திடுராங்க!

    அடேய் தொட நடுங்கி பையா அப்புறம் என்னா ஆச்சு?

  4. பரணீ Says:

    நல்ல சுவாரசியமாக இருக்கிறது.
    கருப்பு கலரை கொஞ்சம் மாத்தரீங்களா, கண்ணு வலிக்குது :-),

  5. அருட்பெருங்கோ Says:

    //அடேய் தொட நடுங்கி பையா அப்புறம் என்னா ஆச்சு?
    //

    அடப்போங்கப்பு! நானும் நெறையக் கதைல “பயத்தில் தொடைகள் நடுங்கின” அப்படின்னுப் படிச்சுட்டு சிரிச்சிருக்கேன்…

    தொடை எப்படி நடுங்கும்னு…

    அன்னைக்கு எனக்கு நடுங்குச்சுப் பாருங்க..அப்பதான் நம்பினேன் :(

    அன்புடன்,
    அருள்.

  6. Anonymous Says:

    அருமையான காதல் அனுபவங்கள்.
    அனுபவித்து படித்தேன்.கருத்து
    கூறாமல் இருக்கமுடியவில்லைஅருள்!

    உங்கள் வரிகளும் எனது கருத்துகளும்.

    1.”ஒவ்வொரு நாளும் அவள் அழகுக் கூடிக்கொண்டே இருந்தது. அவள் குரலும் நாளுக்கு நாள் இனிமையாகிக் கொண்டே வந்தது.நான் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் .”

    /காதல் வந்ததால் தானே???????./

    2.1)என் மிதிவண்டிக்கு அருகில் இருந்த மிதிவண்டியை தள்ளி நிறுத்திவிட்டு அவளுடையதைக் கொண்டுவந்து என்னுடையதை ஒட்டி நிறுத்தினாள்.
    2.2)எல்லா சனிக்கிழமையும் அவள் அதே சுடிதாரில் வர ஆரம்பித்தாள்.
    2.3)”நல்லாயிருக்குன்னு சில பேர் சொன்னாங்க… அதான்…” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.”
    2.4)என் பெயருக்கு முன்னால் அவள் பெயர் பேனாவால் எழுதப் பட்டிருந்தது!.

    /ஆழமது ஆழமில்லை!சேரும் கடலும்
    ஆழமில்லை!ஆழமெது அய்யா????
    அந்த பொம்பளை மனசுதான்யா…/

    3)”என்னுடைய எல்லாப் பயணங்களும் அவள் வீட்டு சாலையைத் தொட்டேப் போயின.”

    /நதியின் பயணம் கடைசியில் கடைசியில் கரைசேர்வது தானே!!./

    4)அவள் மடியில் விழுந்த என் மனசு!

    “நிலவைக் கிட்டேப் பார்க்க அவள் முகத்தருகே என் மனசுப் போக…
    அவள் பார்வை மின்னல் தாக்கியதில் கண்களை அதுவும் மூடிக்கொள்ள…
    அவள் கன்னக் குழியோத் தடுக்கி விட…
    அந்தக் கூந்தல் அருவியில் என் மனசுத் தடுமாறி விழ…
    விழுந்து சரிகையில் ஒரு கொடியை அதுவும் பற்றிக் கொள்ள…
    அது அவள் இடையெனத் தெரிந்து பற்றியதையும் விட…
    அங்கிருந்தும் விழுந்த என் மனசைத் தாமரைப் பூவைப் போலத் தாங்கிக்கொண்டது அவள் மடி!”

    /அனுபவித்து எழுதிய கவிதை!!!!!/

    5)chemistry tuition மாடியில் வைத்து என்னிடம் அதைக் கொடுத்தாள். நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டக் காதல் கடிதம்.

    /கிளைமேக்ஸ் நெருங்கிட்டுதா??????/

    6)“என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள்.

    /ம்ம்!!!நீங்கள் என்ன சொன்னீர்கள்?./

    எதிர்பார்ப்புடன்,
    துபாய் ராஜா.

  7. அருட்பெருங்கோ Says:

    பரணீ,

    //நல்ல சுவாரசியமாக இருக்கிறது.//

    காதல்னாலே அப்படித்தாங்க…

    //கருப்பு கலரை கொஞ்சம் மாத்தரீங்களா, கண்ணு வலிக்குது :-), //

    கருப்புதான் எனக்குப் புடிச்சுக் கலரு டொக்கும்…டொக்கும்…

    அன்புடன்,
    அருள்.

