|
Dec
14
|

குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயின் கரத்தைப் போல வஞ்சி மாநகரை அணைத்துக் கொண்டு செல்கிறது – வரலாற்றில் ஆண் பொருணை என வருணிக்கப்பட்ட – அமராவதி ஆறு. ஆடி மாதத்தின் ஒரு மாலைப் பொழுதில் வஞ்சியில் இருந்து புறப்பட்ட நமது பேருந்து அமராவதி ஆற்றைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.பழங்காலத்தில் சேர மன்னர்கள் சோணாடு சென்ற ராஜபாட்டை இதுவாகத் தான் இருக்குமோ? நாமறியோம்! இதோ சாலைக்கு வலப்புறத்தில் தெரிகிறதே இது என்ன? பத்தடி உயரத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மன்னர்களின் கோட்டை மதில் சுவர் போல இருக்கிறதே! உள்ளே பிரம்மாண்டமாகத் தெரிகிறதே அது சேர மன்னனின் அயுதக் கொத்தளமா? ஆ மேலே புகைப் போக்கிகள் போலத் தெரிகிறதே!வெற்றி வாகை சூடிய மன்னனை வரவேற்கக் காத்திருக்கும் யானைகளைப் போல சாலையின் இரு பக்கமும் நான்கு காத தூரத்துக்கு வரிசையாக நிற்கின்றனவே – சரக்கு வண்டிகள். ம். இப்போதுதான் தெரிகிறது.இது புலியூர் செட்டிநாடு பூசுமண் தொழிற்கூடமல்லவா!
இப்போது பேருந்து செல்கின்ற சாலைக்கு இணையாக இடப்புறத்தில் வந்து கொண்டிருக்கிறது இருப்புப்பாதை.அதையும் தாண்டி வடக்கேப் பார்த்தால் தெரிவது பசுமை! பசுமை!பசுமை! பொன்னியாற்றின் நீரால் பாசனம் பெறும் கிராமங்களில் உள்ள வாழைத்தோப்புக்களும், தென்னந்தோப்புக்களுமே பசுமைக்குக் காரணம். இப்போது சாலையின் வலப்புறத்தில் மறுபடியும் நாம் பார்ப்பது புலியூரில் பார்த்தது போன்ற அதேக் கட்டமைப்பு. இவை என்ன? மன்னர்களின் அரண்மனைகளில் உள்ள சுரங்கப்பாதைகளைப் போல இத்தனைக் குழாய்கள். ஓ! பேருந்து மாயனூருக்கு வந்து விட்டதா? இது தமிழ்நாடு குழாய்த் தயாரிப்புத் தொழிற்சாலை அல்லவா?
பேருந்தின் இரைச்சல் ஒலியையும் மீறி ஏதோ சல சல வென ஓர் ஓசைக் கேட்கிறதே இது என்ன? ஆகா! வடக்கில் இருந்து இரு வாய்க்கால்கள் சாலைக்கு அடியேப் புகுந்து தெற்கே வந்து இதோ சாலைக்கு இணையாக கிழக்கு நோக்கி செல்கின்றன! அந்த வாய்க்கால்களில் புரண்டோடும் தண்ணீர் எழுப்பிய ஓசை தானா அது?அந்த வாய்க்கால்கள் பொன்னியாற்றில் இருந்து தெற்கில் உள்ள ஊர்களுக்காகப் பிரிக்கப் பட்டவையாயிருக்கும். பேருந்து கிழக்கு நோக்கி செல்ல செல்ல வாய்க்கால்களுக்கும் சாலைக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
பேருந்து இப்போது கிருட்டிணராயபுரம், மகாதானபுரம் ஆகிய சிற்றூர்களைத் தாண்டி வந்து நின்று விட்டது.இப்போது பேருந்தின் இரு பக்கமும் மக்களின் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! வாழைப்பழங்களையும், மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்களையும் கையில் வைத்துக் கொண்டு பயணிகளிடம் வியாபாரம் செய்வோரைக் காண முடிகிறது.ஒவ்வொருப் பேருந்திலும் பத்துப் பதினைந்து பேர் சன்னலில் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.எதற்காக பேருந்து நிற்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள் பேருந்தில் இருந்து இறங்கி சற்று தூரம் காலாற நடந்து வரலாம்.நமது பேருந்துக்கு முன் இத்தனைப் பேருந்துகளும், சரக்கு வண்டிகளும், மகிழ்வுந்துகளும் காத்திருக்கின்றனவா?இன்னும் முன்னே சென்று பார்ப்போம். கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்த சாலை இப்போது வடக்கு நோக்கி வளைகிறது.அது என்ன சாலைக்கு நடுவேத் தடுப்பு போடப்பட்டிருக்கிறது? ம் . இதுதானா செய்தி ! இதுவரை நாம் வந்த சாலைக்கு இணையாக இடப்புறத்தில் வந்து கொண்டிருந்த இருப்புப்பாதையை,பேருந்து செல்லும் சாலை இங்கே குறுக்கிடுகிறது.அதனால் தான் இருப்புப்பாதையில் தொடர்வண்டி வரும் நேரங்களில் சாலைப் போக்குவரத்துத் தடுக்கப்படுகிறது. அந்த சமயங்களில் பயணிகளிடம் பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்த சிறு வியாபாரிகள்.
