Jun 08

சென்னையில் இன்று நடந்த நீதிக்கான பேரணி, ஈழத்தின்/மனிதநேயத்தின்பால் அக்கறை கொண்ட பலரையும் ஒன்றிணைத்து, நீதிக்கான குரல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை ; அது இன்னும் உரக்க உரக்க ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்னும் செய்தியினை சமூகத்துக்கு மிகச்சிறப்பாக எடுத்துச்சொல்லியிருக்கின்றது.

banner-1.jpg banner-2.jpg

சென்னையில் மன்றோ சிலையருகில் துவங்கிய பேரணி ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நீதிக்கான முழக்கங்களோடு சேப்பாக்கம் நோக்கி நகர்ந்தது.

பேரணியில் குறிப்பிடும்படியான அளவில் பெண்களும் கலந்து கொண்டதோடு உணர்வோடு முழக்கமிட்டும் வந்ததைக் காண முடிந்தது.

தாங்கி வந்த பதாகைகளில் ஓன்றிலிருந்த வாசகம் - “Genocide in Srilanka | Offical Media Partner - The Hindu” பேரணி தி ஹிந்து நாளிதழ் அலுவலகத்தைக் கடந்த செல்கையில் ஹிந்து ராமுக்கு அர்ச்சனை பலமாக இருந்தது.

பேரணியாக மட்டுமில்லாமல், கடந்து சென்ற வாகனப்பயணிகள் அனைவரிடமும் முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோளின் நகல் விநியோகிக்கப்பட்டது.

பேரணியினர், சேப்பாக்கம் மைதானம் அருகே குழுமியதும், மக்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்த அய்யநாதன் மற்றும் அருட்தந்தை ஜெகத் கெஸ்பார் இருவரின் சிறிய உரைகளுடனும் பேரணி நிறைவடைந்தது.

ஈழத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த அவலங்களை அய்யநாதன் விளக்கிப்பேசினார்.

நாம் இனி செய்ய வேண்டிய பணிகளை  அருட்தந்தை ஜெகத் கெஸ்பார் பட்டியலிட்டார். அவருடைய உரையின் சுருக்கமான வடிவம் :

உலகின் பெரும்பாலான இன விடுதலைகள் சமூகத்தின் மிகச்சிறிய கூட்டமொன்றின் போராட்டத்திலிருந்தே துவங்கியிருக்கின்றன. அதனால் இந்த இளைஞர் கூட்டமும் அத்தகைய விதைநெல்லாக மாறவேண்டுமென வாழ்த்தினார்.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே அவரவர் அரசியல் நலன்களுக்குட்பட்டே ஈழப்பிரச்சினையினைக் கையாண்டதைக் கடுமையாக சாடியபோதும், தேர்தலுக்குப் பின்னர் அது அரசியல் அழுக்கில்லாத இளைஞர்களின் கையில் வந்துள்ளதை வரவேற்றார்.

ஈழ விடுதலைக்கான நான்கு கட்டப்போர்களும் யுத்தக்களத்தில் நடந்தது ; ஐந்தாம் கட்டப்போர் அரசியல் களத்தில் நடைபெறவேண்டும். யுத்தம் என்பது அரசியலின் மற்றொரு வடிவம் ; அரசியல் என்பது யுத்தத்தின் மற்றொரு வடிவம்!

இதுவரை இலங்கை நடத்திய இனப்படுகொலையினை முழுமையாய் வெளிக்கொணரவும், வதைமுகாம்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் வாழ்வுரிமையினை மீட்டுத்தரவும், சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள போராளிகளின் கால்களை ஊனமாக்கும் சிங்கள இனவெறியினைத் தடுத்து அனைத்துலக போர் விதிகளின்படி அவர்களின் உயிருக்கு உறுதியளிக்கவும் நோக்கியதாய் நமது போராட்டங்களை தொடர வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

உண்மை இலட்சியத்துக்கான போர் தோற்றாலும், அந்த இலட்சியத்தின் உண்மைத்தன்மை தோற்காதவரை, அப்போர் தோற்றுவிட்டதாய் எண்ணிவிடவேண்டியதில்லை என்று நம்பிக்கையளித்து நிறைவு செய்தார் அருட்தந்தை.