  8. அருட்பெருங்கோ Says:

    ராஜா,

    /காதல் வந்ததால் தானே???????./
    காதலிக்கலாமா என்று ஆசை வந்ததாலும் என்று வைத்துக்கொள்ளலாம்

    /ஆழமது ஆழமில்லை!சேரும் கடலும்
    ஆழமில்லை!ஆழமெது அய்யா????
    அந்த பொம்பளை மனசுதான்யா…/
    ஆமாம்யா…ஆமாம்…

    /நதியின் பயணம் கடைசியில் கடைசியில் கரைசேர்வது தானே!!./
    கரை சேருமுன்னே வறண்டு போகும் நதிகளும் உண்டு.

    /அனுபவித்து எழுதிய கவிதை!!!!!/
    அப்ப அதக் கவிதைனே ஒத்துக்கிர்றீங்களா? உங்களுக்குப் பெரிய மனசுதான் போங்க!

    /கிளைமேக்ஸ் நெருங்கிட்டுதா??????/
    இன்னும் ரெண்டு பகுதி இருக்குங்க

    /ம்ம்!!!நீங்கள் என்ன சொன்னீர்கள்?./
    ஊகிச்சு வைங்க, அடுத்தப் பதிவுலத் தெரியதானப் போகுது!! :))

    அன்புடன்,
    அருள்.

  9. சிங்கை சிவா Says:

    நல்லா எழுதியிருக்கிறீங்க..

    பழைய நினைவுகள தட்டி எழுப்பிட்டீங்க…!!

    வாழ்த்துக்கள்!

  10. அருட்பெருங்கோ Says:

    சிவா,

    //நல்லா எழுதியிருக்கிறீங்க..
    //

    பாராட்டுக்கு நன்றிங்க!!!

    //பழைய நினைவுகள தட்டி எழுப்பிட்டீங்க…!!

    வாழ்த்துக்கள்!
    //

    உறவைத்துறந்து தூரத்தில் வாழும்போது நினைவுகள் தாம் மனதைத் துவண்டு விடாமல் தாங்கிப் பிடிக்கின்றன!!

    அன்புடன்,
    அருள்.

  11. நிலவு நண்பன் Says:

    எல்லா டியுசன் சென்டர்லையும் இப்படி காதல் கடிதம் கொடுப்பதற்கு ஒவ்வொருத்தர் இருப்பாங்களோ..?

    சுவாரசியமாய் இருக்கின்றது நண்பா..எப்பவுமே அடுத்தவங்க டைரியைப் படிக்கிறது சுவாரசியம்தான்..ம் இது டைரியைப் படிப்பது போன்று இருக்கிறது

  12. அருட்பெருங்கோ Says:

    வாங்க நிலவு நண்பன்,

    //எல்லா டியுசன் சென்டர்லையும் இப்படி காதல் கடிதம் கொடுப்பதற்கு ஒவ்வொருத்தர் இருப்பாங்களோ..?//

    டியூசன் செண்டர்ல எதைக் கத்துக்கறமோ இல்லையோ இந்தப் பாடம் நல்லா மனப்பாடமா ஆயிடுது..:))

    //சுவாரசியமாய் இருக்கின்றது நண்பா..எப்பவுமே அடுத்தவங்க டைரியைப் படிக்கிறது சுவாரசியம்தான்..ம் இது டைரியைப் படிப்பது போன்று இருக்கிறது//

    என்னோட வாழ்க்கையே ஒரு திறந்தப் புத்தகம் நண்பன்!! :))))))

    அன்புடன்,
    அருள்.

  13. Anonymous Says:

    எசப்பாட்டும் நல்லாயிருக்கு அருள்!.
    (என்னோட கருத்துக்கு உங்கள் பதில்)

    1)கிளைமேக்ஸ் நெருங்கிட்டுதா??????/
    இன்னும் ரெண்டு பகுதி இருக்குங்க

    /அ)இன்னும் ரெண்டு பகுதி இருக்கா.ஓ.கே.ஓ.கே.
    ஆ)இன்னும் ரெண்டு பகுதிதான் இருக்கா??????/

    2)/நதியின் பயணம் கடைசியில் கடைசியில் கரைசேர்வது தானே!!./
    கரை சேருமுன்னே வறண்டு போகும் நதிகளும் உண்டு.

    /அய்யய்யோ!!சோகமா முடிக்கப்போறீங்களா??????/

    3)அனுபவித்து எழுதிய கவிதை!!!!!/
    அப்ப அதக் கவிதைனே ஒத்துக்கிர்றீங்களா? உங்களுக்குப் பெரிய மனசுதான் போங்க!

    /என்னோட பதிவுகளையும் ஒத்துக்க
    பெரிய மனசோட தயாராயிருங்க!!!!./

    அன்புடன்,
    துபாய் ராஜா.

  14. அருட்பெருங்கோ Says:

    //என்னோட பதிவுகளையும் ஒத்துக்க
    பெரிய மனசோட தயாராயிருங்க!!!!.//

    ம்ம்…சீக்கிரம் ஆரம்பிங்க!!!

    ஆவலுடன்,
    அருள்.

  15. Killivalavan Says:

    Press “Ctrl + A” button to select all text in the page and background will appear as white and text will appear as blue. By this way you can enjoy your reading.

  16. அருட்பெருங்கோ Says:

    பரணீ,

    உங்கப் பிரச்சினைய கிள்ளிவளவன் தீர்த்து வச்சிட்டாரு பாருங்க!!!

    கிள்ளி,

    உங்களுக்கு எத்தனைப் பொற்காசுகள் வேணும் சொல்லுங்க அள்ளித்தர்றேன் :))

    கதையப் பத்தி ஒன்னுமே சொல்லாமப் போறீங்களே!!

    அன்புடன்,
    அருள்.

  17. sivagnanamji(#16342789) Says:

    ஆத்மார்த்தமான காதல் அவ்வளவு
    சுலபமா ஜெயிக்காதே!
    அடி எப்ப?அடுத்த இடுகையா அல்லது அதற்கும் அடுத்த இடுகையிலா?
    ஆஸ்பிடலா? இல்லே வென்னீர் ஒத்தடமா?

  18. சந்தோஷ் aka Santhosh Says:

    நாளைக்கு கண்டிப்பா வந்து படிப்பேன் கதையை போடுவிங்க தானே?

  19. nagaraj Says:

    எங்கோ ஏதோ அடுத்த ஆட்டோகிராப் மாதிரி இருக்கு நண்பா…

    ஆம் நண்பான்னு கூறுவதில் அர்த்தம் உண்டு , உங்களை போல என் நட்பு வட்டாரத்திலும் நடந்தது , அதன்பிறகு அது என்ன ஆனதுன்னு கூட தெரியலை, அது போல தான் உங்களுதும்….முடிஞ்ச எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க…nagacbe@gmail.com from http://www.muthamilmantram.com

  20. Gopalan Ramasubbu Says:

    Wowww!Excellent flow அருள் .

  21. பிரதீப் Says:

    அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்கிறதிலதாங்க ஆர்வம்.
    நல்ல தொடர்னு சொல்லக் கூடிய அளவு தெளிவான நடை, தேவையான சஸ்பென்ஸூன்னு பின்றீங்க.

  22. தேவ் | Dev Says:

    நாளைய பதிவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்:)

  23. Prabu Raja Says:

    மிக நல்ல பதிவுகள். பகிர்ந்து கொள்வதற்கு நன்றி

  24. செந்தழல் ரவி Says:

    //என்னுடைய எல்லாப் பயணங்களும் அவள் வீட்டு சாலையைத் தொட்டேப் போயின//

    கவித கவித…

  25. Naveen Prakash Says:

    அமராவதி ஆற்றில் மிதந்தது எனது மனசு !!

  26. அருட்பெருங்கோ Says:

    சந்தோஷ்,

    //நாளைக்கு கண்டிப்பா வந்து படிப்பேன் கதையை போடுவிங்க தானே?//

    நாளைக்குக் கண்டிப்பாப் போட்டுட்றேன்..

    கோபாலன்,

    /Wowww!Excellent flow அருள் . /

    நன்றிங்க கோபால்..எல்லாம் முடிஞ்ச பின்னாடி சொல்லுங்க எப்படி இருக்குன்னு :))

    அன்புடன்,
    அருள்.

  27. அருட்பெருங்கோ Says:

    நாகா,

    //எங்கோ ஏதோ அடுத்த ஆட்டோகிராப் மாதிரி இருக்கு நண்பா…//

    ம்ம்..ம்ம்..

    //ஆம் நண்பான்னு கூறுவதில் அர்த்தம் உண்டு , உங்களை போல என் நட்பு வட்டாரத்திலும் நடந்தது , அதன்பிறகு அது என்ன ஆனதுன்னு கூட தெரியலை, அது போல தான் உங்களுதும்….முடிஞ்ச எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க…nagacbe@gmail.com from http://www.muthamilmantram.com //

    எல்லார் வட்டத்திலும் ஒரு கிறுக்குப் பய சிக்குவானோ? :))

    முத்தமிழ்மன்றத்துக்கு வருகிறேன்…

    அன்புடன்,
    அருள்.

