இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி
15. உறுப்பு நலன் அழிதல்
வளையல் கழன்று விழுமளவுக்கு
இளைத்துப் போனதாய் சொல்கிறாய்
உன் வளையலில் நுழையுமளவுக்கு
நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
உன் அழகை அழிக்கிறது…
எனக்கு அழுகையை அளிக்கிறது…
நம் பிரிவு!
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.
உன்னை நினைத்தே
இளைத்துப் போகிறது உடல்…
உன்னால்தான் இளைக்கிறேனென உலகம் பேச
களைத்துப் போகிறது மனமும்!
தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து.
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.
என் வருத்தங்களை எல்லாம்
உன்னிடம் சொல்ல
வாய் வந்தால் மனம் தடுக்கிறது..
மனம் வந்தால் சொல் மறுக்கிறது!
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?
எல்லோருக்கும் முன்னும்
என் கைகோர்த்தே நடக்கிறாய்…
கூச்சத்தில் நானும் கைகளையெடுத்தால்
அழ ஆரம்பித்து விடுகிறாய்.
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.
காற்று கூட
நம்மைப் பிரிக்கப் பார்க்கிறதென அழுகிறாய்.
வா! காற்றில்லாத கனவுலகம் ஓடிப் போகலாம்!
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.
என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்
கண்ணீராய் வழிகிறாய்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.
இது காதல் பூக்கும் மாதம் - 160
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
February 15th, 2007 at 12:57 pm
//உன் வளையலில் நுழையுமளவுக்கு
நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?//
இது ஆனாலும் ரொம்ப ஓவர்!!
//என் வருத்தங்களை எல்லாம்
உன்னிடம் சொல்ல
வாய் வந்தால் மனம் தடுக்கிறது..
மனம் வந்தால் சொல் மறுக்கிறது!//
*எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது!*
//என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்
கண்ணீராய் வழிகிறாய்//
இது ரொம்ப அழுத்தமா இருக்கு. சொற்சிக்கனத்துடன்!
February 15th, 2007 at 10:07 pm
/ //உன் வளையலில் நுழையுமளவுக்கு
நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?//
இது ஆனாலும் ரொம்ப ஓவர்!!/
மோதிரத்தில் நுழௌயுமளவுக்கு என்று சொல்லியிருக்க வேண்டுமோ?
/
*எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது!*/
:-((
/
இது ரொம்ப அழுத்தமா இருக்கு. சொற்சிக்கனத்துடன்!/
வார்த்தையில் கஞ்சன் நல்ல கவிஞனாம்