Jan 13

பொங்கல் வாழ்த்து

வ‌ழக்க‍மாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.

காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் – ‘பொங்கல் வாழ்த்து’

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Jun 08

சென்னையில் இன்று நடந்த நீதிக்கான பேரணி, ஈழத்தின்/மனிதநேயத்தின்பால் அக்கறை கொண்ட பலரையும் ஒன்றிணைத்து, நீதிக்கான குரல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை ; அது இன்னும் உரக்க உரக்க ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்னும் செய்தியினை சமூகத்துக்கு மிகச்சிறப்பாக எடுத்துச்சொல்லியிருக்கின்றது.

banner-1.jpg banner-2.jpg

சென்னையில் மன்றோ சிலையருகில் துவங்கிய பேரணி ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நீதிக்கான முழக்கங்களோடு சேப்பாக்கம் நோக்கி நகர்ந்தது.

பேரணியில் குறிப்பிடும்படியான அளவில் பெண்களும் கலந்து கொண்டதோடு உணர்வோடு முழக்கமிட்டும் வந்ததைக் காண முடிந்தது.

தாங்கி வந்த பதாகைகளில் ஓன்றிலிருந்த வாசகம் – “Genocide in Srilanka | Offical Media Partner – The Hindu” பேரணி தி ஹிந்து நாளிதழ் அலுவலகத்தைக் கடந்த செல்கையில் ஹிந்து ராமுக்கு அர்ச்சனை பலமாக இருந்தது.

பேரணியாக மட்டுமில்லாமல், கடந்து சென்ற வாகனப்பயணிகள் அனைவரிடமும் முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோளின் நகல் விநியோகிக்கப்பட்டது.

பேரணியினர், சேப்பாக்கம் மைதானம் அருகே குழுமியதும், மக்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்த அய்யநாதன் மற்றும் அருட்தந்தை ஜெகத் கெஸ்பார் இருவரின் சிறிய உரைகளுடனும் பேரணி நிறைவடைந்தது.

ஈழத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த அவலங்களை அய்யநாதன் விளக்கிப்பேசினார்.

நாம் இனி செய்ய வேண்டிய பணிகளை  அருட்தந்தை ஜெகத் கெஸ்பார் பட்டியலிட்டார். அவருடைய உரையின் சுருக்கமான வடிவம் :

உலகின் பெரும்பாலான இன விடுதலைகள் சமூகத்தின் மிகச்சிறிய கூட்டமொன்றின் போராட்டத்திலிருந்தே துவங்கியிருக்கின்றன. அதனால் இந்த இளைஞர் கூட்டமும் அத்தகைய விதைநெல்லாக மாறவேண்டுமென வாழ்த்தினார்.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே அவரவர் அரசியல் நலன்களுக்குட்பட்டே ஈழப்பிரச்சினையினைக் கையாண்டதைக் கடுமையாக சாடியபோதும், தேர்தலுக்குப் பின்னர் அது அரசியல் அழுக்கில்லாத இளைஞர்களின் கையில் வந்துள்ளதை வரவேற்றார்.

ஈழ விடுதலைக்கான நான்கு கட்டப்போர்களும் யுத்தக்களத்தில் நடந்தது ; ஐந்தாம் கட்டப்போர் அரசியல் களத்தில் நடைபெறவேண்டும். யுத்தம் என்பது அரசியலின் மற்றொரு வடிவம் ; அரசியல் என்பது யுத்தத்தின் மற்றொரு வடிவம்!

இதுவரை இலங்கை நடத்திய இனப்படுகொலையினை முழுமையாய் வெளிக்கொணரவும், வதைமுகாம்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் வாழ்வுரிமையினை மீட்டுத்தரவும், சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள போராளிகளின் கால்களை ஊனமாக்கும் சிங்கள இனவெறியினைத் தடுத்து அனைத்துலக போர் விதிகளின்படி அவர்களின் உயிருக்கு உறுதியளிக்கவும் நோக்கியதாய் நமது போராட்டங்களை தொடர வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

உண்மை இலட்சியத்துக்கான போர் தோற்றாலும், அந்த இலட்சியத்தின் உண்மைத்தன்மை தோற்காதவரை, அப்போர் தோற்றுவிட்டதாய் எண்ணிவிடவேண்டியதில்லை என்று நம்பிக்கையளித்து நிறைவு செய்தார் அருட்தந்தை.