தங்களது ஞாயிறு மாலையினை உல்லாசம், திரைப்படம், ஓய்வுகளுக்கு தின்னக்கொடுத்துவிடாமல் ஒரு உன்னத நோக்கத்துக்கான போராட்டத்தில் செலவழித்த ஆயிரக்கணக்கான தகவல்நுட்பத்துறை இளைஞர்களின் உணர்வு அதனை உறுதி செய்தது.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Feb 02

தமிழகத்தில் உயிரிழந்த அந்த இளைஞருக்காக நமது துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் அந்த உயிரிழப்பை வைத்து சுயநல அரசியல் செய்ய‍ வேண்டாம். இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது.

தமிழராய்ப் பிறந்த எல்லோருக்குமே இது மன உளைச்ச‍லையும், இப்ப‍டி மரணத்தின் மீது அரசியல் செய்யும் சுயநலவாதிகள் மீது தீரா வெறுப்பையுமே தோற்றுவிக்கும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

எனவே,
தீயாக உள்ள‍ம் கொண்ட அன்னைகளும்,
சமூக நிதி காத்த‍ அம்மாக்களும்,
தண்டம் தகரபாலுக்களும்,
ஞானசூனியசேகரன்களும்,
உல‌கத் தமிழ் னத்த‍லைவர்களும்,

இந்தியாவின் இணையற்ற‍ இளைஞர் கைப்புள்ள‍ “ராஜிவின்” மரணத்தை வைத்து இன்ன‍மும் இன அழிப்பு அரசியல் செய்ய‍ வேண்டாம்.

தமிழக காங்கிரஸ் தான் மண்ணையள்ளி தன் தலையில் போட்டுக்கொள்கிறதென்றால், அவர்கள் அள்ளிய மண்ணில் பாதியைப் பிடுங்கி தி.மு.க வும் தன் தலையில் போட்டுக்கொள்கிறது!

தமிழக அரசின் அண்மைய அறிவிப்புகள், எச்ச‍ரிக்கைகளைப் பார்த்து ஆற்றாமையில் புலம்ப மட்டும் தான் முடிகிறது :(

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி

2009 Tamil Ethnic Cleansing Index

Last Update: Monday, 02 Feb 2009, 02:14 GMT

படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

TAMILS KILLED                                                                                   487

படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

TAMILS CRITICALLY WOUNDED                                                   1895

வன்னியில் படுகொலை

TAMILS KILLED IN VANNI                                                                470

வன்னியில் படுகாயம்

TAMILS CRITICALLY WOUNDED IN VANNI                                  1891

வன்னிக்கு வெளியில் படுகொலை

TAMILS KILLED OUTSIDE OF VANNI                                              17

வன்னிக்கு வெளியில் படுகாயம்

TAMILS CRITICALLY WOUNDED OUTSIDE OF VANNI               4

வன்னிக்கு வெளியில் காணமல் போனோர்

ENFORCED TAMIL DISAPPEARANCES UNDER

AREAS OF SRI LANKAN OCCUPATION / ADMINISTRATION    15

சிறிலங்கா படைகளால் கைதானோர்

TAMILS ARRESTED BY SRI LANKAN L ARMED FORCES         216

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags:

Dec 05

நீ கடந்த பாதையெங்கும்

சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்

உன் கூந்தல் உதிர்த்த‍வையா?

உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

 

உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

கொதிப்புடன் வருகிறது வெயில்.

வெயிலிலிருந்து உன்னைக் காக்க

மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.

இரண்டுக்கும் ப‌ய‌ந்து

உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

 

தொலைதூர பயணங்களில்

காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

செல்பேசி உரையாடல்களை

கனவின் அலைவரிசையில்

தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!

 

குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.

கண்ணுக்கு மையை

அதிகமாய் தீட்டிவிட்டாயோ?

 

செல்பேசியில் என‌து பேச்சு

இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.

இதயத்திலிருந்து வருவதால்

‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Nov 17

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags:

Nov 14
war1_0.jpg war2.jpg

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags:

Oct 09

      பாரி படுகளம்

முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியரும், சென்னை கலைக்குழுவின் தலைவருமான பிரளயன் அவர்களின் இயக்கத்தில், நாடகத்துறை ஆசிரியர், மாணவர்களின் பங்களிப்புடன் உருப்பெற்ற பாரி படுகளம், பார்வையாளரை, வெறும் பார்வையாளராக மட்டுமே வைத்திருக்காமல் நாடகத்தின் காட்சி, உரையாடல், சொற்பயன்பாடுகளால் அவரையும் அதன் உள்ளே இழுத்துச் சென்று பொருள் தேடவைக்கிறது.

ங்கவை, சங்கவை என இரு மகள்களுக்குத் தந்தையான பாரி மன்னனும், அந்நாட்டு மக்களும் வளம்மிக்க பறம்பு மலையில் இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களின் நிலத்தையும், பெண்களையும் வலிந்து கைப்பற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வஞ்சகமாக சூழ்ச்சி செய்து இணைந்து போரிடுகிறார்கள். இறுதியில் மூவேந்தர்களின் அம்புகளை நெஞ்சிலேந்தி கபிலரிடம் நியாயம் கேட்டு புலம்பியபடி, படுகளத்தில் பாரி மன்னன் உயிர் துறப்பதுடன் நாடகம் முடிகிறது.

Get the Flash Player to see this player.

துவக்கத்தில் வரும் ஆண்களும் பெண்களுமாய் இணைந்து கலை மாந்தர்கள் கள்ளருந்தும் காட்சி, இன்றைக்கு ஆண்கள் மதுவருந்துவதை உடல்நலத்தீங்காகவும் பெண்கள் மதுவருந்துவதை மட்டும் பண்பாட்டுச்சீர்கேடாகவும் பார்க்கிற கண்களுக்கு சங்க காலப் பண்பாட்டை நினைவூட்டிச்செல்கிறது.

சோழ மன்னனின் ஒற்றனாக பறம்பு மலைக்கு வந்து, ஆதிரையெனும் வேளிர் குலப்பெண்ணிடம் காதல் கொண்டு விட்ட அஞ்சுதன் சாத்தன், தனது அலுவல் துறந்து அவள் காலைப்பிடித்து மன்றாடியபோதும் அயல்நாட்டு ஒற்றனின் காதலைவிட தாய்நாடு முக்கியமென உதறிச்செல்கிறாள் அவள். பிறகு சோழ மன்னனின் படையாட்களினால் கொலை செய்யப்பட்டு மடிகிறான் அஞ்சுதன் சாத்தன்.

ணிகம் செய்வதற்காக பாரியைக்காண யவன வணிகர்கள் வருகையில் அருகிலிருக்கும் அங்கவையும் சங்கவையும் விடைபெற்று எழும்போது அவர்களை அமரச்சொல்லி அரசு அலுவலில் பங்கெடுக்கச் சொல்கிறான் பாரி.(33% விழுக்காடு எப்பொழுது வரும்? ;)) வருகிற வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கு ஈடாக பறம்பு மலையில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து பாரி இப்படி கூறுகிறான் – ‘பறம்பு மலையில் இருக்கும் மக்கள் பறம்பு மலையின் எசமான்கள் அல்ல. இங்கிருக்கும் மரம், செடி, பறவை போல மனிதனும் மற்றுமோர் உயிர். எங்கள் நலனுக்காக இயற்கை வளங்களை அழிக்க முடியாது’ (தொழில் வளம் பெருக, வயல் நிலங்களையும், ஆற்று மணலையும் அள்ளிக்கொடுக்கும் அரசுகளைக் கண்டால் பாரி என்ன சொல்லுவான்?)

தன்பிறகும், மரம் கொடுத்தால் யவன நாட்டுப் பெண்கள் பாரியின் அந்தப்புரத்தை அலங்கரிப்பார்களென வணிகர்கள் சொல்ல, அதுவரைஅமையிதியாயிருந்த அங்கவை பொங்கியெழுகிறாள் – ‘பாரி மக்கள் நாங்கள் இருக்கும்போதே பெண்களை வணிகப்பொருளாக நினைத்துப்பேச என்னத் துணிச்சல்’ என கோபமாய்ச் சீறுகிறாள். அங்கவை, சங்கவை என்றதுமே ஒரு மட்டமான திரைப்பட நகைச்சுவைக் காட்சியை நினைவுக்கு கொண்டு வரும் அயோக்கியத்தனத்தை அனுமதித்த நாம் குறைந்தபட்சம் அந்த பெயர்களில் வாழ்ந்த வரலாற்று மாந்தர்களின் மாண்புகளைப் புரிந்து கொண்டால் நலம். அதற்கு இந்நாடகம் துணை நிற்கிறது.