  28. அருட்பெருங்கோ Says:

    பிரதீப்,

    /அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்கிறதிலதாங்க ஆர்வம்.
    நல்ல தொடர்னு சொல்லக் கூடிய அளவு தெளிவான நடை, தேவையான சஸ்பென்ஸூன்னு பின்றீங்க. /

    ரொம்ப நன்றிங்க பிரதீப்…நடை இப்பத் தெளிவா இருக்கா?? ஆனா அப்போ ரொம்பக் குழம்பிப் போய் இருந்துச்சுங்க…

    அன்புடன்,
    அருள்.

  29. அருட்பெருங்கோ Says:

    தேவ்,

    /நாளைய பதிவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்:)
    /

    கண்டிப்பாக பதித்து விடுகிறேன்..

    பிரபுராஜா,

    /மிக நல்ல பதிவுகள். பகிர்ந்து கொள்வதற்கு நன்றி/

    உங்கக் கருத்தைப் பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றிங்க…

    அன்புடன்,
    அருள்.

  30. அருட்பெருங்கோ Says:

    செந்தழல் ரவி,

    /கவித கவித…
    /

    அபிராமி…அபிராமி..

    (உங்கப் பேர் கூட கவிதை மாதிரிதான் இருக்கு!!)

    நவீன்,

    /அமராவதி ஆற்றில் மிதந்தது எனது மனசு !! /

    புடிங்க..புடிங்க…யாராவதுத் தூக்கிட்டுப் போயிடப் போறாங்க :))

    அன்புடன்,
    அருள்.

  31. செயபால் Says:

    நல்லாப் போகுது ராசா கதை. உண்மைக் கதை என்பது இன்னொரு மெருகு.
    வாழ்த்துக்கள்.
    ஜெயபால்

  32. Anonymous Says:

    சூப்பருப்பு! பழைய நினைப்புத்தான் பேராண்டி பழைய நினைப்புத்தான்.

  33. சத்தியா Says:

    என்ன அருள்? ஒரு பெண்ணே தைரியமாக தன் மனதைத் திறந்து தன் காதலைச் சொல்லி விட்டாள். நீங்கள் நடுங்கிக் கொண்டு நிக்கிறீங்களே? ம்கூம்… இது நல்லாவே இல்ல அருள்.

    சரி கடைசியில் நீங்களும் காதலைச் சொன்னீங்களா?… இல்லையா?

    உங்கள் காதல் கதை அருமை அருள்.

  34. அருட்பெருங்கோ Says:

    சிவஞானம்,

    /ஆத்மார்த்தமான காதல் அவ்வளவு
    சுலபமா ஜெயிக்காதே!
    அடி எப்ப?அடுத்த இடுகையா அல்லது அதற்கும் அடுத்த இடுகையிலா?
    ஆஸ்பிடலா? இல்லே வென்னீர் ஒத்தடமா?
    /

    என்னங்க முடிவே பண்ணிட்டீங்களா? அப்படியெல்லாம் எதுவும் நடக்கல…

    ஜெயபால்,

    /நல்லாப் போகுது ராசா கதை. உண்மைக் கதை என்பது இன்னொரு மெருகு.
    வாழ்த்துக்கள்.
    ஜெயபால்

    /

    நன்றி ஜேயபால்..
    முழுக்க முழுக்க உண்மைனு சொல்ல முடியாதுங்க..ஆனாலும்…சரி விடுங்க.. :))

    அன்புடன்,
    அருள்.

    அன்புடன்,
    அருள்.

  35. அருட்பெருங்கோ Says:

    அனானி,

    /சூப்பருப்பு! பழைய நினைப்புத்தான் பேராண்டி பழைய நினைப்புத்தான். /

    ஆமாங்க பழைய நெனப்புதான்..

    அது சரி து.பருப்பு, உ.பருப்பு கேள்விப்பட்டிருக்கேன் அது என்னங்க சூப்பருப்பு?? :))

    அன்புடன்,
    அருள்.

  36. அருட்பெருங்கோ Says:

    சத்தியா,

    /என்ன அருள்? ஒரு பெண்ணே தைரியமாக தன் மனதைத் திறந்து தன் காதலைச் சொல்லி விட்டாள். நீங்கள் நடுங்கிக் கொண்டு நிக்கிறீங்களே? ம்கூம்… இது நல்லாவே இல்ல அருள். /

    அது என்னங்க பெண்ணே அப்படினு ஒரு ‘ஏ’காரம்?

    /சரி கடைசியில் நீங்களும் காதலைச் சொன்னீங்களா?… இல்லையா?/

    இல்லீங்களே :(

    /உங்கள் காதல் கதை அருமை அருள்./

    கதையாக மட்டுமேப் பாருங்கள்!!

    அன்புடன்,
    அருள்.

Leave a Reply