தூரத்தில் போருக்கு அழைக்கும் சங்கொலியைப் பொல ஒரு சத்தம் கேட்கிறது – அது தொடர்வண்டியாகத்தான் இருக்கும், வாருங்கள் நாம் மீண்டும் பேருந்தில் ஏறிக் கொள்வோம். தொடர்வண்டிப் போனப் பிறகு போக்குவரத்து திறந்துவிடப்படுகிறது. பேருந்து மெல்ல ஊர்ந்து இருப்புப்பாதையைக் கடந்து வடக்கே செல்கிறது. நாம் இப்போது மீண்டும் ஒரு வாய்க்காலைக் கடக்கிறோம். பேருந்து உடனே மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது. நமக்கு இடப்புறம் நாம் பார்ப்பது என்ன – ஏரியா? கடலா? சமுத்திரமா? வெறும் நீர்ப்பரப்பாகத் தெரிகிறதே! நீரின் ஓட்டத்தைப் பார்த்தபின் தான் புரிகிறது – இது தான் பொன்னியாறு.ஆடி மாதம் ஆதலால் பொன்னிப் பெருக்கெடுத்து ஓடுகிறாள்.
அப்படியே மெதுவாகத் திரும்பி நமக்கு வலப்புறம் பார்க்கிறோம். அட வாய்க்காலே ஓர் ஆற்றைப் போல் அல்லவா ஓடிக்கொண்டு இருக்கிறது.வாய்க்காலில் ஒரு பக்கக் கரையில் சிறுவர்களும் பெரியவர்களும் குளித்துக் கொண்டு இருக்கும் காட்சியைக் காண்கிறோம். பெரியவர்கள் உழைத்தக் களைப்பில் நீராடுவதை அவர்களின் நிதானமானக் குளியலில் காண முடிகிறது. ஆனால் சிறுவர்கள் அப்படி அல்ல – அவர்கள் துள்ளி விளையாடுவதையும், பாலத்தில் இருந்து வாய்க்காலில் குதித்து நீந்துவதையும் பார்க்கிறோம். அப்படியே வாய்க்காலின் அடுத்தக் கரைக்கு நம் பார்வையை செலுத்தினால் அங்கு பெண்கள் குளிப்பதையும், துணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பதையும் காண்கிறோம் அதற்கு மேலும் அங்கு பார்வையை செலுத்துவது பண்பாடில்லை ஆதலால் அந்தக் கரையைத் தாண்டி பார்க்கிறோம் – அங்கே இருப்புப்பாதை ஓடிக்கொண்டிருக்கிறது.