ன்னொரு முக்கிய காட்சி நடுகல் வழிபாடு. நடுகல் வழிபாட்டில் பெண்களுக்கே முதல் உரிமை கொடுத்துக் கொண்டாடுகிறான் பாரி. இயற்கையையும், முன்னோர்களையும் வழிபடுகிற வீரவணக்கம் செலுத்துகிற மாவீரர்  நாளாக அதனை பாரி கூறுகிறான். இந்த சொற்பயன்பாடு இன்றைய ஈழப்போரில் மடிந்த போராளிகளை நினைவுகூர்கிற மாவீரர் நாளையே நினைவுபடுத்துகின்றது. சேர, சோழப் பாண்டிய நாடுகளின் கூட்டுப்படை (இதுவும் எங்கேயோ கேட்ட மாதிரியில்ல?) பாரியின் படையினைத் தோற்கடிக்க முடியாமல் திணறுகிற நேரம், மூவேந்தர்களின் ஆலோசனையில் நடக்கிற உரையாடல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ரு வேளிர்ப்படை வீரனைக் கொல்வதற்கு கூட்டுப்படையில் இருபது வீரர்களை இழக்க வேண்டியிருக்கிறதேயென சோழ மன்னன் புலம்ப, சேரன் கூறுகிறான் – ‘அடுத்த நாட்டு நிலத்தை கைப்பற்ற நினைக்கிற வீரனின் உறுதிக்கும் தாய்நாட்டு நிலத்தைப் பாதுகாக்கப் போரிடுகிற வீரனின் உறுதிக்கும் இயல்பிலேயே வேறுபாடு உண்டு’. பாண்டியனின் கூற்று –‘ நமது வீரர்கள் கூட்டுப்படைத்தளபதியின் கட்டளைப்படிதான் போரிடுகிறார்கள். வேளிர்ப்படை வீரர்களோ உரிமைக்காகப் போரிடுகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.’ இன்று வரை இனப்போராட்டங்கள் இப்படிதானே தொடர்கின்றன.

ந்தப் போரை நிறுத்துவதற்காக மூவேந்தர்களிடம் கபிலர் வேண்ட, பாரி, தங்களுக்கு கப்பம் கட்டியிருந்தாலோ, தங்களுக்கு கீழ் குறுநில மன்னனாக இருக்க ஒப்புக்கொண்டிருந்தாலோ, தன் மகள்களை மகட்கொடையாக அளித்திருந்தாலோ போரை நிறுத்தியிருக்கலாமென பெருங்குடி மனப்பான்மையுடன் கூறுகின்றனர். அப்பொழுது தமிழால் அனைவரும் ஒன்றுபடலாமென மூவேந்தர்களிடம் கபிலர் பேசுகிறார்.

பெருங்குடி மன்னர்களான எங்களையும் சிறுகுடி மன்னனான பாரியையும் ஒரே நிலையில் எப்படி வைத்துப்பார்க்க முடியுமென கேட்ட அவர்களின் குரல் தான் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் ஆதிக்க சாதியின் குரலாக உத்தப்புரத்திலும், பெரும்பான்மை மதத்தின் குரலாக ஒரிசாவிலும், ஆதிக்க இனத்தின் குரலாக இலங்கையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மிழ் பேசும் நமக்குள் பெருங்குடி, சிறுகுடியா? கெட்டது தமிழ்க்குடியென கபிலர் விடைபெறுகிறார். இன்றைக்கும் கபிலர்கள் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் பெருங்குடிகளின் மனம் தான் பல நூற்றாண்டுகளுக்கும் சேர்த்து இறுகிக்கிடக்கிறது.

Get the Flash Player to see this player.

மூவேந்தர்களின் கூட்டுப்படை போரைத்தொடங்கும்போதே பாரியை வீழ்த்தியபிறகு மூவருக்கும் என்னென்ன வேண்டுமென்று மூவேந்தர்களும் பங்கு பிரிக்க ஆலோசனை நடத்துவது இன்றைய அரசியல் கூட்டணி பேரங்களை ஞாபகப்படுத்துகிறது. பறம்பு நாட்டு பெண்ணொருத்தி வாளேந்திப்போரிடுவதும், இன்னொருத்தி ஆட்டுக்குட்டியைக் குழந்தையென மறைத்துக் காப்பாற்றத் துடிப்பதும் வேளிர்குல பெண்களின் இயல்புகளைக் காட்டும் காட்சிகள்.

டுகளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாரி மரணத்தின் விளிம்பிலிருந்து, ‘மானத்தோடு வாழ நினைத்ததும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உயர்நோக்கோடு வாழ்ந்ததும் தவறா?’ என்று கபிலரிடம் புலம்புகிறான். மூவேந்தர்களையும் தமிழால் ஒன்றிணைக்க தாம் முயன்று முடியாமல் போனதைச் சொல்லி கபிலரும் வருத்தப்படுகிறார். தமிழால் நாம் ஒன்றிணைய முடியாதென்றும், குடிபேதம் மறுத்த, குடிபேதம் பேணாத தமிழால் மட்டுமே நாம்  ஒன்றிணைய முடியுமெனச் சொல்லி மாண்டு போகிறான் பாரி. அத்துடன் நாடகமும் நிறைகிறது.

Get the Flash Player to see this player.

ரங்க அமைப்பு, உடை, ஒப்பனை, ஒளி, இசை, பாடல் என நுட்பமுறையில் பாரி படுகளம் மிகச்சிறப்பாகவே இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட கதைத்தேர்வும், உரையாடல்களும், காட்சிகளும் பாராட்டுதலுக்குரியவை. ஆனால் இவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில நடிகர்களின் நடிப்பு/மொழி உச்சரிப்பு இல்லாமலிருந்தது சிறு குறையாக தெரிந்தது. ( நாடகம் வெளியரங்கில் நிகழ்ந்ததும், சில நடிகர்கள் வேற்று மொழிக்காரர்களாக இருந்ததும் காரணமாக கொள்ளப்பட்டது.) அதே போல சில நீளமான பாடல்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடகம்.

            பிரளயன்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Oct 01

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Aug 07

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

*

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jul 31

மயூரேசன் அழைத்ததால்…

b - http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c - http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d - http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e - http://en.wikipedia.org உருப்படியா தேட
f -  http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க :)
g - http://www.google.com கண்டதையும் தேட
i - https://imo.in அலுவலகத்துல gmail, gtalk எல்லாம் தடை பண்ணிட்டதால gtalkல பேசறதுக்கான குறுக்குவழி. இன்னொரு வசதி GTalk, Yahoo Messenger எல்லாத் தொடர்புகளோடவும் ஒரே சமயத்துல, ஒரே விண்டோவுல இருந்தே பேசலாம்.
   http://indiaglitz.com தெலுங்குப் படம் பாக்கப் போறதுக்கு முன்னாடி இங்க தான் கதை படிச்சுட்டுப் போறது ;)
j - http://javapassion.com, http://java.sun.com கொலைவெறியோட நாலு மாசமா எனக்கு வாழ்வா ஜாவா போராட்டம் நடந்தது இங்கதான். நல்ல பலன் கிடைக்கும். கிடைச்சிருக்கு :) http://jeyamohan.in அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்.
k - http://keetru.com கதை, கவிதை, கட்டுரை இன்னும் பல
m - http://www.maatru.net தேர்ந்தெடுத்த பதிவுகள வாசிக்க…
n - http://www.newindpress.com மசாலா இல்லாத ஆங்கிலச் செய்திகளுக்கு!
p - http://www.puthinam.com ஈழச்செய்திகளுக்கு. தினமும் நான் திறக்கிற முதல் தளம் இதுதான்.
s - http://sramakrishnan.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
t - http://thamizmanam.com blogspot.com பதிவுகளும் அலுவலகத்துல தடை பண்ணிட்டதால தமிழ்மணத்தோட print friendly சேவைதான் ஒரே வழி.
v - http://vikatan.com வர வர உருப்படியா ஒன்னும் இல்ல. ஆனா பணம் கட்டிட்டேனே!

தொடரப் போகும் மூவர்:
1. ப்ரேம்குமார் 
2. எழில் 
3. Sri

Rule:

  1. The Tag name is A for Apple
  2. Give preference for regular sites
  3. Ignore your own blogs, sites.
  4. Tag 3 People.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags:

Jul 30

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது…’நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்’

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,