இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி
16. நெஞ்சொடு கிளத்தல்
காதல் நோய்க்கு
காரணம் யாரெனக் கேட்டால்
உன்னைக் காட்டியது…
மருந்து என்னவென்று கேட்டாலும்
உன்னையேக் காட்டுகிறது
உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது
இந்த மனமும்!
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து.
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?
உன்னை எதிர்பார்த்து,
காற்றிருக்கும் வரை
காத்திருக்கும்…
இந்த மனம்!
காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
என் கவிதைகள்
எதனையும் வாசிக்காமல்
உன்னையே யாசித்துக் கொண்டிருக்கிறது
என் காதல்!
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?
தங்களை விட்டுவிட்டு
உன்னோடு போய்விட்டதாம்…
மனதிடம் சண்டையிடுகின்றன
கண்கள்!
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.
‘உன்’ , ‘என்’ என்பன போய்
‘நம்’ ஆனதால்…
உன்னையே நம்மையே
நினைத்திருக்கிறது என் நம் மனம்!
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?
உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபங்களும்
உன் புன்னகையைப் பார்த்ததும்
மன்னிப்போடு மண்டியிடுகின்றன!
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?
இந்த மனமும்
உன்னைப் பற்றியே
புலம்பிக் கொண்டிருந்தால்…
என்னைப் பற்றி
நான் யாரிடம் புலம்ப?
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.
“பிரிந்து விட்டாள்”, “பிரிந்து விட்டாள்” என்று புலம்பிக் கொண்டே
உன் பின்னேப் போய்க் கொண்டிருக்கிறதே இந்த இதயம்…
இனியெப்படி நான் வாழ்வது?
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.
உன்னைத் தொலைத்து விட்டு,
இப்போது உன்னைத் தேடியே
நானும் தொலைந்து போகிறேன்.
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?
என் எடையும்
உன் எடைக்கு சமமாகி விட்டது!
மனதில் உன்னை சுமக்கும் போதும்…
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.
இது காதல் பூக்கும் மாதம் - 170
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
February 17th, 2007 at 10:21 am
//அவள்
தெருவில்
வந்து விட்டு
போனாள்..
ராமர்
பாதம் பட்ட
அகலிகையாய்
விழுந்து கிடந்த
எல்லாம்
மலராய்
மலர்ந்து நிற்கிறது..
இப்படி காதல் காலத்தில் உங்கள் பதிவு பக்கமெல்லாம் காதல் முளைத்து நிற்கிறதே..
கலக்குங்க அருட்பெருங்கோ, கவிதைகள் எல்லாம் சுவைத்து கிடக்கிறது..
February 18th, 2007 at 7:55 am
அருட்பெருங்கோ: நீங்கள் காதல்ரசம் சொட்டும் ஒரு காதல்கிறுக்கன் தானே! ;-). நான் நிறைய உங்கள் பதிவுகளை பின்னூட்டம் இடாமல் ரகசியகமாகப் படிப்பவன்!
February 18th, 2007 at 10:31 pm
வாங்க மு.கா.
/இப்படி காதல் காலத்தில் உங்கள் பதிவு பக்கமெல்லாம் காதல் முளைத்து நிற்கிறதே..
கலக்குங்க அருட்பெருங்கோ, கவிதைகள் எல்லாம் சுவைத்து கிடக்கிறது../
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க…
மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் இருக்கே… எழுதித்தானே ஆகனும்?
February 19th, 2007 at 5:53 am
வாங்க செல்லா,
/அருட்பெருங்கோ: நீங்கள் காதல்ரசம் சொட்டும் ஒரு காதல்கிறுக்கன் தானே! ;-). /
நான் சும்மா கிறுக்கறேன்னு சொன்னதுக்காகவா இது??? ம்ஹும்…
/நான் நிறைய உங்கள் பதிவுகளை பின்னூட்டம் இடாமல் ரகசியகமாகப் படிப்பவன்!/
ஓ ரகசிய வாசகரா நீங்க?