இதென்ன மன்னனை வாழ்த்தும் மக்களின் பேரொலி போல ஒரு சத்தம்.பேருந்தின் வேகமும் குறைகிறதே.சாலையில் மக்கள் கூட்டம் ஒன்று ஆற்றில் குளித்த ஈரத்துடன் வந்து கொண்டிருக்கிறது. தமிழரின் இசை வாத்தியமானப் பறை எழுப்பும் ஒலி நமது நரம்புகளைக் கூட முறுக்கேற்றுகிறதே! சன்னலில் எட்டிப் பார்ப்போம்! ஓ! ஆடிப் பெருக்கின்போது கிராமத்தில் இருக்கும் தம் குலதெய்வங்களை பொன்னியாற்றுக்குக் கொண்டு வந்து குளிப்பாட்டி எடுத்துச் செல்வது பொன்னியாற்றின் கரையோரக் கிராம மக்களின் வழக்கம்.இதுவும் அப்படியான ஒரு கிராம மக்களின் குலதெய்வத் திருவிழாதான் போலும்! சாமி சிலைகளை தலையில் தூக்கி வந்துகொண்டிருப்பவரிடம் எத்தனை மகிழ்ச்சி – சாமியை அவரேத் தொட்டுக் குளிப்பாட்டித் தூக்கி வருவது மகிழக்கூடியதுதான் – இல்லையா?. மக்கள் அனைவரும் தத்தம் குலதெய்வப் பாடலைப் பாடியபடி செல்கின்றனர். ஆற்றுக்குள் எட்டிப் பார்த்தால் இதுமாதிரியான குலதெய்வ திருவிழா ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. சரி பொன்னி ஆற்றின் மறு கரையில் ஏதோ நகருவது போலத் தெரிகிறதே அது என்ன? ஆம் நமது சாலையைப் போலவே பொன்னி ஆற்றின் மறுகரையை ஒட்டி ஒரு சாலை செல்கிறது – அது நாமக்கல்லையும் முசிறியையும் இணைக்கும் சாலை. அதற்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு அதற்குப் பெயர் வடகரை வாய்க்கால். நமக்கு வலப்புறம் ஓடுவது தென்கரை வாய்க்கால்.
இதோ மீண்டும் சங்கொலி போன்ற அந்த சத்தம் கேட்கிறது! தொடர் வண்டி தான் வருகிறது போல, நாம் சற்று திரும்பி வலப்பக்கம் பார்ப்போம். ஆமாம் தொடர்வண்டி சீராப்பள்ளியிலிருந்து வஞ்சி நோக்கிச் செல்கிறது நமக்கு எதிர்த் திசையில்! பேருந்திலிருந்தும் தொடர்வண்டியில் இருந்தும் வாய்க்காலில் இருந்தும் சிறுவர்களும் இளைஞர்களும் கைகளை ஆட்டி சிரிக்கிறார்கள். சில குறும்புக்கார இளைஞர்கள் விசிலடித்து சத்தம் எழுப்புகின்றனர். நாம் அப்படியே கருப்பூர் முருகன் கோயிலையும், பல சிற்றூர்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கையில் நமக்கு வலப்புறம் வந்து கொண்டிருந்த வாய்க்கால் திடீரென சாலைக்கடியேப் புகுந்து நமக்கு இடப்புறமாக வர ஆரம்பிக்கிறது.பொன்னியாறும் நம் கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இருந்து விலகி செல்கிறது.வாய்க்காலுக்கும் ஆற்றுக்கும் இடையே நாம் பல தென்னந்தோப்புகளையும், வாழைத்தோப்புகளையும் காண்கிறோம்.வாய்க்காலில் நீர்ப்பரப்பை ஒட்டி வளைந்திருக்கும் மரக்கிளைகளில் சிறுவர்கள் தொங்கிக்கொண்டு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே நாம் குளித்தலைக்கு வந்து சேர்கிறோம். குளித்தலை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர் – அதை சொல்லாமல் சென்றால் இரசிகர்கள் கோவித்துக் கொள்வார்கள் – கலைஞர் முதன் முதலாகப் போட்டியிட்டு வென்ற சட்டமன்றத் தொகுதிதான் இந்தக் குளித்தலை.இப்போது சைவர்கள் அப்படியே மூக்கைப் பிடித்துக் கொள்ளவும் – வாய்க்காலை ஒட்டி மீன் விற்பனை நடக்கிறதல்லவா? மீன் வாசம்/வாடை பேருந்துக்குள்ளும் வீசுகிறது.குளித்தலைக்குள் நாம் நுழைவதற்கு முன்பே ஒரு சாலை வடக்கேப் பிரிகிறது – அது குளித்தலையையும் , முசிறியையும் இணைக்கும் பாலத்துக்குச் செல்லும் சாலை. பொன்னியாற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள பாலங்களிலேயே அகலமானப் பாலம் இதுவாய்த்தானிருக்கும்.