தங்களது ஞாயிறு மாலையினை உல்லாசம், திரைப்படம், ஓய்வுகளுக்கு தின்னக்கொடுத்துவிடாமல் ஒரு உன்னத நோக்கத்துக்கான போராட்டத்தில் செலவழித்த ஆயிரக்கணக்கான தகவல்நுட்பத்துறை இளைஞர்களின் உணர்வு அதனை உறுதி செய்தது.

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Feb 02

தமிழகத்தில் உயிரிழந்த அந்த இளைஞருக்காக நமது துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் அந்த உயிரிழப்பை வைத்து சுயநல அரசியல் செய்ய‍ வேண்டாம். இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது.

தமிழராய்ப் பிறந்த எல்லோருக்குமே இது மன உளைச்ச‍லையும், இப்ப‍டி மரணத்தின் மீது அரசியல் செய்யும் சுயநலவாதிகள் மீது தீரா வெறுப்பையுமே தோற்றுவிக்கும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

எனவே,
தீயாக உள்ள‍ம் கொண்ட அன்னைகளும்,
சமூக நிதி காத்த‍ அம்மாக்களும்,
தண்டம் தகரபாலுக்களும்,
ஞானசூனியசேகரன்களும்,
உல‌கத் தமிழ் னத்த‍லைவர்களும்,

இந்தியாவின் இணையற்ற‍ இளைஞர் கைப்புள்ள‍ “ராஜிவின்” மரணத்தை வைத்து இன்ன‍மும் இன அழிப்பு அரசியல் செய்ய‍ வேண்டாம்.

தமிழக காங்கிரஸ் தான் மண்ணையள்ளி தன் தலையில் போட்டுக்கொள்கிறதென்றால், அவர்கள் அள்ளிய மண்ணில் பாதியைப் பிடுங்கி தி.மு.க வும் தன் தலையில் போட்டுக்கொள்கிறது!

தமிழக அரசின் அண்மைய அறிவிப்புகள், எச்ச‍ரிக்கைகளைப் பார்த்து ஆற்றாமையில் புலம்ப மட்டும் தான் முடிகிறது :(

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி

2009 Tamil Ethnic Cleansing Index

Last Update: Monday, 02 Feb 2009, 02:14 GMT

படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

TAMILS KILLED                                                                                   487

படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

TAMILS CRITICALLY WOUNDED                                                   1895

வன்னியில் படுகொலை

TAMILS KILLED IN VANNI                                                                470

வன்னியில் படுகாயம்

TAMILS CRITICALLY WOUNDED IN VANNI                                  1891

வன்னிக்கு வெளியில் படுகொலை

TAMILS KILLED OUTSIDE OF VANNI                                              17

வன்னிக்கு வெளியில் படுகாயம்

TAMILS CRITICALLY WOUNDED OUTSIDE OF VANNI               4

வன்னிக்கு வெளியில் காணமல் போனோர்

ENFORCED TAMIL DISAPPEARANCES UNDER

AREAS OF SRI LANKAN OCCUPATION / ADMINISTRATION    15

சிறிலங்கா படைகளால் கைதானோர்

TAMILS ARRESTED BY SRI LANKAN L ARMED FORCES         216

written by அருட்பெருங்கோ \\ tags:

Dec 05

நீ கடந்த பாதையெங்கும்

சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்

உன் கூந்தல் உதிர்த்த‍வையா?

உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

 

உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

கொதிப்புடன் வருகிறது வெயில்.

வெயிலிலிருந்து உன்னைக் காக்க

மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.

இரண்டுக்கும் ப‌ய‌ந்து

உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

 

தொலைதூர பயணங்களில்

காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

செல்பேசி உரையாடல்களை

கனவின் அலைவரிசையில்

தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!

 

குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.

கண்ணுக்கு மையை

அதிகமாய் தீட்டிவிட்டாயோ?

 

செல்பேசியில் என‌து பேச்சு

இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.

இதயத்திலிருந்து வருவதால்

‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Nov 17

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

written by அருட்பெருங்கோ \\ tags: