முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியரும், சென்னை கலைக்குழுவின் தலைவருமான பிரளயன் அவர்களின் இயக்கத்தில், நாடகத்துறை ஆசிரியர், மாணவர்களின் பங்களிப்புடன் உருப்பெற்ற பாரி படுகளம், பார்வையாளரை, வெறும் பார்வையாளராக மட்டுமே வைத்திருக்காமல் நாடகத்தின் காட்சி, உரையாடல், சொற்பயன்பாடுகளால் அவரையும் அதன் உள்ளே இழுத்துச் சென்று பொருள் தேடவைக்கிறது.
அங்கவை, சங்கவை என இரு மகள்களுக்குத் தந்தையான பாரி மன்னனும், அந்நாட்டு மக்களும் வளம்மிக்க பறம்பு மலையில் இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களின் நிலத்தையும், பெண்களையும் வலிந்து கைப்பற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வஞ்சகமாக சூழ்ச்சி செய்து இணைந்து போரிடுகிறார்கள். இறுதியில் மூவேந்தர்களின் அம்புகளை நெஞ்சிலேந்தி கபிலரிடம் நியாயம் கேட்டு புலம்பியபடி, படுகளத்தில் பாரி மன்னன் உயிர் துறப்பதுடன் நாடகம் முடிகிறது.
Get the Flash Player to see this player.
துவக்கத்தில் வரும் ஆண்களும் பெண்களுமாய் இணைந்து கலை மாந்தர்கள் கள்ளருந்தும் காட்சி, இன்றைக்கு ஆண்கள் மதுவருந்துவதை உடல்நலத்தீங்காகவும் பெண்கள் மதுவருந்துவதை மட்டும் பண்பாட்டுச்சீர்கேடாகவும் பார்க்கிற கண்களுக்கு சங்க காலப் பண்பாட்டை நினைவூட்டிச்செல்கிறது.
சோழ மன்னனின் ஒற்றனாக பறம்பு மலைக்கு வந்து, ஆதிரையெனும் வேளிர் குலப்பெண்ணிடம் காதல் கொண்டு விட்ட அஞ்சுதன் சாத்தன், தனது அலுவல் துறந்து அவள் காலைப்பிடித்து மன்றாடியபோதும் அயல்நாட்டு ஒற்றனின் காதலைவிட தாய்நாடு முக்கியமென உதறிச்செல்கிறாள் அவள். பிறகு சோழ மன்னனின் படையாட்களினால் கொலை செய்யப்பட்டு மடிகிறான் அஞ்சுதன் சாத்தன்.
வணிகம் செய்வதற்காக பாரியைக்காண யவன வணிகர்கள் வருகையில் அருகிலிருக்கும் அங்கவையும் சங்கவையும் விடைபெற்று எழும்போது அவர்களை அமரச்சொல்லி அரசு அலுவலில் பங்கெடுக்கச் சொல்கிறான் பாரி.(33% விழுக்காடு எப்பொழுது வரும்? ;)) வருகிற வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கு ஈடாக பறம்பு மலையில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து பாரி இப்படி கூறுகிறான் – ‘பறம்பு மலையில் இருக்கும் மக்கள் பறம்பு மலையின் எசமான்கள் அல்ல. இங்கிருக்கும் மரம், செடி, பறவை போல மனிதனும் மற்றுமோர் உயிர். எங்கள் நலனுக்காக இயற்கை வளங்களை அழிக்க முடியாது’ (தொழில் வளம் பெருக, வயல் நிலங்களையும், ஆற்று மணலையும் அள்ளிக்கொடுக்கும் அரசுகளைக் கண்டால் பாரி என்ன சொல்லுவான்?)
அதன்பிறகும், மரம் கொடுத்தால் யவன நாட்டுப் பெண்கள் பாரியின் அந்தப்புரத்தை அலங்கரிப்பார்களென வணிகர்கள் சொல்ல, அதுவரைஅமையிதியாயிருந்த அங்கவை பொங்கியெழுகிறாள் – ‘பாரி மக்கள் நாங்கள் இருக்கும்போதே பெண்களை வணிகப்பொருளாக நினைத்துப்பேச என்னத் துணிச்சல்’ என கோபமாய்ச் சீறுகிறாள். அங்கவை, சங்கவை என்றதுமே ஒரு மட்டமான திரைப்பட நகைச்சுவைக் காட்சியை நினைவுக்கு கொண்டு வரும் அயோக்கியத்தனத்தை அனுமதித்த நாம் குறைந்தபட்சம் அந்த பெயர்களில் வாழ்ந்த வரலாற்று மாந்தர்களின் மாண்புகளைப் புரிந்து கொண்டால் நலம். அதற்கு இந்நாடகம் துணை நிற்கிறது.