நாம் குளித்தலையைத் தாண்டி சிறுகமணி , பெருகமணி என பல ஊர்களைக் கடந்து போய்க்கொண்டுஇருக்கிறோம்…சாலை ஓரங்களில் இப்போது நாம் பார்க்கும் பேருந்துகள் வித்தியாசமாய்த் தெரிகின்றனவே! அதில் உள்ள மக்களும் இந்த ஊர் மக்கள் போல் தெரியவில்லையே! மக்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பதைப் பார்த்தால் இது முக்கொம்பாக இருக்குமோ? ஆம்..இது முக்கொம்பேதான்…பொன்னியாற்றில் இருந்து கொள்ளிடமாறு பிரியும் இடமான இந்த முக்கொம்பைப் பார்க்க பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருக்கிறார்கள்.அதுவும் ஆடி மாதம் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரி நாம் இன்னொரு நாள் சாவகாசமாக உள்ளே நுழைந்து பார்ப்போம்.இப்போது சீராப்பள்ளி நோக்கி நமது பயணத்தைத் தொடருவோம்.
பத்தாண்டுகளுக்கு முன் ஏரியாகவும், குளமாகவும் இருந்த இடங்களில் இப்போது தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போலத் தெரிகிறதே – இவைதான் அடுக்குமாடி குடியிருப்புகளா? சாலை மேட்டிலும் வீடுகள் பள்ளத்திலும் இருப்பதைப் பார்க்கிறோம். கண்ணுக்குப் பசுமை மறைந்து ஒருவித தூசிப்படலம் தெரிய ஆரம்பிக்கிறது. இதுவரை பேருந்தின் இரைச்சல் மட்டுமேக் கேட்டு வந்த நமக்கு வெளியே இருந்தும் பல இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. நாம் சொல்லாமலேயே இரசிகர்கள் யூகித்திருப்பார்கள் – நாம் சீராப்பள்ளி வந்துவிட்டதை. நாம் பேருந்தை விட்டு இறங்கும் இந்த இடந்தான் சத்திரம் பேருந்து நிலையம். நாம் நமது பயணத்தில் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது – பிரிதொறு பயணத்தில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
( (அ)ண்ணே! வடக்கப் போறவங்கல்லாம்…இங்ங்னயே நில்லுங்ணே பஸ்ஸு இங்ங்னயே வரும்……தெக்கப் போறவங்க சென்ட்ரலுக்குப் போய்டுங்ணே
(அ)க்கா! உங்ளுக்குந்தாங்க்கா சொல்றேன்! )
December 14th, 2005 at 6:23 am
+ தானுங்க….கரூர் திருச்சி ரோடு எனக்கு சின்ன வயசுல நெனவிருந்தது. பெரிய பாலம். அப்புறமா தாந்தோனிமலைக்குப் போகாம லெப்டு திரும்பி பசுபதிபாளையம் வழியாப் போகுமா! சரியா நெனவுல இல்ல. கொஞ்சம் சொல்லுங்களேன்.
December 14th, 2005 at 6:32 am
இராகவன் ரொம்ப சின்ன வயசுல வந்திருப்பீங்க போல…
திண்டுக்கல் போற பேருந்து தான் தாந்தோனிமலை வழியாப் போகும்…
திருச்சிப் போற பேருந்து எல்லாமே பசுபதிபாளையம் வழியாதான் போய்க்கிட்டு இருந்தது..
இப்ப காந்திகிராமம் வ்ழியா புறவழிச்சாலை போட்டாச்சு!
( உடனடி பின்னூட்டத்திற்கு நன்றிகள் )
December 14th, 2005 at 6:55 am
ஆமாம் அருட்பெருங்கோ..அது ஒரு பன்னிரண்டு வருடங்கள் இருக்கும். இப்போ நிறைய மாறியிருக்கனும். நானும் அதுக்கப்புறம் அந்தப் பக்கம் வரவேயில்லை. நல்ல ஊர். அப்போ நாங்க இருந்தது, கவர்மெண்ட் ஹாஸ்பிடல் பக்கத்துல இருந்த pwd quartersல. நல்ல பெரிய காம்பவுண்டு. மரங்கள்ளாம் நிறைய இருக்கும். இன்னும் அந்த ஊருல பல இடங்கள் நினைவுல இருக்கு.
December 15th, 2005 at 7:48 am
கவலைப் படாதீங்க இராகவன்!
வஞ்சி மாநகரப் பத்தி ஒரு தொடர்பதிவு போடலாம்னு இருக்கேன்!
கரூர்க்காரங்க யாராவது வலைப் பதியறீங்களா?
May 23rd, 2006 at 2:10 am
ஓஹோ! அந்த ஆற்றுக்கு பெயர் அமராவதியா?
திருச்சியில் இருந்து கோவைக்கு செல்லும் வழியில் குளித்தலை தாண்டியோ முன்னமோ சாலையை ஒட்டியே வரும். ஒரு ரெயில்வே கிராஸிங்கை கடக்கும் நிலையில் குட்டி அருவி போல அழகாய் படிப்படியாக நீர் பாய்ந்து கொண்டிருக்கும். நான் பயணித்த வரையில் (7 வருடங்கள் முன்பு வரை) நீர் வற்றி நான் பாரத்ததேயில்லை.
நினைவில் கொண்டு வந்ததற்கும் அமரவாதியை அறிந்து கொள்ளவும் முடிந்ததற்கு நன்றி!
May 23rd, 2006 at 2:41 am
70 ல் வாரம் ஒருமுறை அனுபவித்த
சுகத்தை மீண்டும் அனுபவித்தேன்.
நன்றி
May 23rd, 2006 at 3:38 am
//கரூர்க்காரங்க யாராவது வலைப் பதியறீங்களா?//
நானிருக்கிறேன் அருள்
)
May 23rd, 2006 at 4:46 am
/ஓஹோ! அந்த ஆற்றுக்கு பெயர் அமராவதியா?
/
ஐயையோ அது அமராவதி இல்லீங்க..அது காவிரி ஆறுங்க….
அந்த ரயில்வே கிராஸிங் இருக்கிற ஊர் பேர் லாலாப்பேட்டை..நான் சின்னப் பையனா இருந்த காலத்துல இருந்து அங்க மேம்பாலம் கட்ட திட்டம் தீட்டிக்கீட்டே இருக்காங்க…இன்னும் பாலம் தான் வரல…
அன்புடன்,
அருள்.
May 23rd, 2006 at 4:52 am
சிவஞானம்,
/70 ல் வாரம் ஒருமுறை அனுபவித்த
சுகத்தை மீண்டும் அனுபவித்தேன்.
நன்றி/
அப்போ இன்னும் ரொம்ப பசுமையா இருந்திருக்குமே!!!
வருக்கைக்கு நன்றி சிவஞானம்!
அன்புடன்,
அருள்.
May 23rd, 2006 at 4:54 am
அட அட அட…
திருச்சி மெயின்கார்டு கேட்டில் இருந்து முக்கொம்பு வரைக்கும் இடது பக்கம் கூடவே வரும் ரயில் பாதை, வலது பக்கம் கொஞ்ச நேரத்துல் வந்து சேரும் காவேரி ஆறு, அழகா முக்கொம்பு, பெட்டவாய்த்தலை.
இதைத் தாண்டியதும் கூடவே வரும் தளிர் நடை குளிர் ஆறு…. சுற்றிலும் பசுமை, அங்கங்கே வந்து போகும் கிராமங்கள்! நல்லாத்தான்யா நினைவு படுத்தினீங்க…
கண்கோடி வேண்டும். நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு கூட பஸ்களில் ஓரம்ப்ளேஸ் கேட்டு வம்படித்தது இந்த ரூட்டில்தான்.
+ குத்து போட்டாச்சுங்கோவ்.
May 23rd, 2006 at 4:55 am
வாங்க நவீன் பிரகாஷ்,
வலைப்பதிவுலகத்துல எங்க வஞ்சி சிங்கங்களப் பார்க்காமப் போயிடுவமோனு நெனச்சேன்…
உங்களக் கண்டுக்கிட்டேன்..
அன்புடன்,
அருள்.
May 23rd, 2006 at 5:47 am
பிரதீப்,
//திருச்சி மெயின்கார்டு கேட்டில் இருந்து முக்கொம்பு வரைக்கும் இடது பக்கம் கூடவே வரும் ரயில் பாதை, வலது பக்கம் கொஞ்ச நேரத்துல் வந்து சேரும் காவேரி ஆறு, அழகா முக்கொம்பு, பெட்டவாய்த்தலை.