இன்னொரு முக்கிய காட்சி நடுகல் வழிபாடு. நடுகல் வழிபாட்டில் பெண்களுக்கே முதல் உரிமை கொடுத்துக் கொண்டாடுகிறான் பாரி. இயற்கையையும், முன்னோர்களையும் வழிபடுகிற வீரவணக்கம் செலுத்துகிற மாவீரர் நாளாக அதனை பாரி கூறுகிறான். இந்த சொற்பயன்பாடு இன்றைய ஈழப்போரில் மடிந்த போராளிகளை நினைவுகூர்கிற மாவீரர் நாளையே நினைவுபடுத்துகின்றது. சேர, சோழப் பாண்டிய நாடுகளின் கூட்டுப்படை (இதுவும் எங்கேயோ கேட்ட மாதிரியில்ல?) பாரியின் படையினைத் தோற்கடிக்க முடியாமல் திணறுகிற நேரம், மூவேந்தர்களின் ஆலோசனையில் நடக்கிற உரையாடல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஒரு வேளிர்ப்படை வீரனைக் கொல்வதற்கு கூட்டுப்படையில் இருபது வீரர்களை இழக்க வேண்டியிருக்கிறதேயென சோழ மன்னன் புலம்ப, சேரன் கூறுகிறான் – ‘அடுத்த நாட்டு நிலத்தை கைப்பற்ற நினைக்கிற வீரனின் உறுதிக்கும் தாய்நாட்டு நிலத்தைப் பாதுகாக்கப் போரிடுகிற வீரனின் உறுதிக்கும் இயல்பிலேயே வேறுபாடு உண்டு’. பாண்டியனின் கூற்று –‘ நமது வீரர்கள் கூட்டுப்படைத்தளபதியின் கட்டளைப்படிதான் போரிடுகிறார்கள். வேளிர்ப்படை வீரர்களோ உரிமைக்காகப் போரிடுகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.’ இன்று வரை இனப்போராட்டங்கள் இப்படிதானே தொடர்கின்றன.
அந்தப் போரை நிறுத்துவதற்காக மூவேந்தர்களிடம் கபிலர் வேண்ட, பாரி, தங்களுக்கு கப்பம் கட்டியிருந்தாலோ, தங்களுக்கு கீழ் குறுநில மன்னனாக இருக்க ஒப்புக்கொண்டிருந்தாலோ, தன் மகள்களை மகட்கொடையாக அளித்திருந்தாலோ போரை நிறுத்தியிருக்கலாமென பெருங்குடி மனப்பான்மையுடன் கூறுகின்றனர். அப்பொழுது தமிழால் அனைவரும் ஒன்றுபடலாமென மூவேந்தர்களிடம் கபிலர் பேசுகிறார்.
பெருங்குடி மன்னர்களான எங்களையும் சிறுகுடி மன்னனான பாரியையும் ஒரே நிலையில் எப்படி வைத்துப்பார்க்க முடியுமென கேட்ட அவர்களின் குரல் தான் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் ஆதிக்க சாதியின் குரலாக உத்தப்புரத்திலும், பெரும்பான்மை மதத்தின் குரலாக ஒரிசாவிலும், ஆதிக்க இனத்தின் குரலாக இலங்கையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் பேசும் நமக்குள் பெருங்குடி, சிறுகுடியா? கெட்டது தமிழ்க்குடியென கபிலர் விடைபெறுகிறார். இன்றைக்கும் கபிலர்கள் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் பெருங்குடிகளின் மனம் தான் பல நூற்றாண்டுகளுக்கும் சேர்த்து இறுகிக்கிடக்கிறது.
Get the Flash Player to see this player.
மூவேந்தர்களின் கூட்டுப்படை போரைத்தொடங்கும்போதே பாரியை வீழ்த்தியபிறகு மூவருக்கும் என்னென்ன வேண்டுமென்று மூவேந்தர்களும் பங்கு பிரிக்க ஆலோசனை நடத்துவது இன்றைய அரசியல் கூட்டணி பேரங்களை ஞாபகப்படுத்துகிறது. பறம்பு நாட்டு பெண்ணொருத்தி வாளேந்திப்போரிடுவதும், இன்னொருத்தி ஆட்டுக்குட்டியைக் குழந்தையென மறைத்துக் காப்பாற்றத் துடிப்பதும் வேளிர்குல பெண்களின் இயல்புகளைக் காட்டும் காட்சிகள்.
படுகளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாரி மரணத்தின் விளிம்பிலிருந்து, ‘மானத்தோடு வாழ நினைத்ததும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உயர்நோக்கோடு வாழ்ந்ததும் தவறா?’ என்று கபிலரிடம் புலம்புகிறான். மூவேந்தர்களையும் தமிழால் ஒன்றிணைக்க தாம் முயன்று முடியாமல் போனதைச் சொல்லி கபிலரும் வருத்தப்படுகிறார். தமிழால் நாம் ஒன்றிணைய முடியாதென்றும், குடிபேதம் மறுத்த, குடிபேதம் பேணாத தமிழால் மட்டுமே நாம் ஒன்றிணைய முடியுமெனச் சொல்லி மாண்டு போகிறான் பாரி. அத்துடன் நாடகமும் நிறைகிறது.
Get the Flash Player to see this player.
அரங்க அமைப்பு, உடை, ஒப்பனை, ஒளி, இசை, பாடல் என நுட்பமுறையில் பாரி படுகளம் மிகச்சிறப்பாகவே இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட கதைத்தேர்வும், உரையாடல்களும், காட்சிகளும் பாராட்டுதலுக்குரியவை. ஆனால் இவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில நடிகர்களின் நடிப்பு/மொழி உச்சரிப்பு இல்லாமலிருந்தது சிறு குறையாக தெரிந்தது. ( நாடகம் வெளியரங்கில் நிகழ்ந்ததும், சில நடிகர்கள் வேற்று மொழிக்காரர்களாக இருந்ததும் காரணமாக கொள்ளப்பட்டது.) அதே போல சில நீளமான பாடல்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடகம்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
written by அருட்பெருங்கோ
\\ tags: நாடகம், பாரி படுகளம், பிரளயன்
Recent Comments