இதைத் தாண்டியதும் கூடவே வரும் தளிர் நடை குளிர் ஆறு…. சுற்றிலும் பசுமை, அங்கங்கே வந்து போகும் கிராமங்கள்! நல்லாத்தான்யா நினைவு படுத்தினீங்க…
கண்கோடி வேண்டும். நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு கூட பஸ்களில் ஓரம்ப்ளேஸ் கேட்டு வம்படித்தது இந்த ரூட்டில்தான்//
நீங்களே சுருக்கமா அழகா சொல்லிட்டீங்க…இப்பவும் அந்தப் பாதைல போறதுனா ஒரு சந்தோசந்தான்…
அன்புடன்,
அருள்.
May 23rd, 2006 at 6:03 am
May i come inside?!
நானும் கரூர்தான். பின்னே? தங்கச்சியோட புகுந்த வீடாச்சே! போட்டோவோட வர்றேன்!
May 13th, 2008 at 3:05 pm
ஏங்க அருள், அந்த பாலம் இப்போ கூட பிரச்சினை வந்ததுல.
நான் கூட அந்த வழியாத்தான் வருவேன் போவேன் என் வீட்டுக்கு (தரகம்பட்டிக்கு பக்கம் கருங்குளம்)
பதிவு நல்லா இருக்கு அருள்.
May 13th, 2008 at 3:14 pm
ராம்கி,
உங்களுக்கு பதில் சொல்ல கொஞ்சம் தாமதமாகிடுச்சு (சுமார் ரெண்டு வருசம்
)
அப்போ கரூருக்கு நீங்க தாய்மாமா
May 13th, 2008 at 3:16 pm
ரீகன்,
நீங்க தரகம்பட்டியா? அப்போ மத்திப்பட்டி, புனவாசிப்பட்டியெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே!
May 15th, 2008 at 11:14 am
மத்திப்பட்டி, புனவாசிப்பட்டியெல்லாம் தெரியும் அருள், கபடி விளையாட போனது. தரகம்பட்டில பிரிண்டிங் பிரஸ் வைச்சுறேந்தேன் (இப்போவும் இருக்கு) அதனால கடவூர் Union ஏரியா எல்லாம் தெரியும்.
May 15th, 2008 at 11:19 am
புனவாசிப்பட்டிதாம்ப்பா எங்க (அம்மாவோட) சொந்த ஊர்
May 16th, 2008 at 3:32 pm
hi siva,
naanum elutha arampichuruken…..paakalaam un alavuku mudiathu but enaku thonuratha eluthalam
thanks, because of your blog i started to write da.
regards
dhans
May 20th, 2008 at 1:56 pm
அப்படீங்களா அருள்,
நல்ல எழுதுறீங்க அருள் என்னோட நண்பன் கூட நல்லா எழுதுவான்.
கருங்குளம் GHSS – லதான் படிச்சோம். எனக்கும் கதை எழுதுறதுதான் புடிக்கும் ஒரு தடவ இந்த இம்சைனு ஒரு பொண்ணு எழுதுறதை பாத்தேன். (office-la வேலை இல்லாம போர் ஆயிடிச்சு அதனால google-la what is life? டைப் பண்ணி பாத்தேன். அதை படிகிறதுகே ஒரு லைப் வேணும் போல, அப்பறமா கன நேரத்தில் எனது மூளையில் யோசனை வந்தது என்னடா இம்சை யா வருதேனே அப்பறம் இம்சைனு டைப் பண்ணி பார்த்தா ப்லாக் உள்ளார தேட ஆரம்பிச்சுட்டேன். இம்சைக்கு ஒரு நன்றி) ரொம்ப நல்லா எழுதுறாங்க. நான் ஒரு multi media desiner. ஆனா ப்லாக் பண்ண தெரியல.
May 20th, 2008 at 1:58 pm
அப்பறம் அருட்பெருங்கோ ஆரம்பிச்சு மங்களூர் சிவாவரைக்கும் படிக்க ஆரம்பிச்சாச்சு.
February 6th, 2010 at 3:20 pm
hi arul anna,,
karur to trichy ponna madhiri irrukku…nanum lalapeti thaan theriyum nu ninikiren.. ippo ellam marriduthu…. membhalam vandhudhuthu…ponni riverla sand illa…roadu romba worst a irrukku..agriculture sari illa..romba kastama irrukku..adhanala than ellam karur kku work poranga,,,